Daily Archives: ஜனவரி 25, 2018

செல்வ களஞ்சியமே 10

பிரசவித்த பெண்ணின் சுகாதாரம்

சுகாதாரம் என்பது எல்லோருக்குமே அவசியம் என்றாலும் பெண்களுக்கு மிக மிக அவசியம். அதுவும் பிரசவித்த பெண்களுக்கு மிக மிக (எத்தனை மிக வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம்) ஏன் என்று கேட்பவர்களுக்கு:

ஒரு மிகப் பெரிய வேலையை உங்கள் உடம்பு செய்திருக்கிறது. பிள்ளைப்பேறு என்றால் சும்மாவா? எத்தனை உறுப்புகள் எத்தனை வேலை செய்திருக்கின்றன! எல்லாவற்றிற்கும் ஓய்வு தேவை. அதிகம் அலட்டிக் கொள்ளாதீர்கள். ஓய்வு, நல்ல சாப்பாடு, தூக்கம் இவை மூன்றினால் மட்டுமே உங்கள் உடல் பழைய நிலைக்குத் திரும்பும்.

பொதுவாக உடல் அசதியாக இருக்கும்; நோய் எதிர்ப்பு திறனும் கொஞ்சம் குறைவாகவே இருக்கும். இதனாலேயே சுகாதாரம் மிக மிக அவசியம்.

பிரசவித்த பெண்ணின் சுகாதாரக் குறைவினால் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போகலாம். உங்கள் ஆரோக்கியக் குறைவினால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது முடியாது போகும். அதனால் கவனம் அதிகம் தேவை.

இயற்கை முறையில் பிரசவம் ஆகியிருந்தால் இரண்டாம் நாளிலிருந்து குளிக்கலாம். மிதமான வெந்நீரில் குளிப்பது உடல்வலியையும் ஆயாசத்தையும் போக்கும். தலைக்கு குளிக்க வேண்டாம். ஜலதோஷம், ஜுரம் வராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். குளித்து முடித்து நன்றாக ஈரம் போகத் துடைத்துக் கொள்ள வேண்டும்.

தலையை நன்கு வாரிப் பின்னலிட்டுக் கொள்ள வேண்டும். கை கால்களில் நகங்களை வெட்டி விடவும். உங்கள் நகங்களை மட்டுமல்ல; குழந்தையின் கை, கால்களில் இருக்கும் நகங்களையும் வெட்டி விட வேண்டும். அதற்கென்றே நகம் வெட்டிகள் சின்னதாகக் கிடைக்கின்றன. குழந்தையை நீராட்டியவுடன் நகங்கள் மிருதுவாக இருக்கும். அப்போது சுலபமாக வெட்ட வரும். சிலர் கையாலேயே குழந்தையின் நகத்தை பிய்த்துவிடுவோம் என்பார்கள். இது ரொம்பவும் ஆபத்தானது. குழந்தையின் நகத்துடன் சதையும் பிய்ந்துவரும் ஆபத்து இருக்கிறது. குழந்தையினிடத்தில் நம் வீரதீரத்தையெல்லாம் காண்பிக்க வேண்டாம்.

ஒரு சின்ன பிளாஷ்பேக்: திருமணத்திற்கு முன் நான் ரொம்பவும் அக்கறை எடுத்துக் கொண்டு நகம் வளர்ப்பேன். அப்போதெல்லாம் நெயில் பாலிஷ்  வாங்கித் தரமாட்டார்கள். அதனால் எங்கிருந்தாவது மருதாணி கொண்டு வந்து நானே அரைத்து இட்டுக் கொள்ளுவேன். எனது விரல் நகங்கள் எப்போதுமே சிவப்பாக இருக்கும்! இடது கைக்கு நானே வைத்துக் கொள்ளுவேன். வலது கைக்கு வைக்கச் சொல்லி அம்மாவை ரொம்பவும் படுத்துவேன். ஒரு முறை அம்மா மிகவும் கோபித்துக் கொண்டு முடியாது என்று சொல்லிவிட்டாள். என்ன செய்வது? ஒரு பேப்பரில் முதலில் குப்பி குப்பியாகப் பண்ணி வைத்துக் கொண்டு அதை விரல்களில் மாட்டிக்கொண்டு இந்தக் கையாலும் அந்தக் கையாலும் சரி செய்து சரி செய்து…எப்படியோ இரண்டு கைகளுக்கும் நானே இட்டுக் கொண்டு விட்டேன். இன்றைக்கும் என் அம்மா இதைச் சொல்லி சொல்லி ஆச்சரியப் படுவாள்.

