Tag Archives: மலாலா

நான் மலாலா – புத்தகம்

 

ஆழம் நவம்பர்  இதழில் வெளிவந்த என்னுடைய கட்டுரை

மலாலாவும் பிரிட்டிஷ் பத்திரிக்கையாளர் கிறிஸ்டினா லேம்ப் என்பவரும் இணைந்து எழுதிய ‘நான் மலாலா’ (உப தலைப்பு: கல்விக்காகக் குரல் கொடுத்து தாலிபன்களால் சுடப்பட்ட பெண்) அக்டோபர் 8 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டது. ‘இன்றுதான் புத்தகம் வெளியாகியுள்ளது. அதற்குள்  இதற்குக் கிடைத்திருக்கும் மக்களின் அமோக ஆதரவு ஆச்சரியப்பட வைக்கிறது’, என்கிறார் இஸ்லாமாபாத்தில் இருக்கும் மிஸ்டர் புக்ஸ் புத்தகக்கடையின் விற்பனையாளர். ‘நானும் ஒரு பெண்ணாக இருப்பதால், மலாலாவுக்கு என் ஆதரவு உண்டு. பெருமையும் புகழும் அந்தப் பெண்ணுக்குச் சேரட்டும்!’

லிட்டில் பிரவுன் அண்ட் கம்பெனி வெளியிட்டுள்ள இந்தப் புத்தகத