அப்படியெல்லாம் பார்த்துப் பார்த்து வளர்த்த நகங்களை குழந்தைக்காக வெட்டு என்று எங்கள் மருத்துவர் சொன்ன போது யோசிக்கவே இல்லை; வெட்டிவிட்டேன். அன்றிலிருந்து இன்று வரை மறுபடி நான் நகம் வளர்க்க ஆசைப்பட்டதே இல்லை. ஆனால் மருதாணி ஆசை….தொடருகிறது!

 

சரி, நம் விஷயத்திற்கு வருவோம்.

லூசான உள்ளாடைகள்/வெளியாடைகள்  அணியவும். வெயில் காலங்களில் நல்ல பருத்தி ஆடைகள் அவசியம் தேவை. குளிர் காலங்களில் இரண்டு மூன்று ஸ்வெட்டர்கள் வைத்துக் கொண்டு துவைத்துப் பயன்படுத்தவும். ஒரே ஸ்வெட்டர் தினமும் அணியவேண்டாம்.

பிரசவித்த சில நாட்களுக்கு அதிகப்படி சிறுநீர் வெளியேறுவது போல இருக்கும். கருவுற்றிருக்கும் போது உடலில் சேர்ந்திருந்த அதிகப்படியான நீரும் உப்பும் வெளியேறுவதுதான் இதற்குக் காரணம்.

சிலருக்கு பிரசவத்தின் போது தையல் போட்டிருந்தால் பிரசவம் ஆன சில நாட்களுக்கு சிறுநீர் மலம் கழிப்பது சற்று கஷ்டமாக இருக்கலாம். சுத்தமான நீர் நிறைய குடிப்பது சுலபமாக உடலிலிருந்து நீர் வெளியேற மிகவும் உதவியாக இருக்கும்.

 

பெண்களுக்கு சிறுநீர் பாதை தொற்று நோய் ஏற்படுவது அதிகம். காரணம் ஆசனவாயும், சிறுநீர் வெளிவரும் துவாரமும் அருகருகே அமைந்திருப்பது தான். சிறுநீர் பாதை தொற்று வராமலிருக்க நிறைய நீர் குடிக்க வேண்டும். மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க பழங்கள், காய்கறிகள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். சிறுநீர், மலம் கழிப்பதில் பிரச்னை வந்தாலும் சுகாதாரம் கெடும். நோய்த்தொற்று உண்டாகும்.

பிரசவித்த பெண்களுக்கு சிறுநீர் பாதை தொற்று நோய், மற்றும் வஜைனா (vagina) என்று சொல்லப்படும் கருப்பையிலிருந்து பிறப்புறுப்புக்குச் செல்லும் பாதையிலும் தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

சிலசமயங்களில்  குழந்தை பிறக்கும்போது பிறப்புறுப்பின் வாயை அகலமாக்க சற்று கத்தரிப்பார்கள். குழந்தை பிறந்தவுடன் அந்த இடத்தை தையல் போட்டு மூடிவிடுவார்கள். இந்த மாதிரி தையல் போட்டிருந்தால் குளிக்கும்போது அந்த இடத்தை நன்றாக நீர் ஊற்றி கழுவி சுத்தமான துணியால் / பேப்பர் நாப்கின்னால் நன்றாகத் துடைக்கவும். மேல்பூச்சாக ஏதாவது ஆயின்மென்ட் கொடுத்திருந்தால் தவறாமல் தடவவும். இது ரணம் சீக்கிரம் ஆற உதவும். தையல்கள் தானாகவே கரைந்து விடும்.

உள்ளுறுப்புகள் எப்போதும் உலர்ந்த நிலையில் இருப்பது மிகவும் அவசியம். உள்ளாடைகள் இறுக்கமில்லாமல் காற்றாட இருக்க வேண்டும். பருத்தியாலான ஆடைகள் அணிவது உத்தமம்.

பிரசவம் ஆன பிறகு இரண்டு அல்லது மூன்று வாரங்கள் வரை உதிரப் போக்கு இருக்கும். முதலில் சிவப்புக் நிறத்தில் இருக்கும் இந்த திரவம் போகப்போக பழுப்பு நிறமாகி, பின் வெளிர் மஞ்சள் நிறமாகி பின் வெள்ளை நிறமாகி தானாகவே  நின்றுவிடும். அப்படியில்லாமல் வலியுடன், கட்டி கட்டியான  உதிரப்போக்கு இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும்.

இதற்காக பயன்படுத்தும் சானிடரி நாப்கின்களை நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறையோ அல்லது தேவைக்கேற்பவோ அடிக்கடி மாற்றவும். ஒவ்வொருமுறை சிறுநீர் கழித்தவுடனும் உள்ளுறுப்புகளை நீரினால் நன்கு கழுவி மெல்ல ஒத்தி ஒத்தித் துடைக்கவும். டாம்பூன்ஸ் பயன்படுத்த வேண்டாம். உள்ளுறுப்புகளிலிருந்து துர்வாசனை வந்தால் மருத்துவரை அணுகவும்.

உள்ளுறுப்புகளை கழுவும்போது முன்னாலிருந்து நீர் விட்டுக் கழுவ வேண்டும். அதனால் மலத்துவாரத்திலிருந்து வரும் தொற்றுகள் சிறுநீர் பாதையை சென்று சேராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

குழந்தை பிறந்தபின் அடிவயிற்றில் பிசைவதுபோல் ஒரு வலி இருக்கும். இதைப் பற்றி கவலை வேண்டாம். கர்ப்பபை சுருங்குவதால் உண்டாகும் வலி இது. முதல் குழந்தைக்கு அவ்வளவாக இந்த வலி தெரியாது. இரண்டாவது பிரசவம் ஆன பின்பு இது அதிகம் தெரியும். இதனை ‘மண்குத்து வலி’ என்பார்கள்.

உங்கள் உடைகளைப் போலவே குழந்தையின் உடைகளும் தினமும் துவைத்து உலர்த்தி பயன்படுத்தப்பட வேண்டும். அதேபோலத்தான் நீங்கள் படுக்கும் கட்டில், படுக்கை, தலையணை எல்லாமே சுகாதாரத்தின் இருப்பிடமாக இருக்க வேண்டும். படுக்கை விரிப்புகள், தலையணை,  உறைகள், போர்வைகள் அடிக்கடி மாற்றப் படவேண்டும்.

குழந்தையை தொட்டிலில் விடுவதாயிருந்தால் அதில் போடும் துணிகள் மீது கவனம் தேவை. குழந்தையின் வாசனைக்கே எறும்புகள் வரும். குழந்தை பிறப்பதற்கு முன்பே வீட்டை துப்புரவு செய்வது அவசியம்.

குழந்தையின் சுகாதாரத்திற்கு என்றே ஒரு அத்தியாயம் எழுதவேண்டும். அடுத்த வாரம்……

செல்வ களஞ்சியமே 9

எனது உறவினரின் பெண்ணிற்கு குழந்தை பிறந்திருந்தது. உடனடியாக என்னால் போய் பார்க்க முடியவில்லை. சில மாதங்கள் கழித்துப் பார்க்கப் போன எனக்கு அந்தப் பெண்ணைப் பார்த்ததும் அதிர்ச்சி!

சரியாக வாராத தலை. அழுக்கான ஒரு நைட்டியுடன் அந்தப் பெண் காட்சி அளித்தாள். எங்களைப் பார்த்தவுடன் அவசரமாக ஓடிப் போய் அந்த அ. நைட்டியின் மேல் ஒரு துப்பட்டா(!?)வைப் போட்டுக் கொண்டு வந்தாள். (எதற்கு?)

‘குழந்தையுடனேயே நேரம் சரியாகி விடுகிறது.  எதற்குமே நேரமில்லை…!’

‘அப்படியா?’ என்றேன்.

‘குழந்தை பிறந்த பிறகு எல்லாமே மாறிவிட்டது மாமி. குழந்தை பிறப்பதற்கு முன் நான் எப்படி இருந்தேன் என்பதே மறந்துவிட்டது…. குழந்தை இல்லாத ஒரு வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை……!’

‘ஒரு டிரெஸ் கூட சரியான அளவில் இல்லை. குழந்தை பிறப்பதற்கு முன் போட்டுக் கொண்ட டிரெஸ்களையே இன்னும் போட்டுக் கொண்டிருக்கிறேன்…’

ஓ! அதுதான் இந்த நைட்டி இத்தனை அழுக்கா?

‘நான் என் குழந்தைக்கு ஒரு சிறந்த அம்மாவாக இருக்க வேண்டும். அவனைத் தவிர எனக்கு வேறு எதுவுமே தேவையில்லை இந்த உலகத்தில். அவனும் என்னையே எல்லாத்துக்கும் நம்பி இருக்கிறான்…! எனக்கு என்னைப் பற்றிய நினைப்பே இல்லை…!’

என் மடியில் இருந்த குழந்தை ‘ங்…ங….!’ சிரித்தது.

‘பாருங்கோ மாமி, அவனுக்கு நா பேசறதெல்லாம் புரியறது!’

‘அப்படியா? எனக்கு அவன் வேறெதுக்கோ சிரிக்கறாப்பல இருந்தது…!’

‘………..?!’

‘இப்படி உட்காரும்மா….’ அந்தப் பெண்ணை பக்கத்தில் உட்கார்த்தி வைத்துக் கொண்டேன்.

‘சிறந்த அம்மாவாக இருக்க வேண்டும் என்றால் தலையை வாரிக் கொள்ளக் கூடாது; நல்ல உடை உடுத்திக் கொள்ளக் கூடாது என்று எங்காவது எழுதி வைத்திருக்கிறதா?’

‘…………………………ஆனா மாமி…!’ ஆரம்பித்தவளை நான் தடுத்தேன்.

‘தன்னை சரியாகப் பரமாரித்துக் கொள்ளும் ஒரு பெண்ணால் தான் தன் குழந்தையையும் சரியான முறையில் வளர்க்க முடியும். நீ இப்படி இருப்பது உன்னால் வீட்டு வேலை, குழந்தை பராமரிப்பு இரண்டையும் சரியாகச் செய்ய முடியவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. நீ இப்படி இருந்தால்தான் குழந்தை சந்தோஷப்படும் என்று யார் சொன்னார்கள்? நீ இப்படி இருப்பது நிச்சயம் உன் குழந்தைக்கும், கணவனுக்கும் எந்த விதத்திலும் நிறைவைக் கொடுக்காது.’

‘குழந்தையை கவனிக்காமல் நீ உன் அலங்காரத்தில் கவனம் செலுத்த வேண்டும்ன்னு நான் சொல்லலை. ஆனாலும் உன் அடிப்படைத் தேவைகளைக் குறைத்துக் கொண்டுதான் குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது நீயே உனக்கு போட்டுக் கொள்ளும் முள் வேலி. இது  தேவையில்லாதது.’

நான் சிறந்த மகளாக இருக்க வேண்டும், சிறந்த மனைவியாக இருக்க வேண்டும், சிறந்த அம்மாவாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் நமக்கு நாமே போட்டுக் கொள்ளும் – தேவையில்லாத சங்கிலிகள். இவற்றால் நமக்கு மிஞ்சுவது ஏமாற்றமே.

ஒரு ஆணிடம் போய் ‘நீ அப்பாவாகிவிட்டாய். இனி உன் சந்தோஷத்தை யெல்லாம் குறைத்துக் கொள். சினிமா பார்ப்பதை விட்டுவிடவேண்டும்; நல்ல உடை அணியக்கூடாது; யாருடனும் சிரித்துப் பேசக்கூடாது,’ என்று சொல்லிப் பாருங்கள். ‘என்ன பைத்தியக்காரத்தனம் இது?’ என்பான்.

அதேபோலத்தான் பெண்களும் குழந்தை பிறந்தவுடன் தன் சுகத்தை எல்லாம் தியாகம் செய்ய வேண்டும் என்று எந்தச் சட்டமும் சொல்லவில்லை.

இதைபோல நிறைய பெண்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள். தியாகம் செய்கிறோம் என்ற பெயரில் தங்களுக்குத் தாங்களாகவே பல சங்கிலிகளைப் போட்டுக் கொண்டு வெளிவர முடியாமல் தவிக்கிறார்கள்.

எந்தப் பெண் எப்போதும் தன்னை நன்கு உணர்ந்து தன் உடல், மனம் இரண்டையும் ஆரோக்கியமாக வைத்துக் கொண்டு, நேர்மறையான எண்ணங்களுடன், தைரியமாக, தான் செய்யும் வேலைகளைப் பற்றிய குற்ற உணர்வு இல்லாமல், சந்தோஷமாக, நிறைவாக இருக்கிறாளோ அப்போது தான் அவள் சிறந்த மகளாக, மனைவியாக, அம்மாவாக விளங்க முடியும்.

செல்வ களஞ்சியமே படிக்கும் அனைத்து பெண்மணிகளுக்கும் மகளிர் தின வாழ்த்துகள்!

பி.கு. இன்றைக்கு மகளிர் தினம் என்பதால் மனதில் இருப்பதை எழுதிவிட்டேன். அடுத்த வாரம் வழக்கம்போல தொடருகிறேன்.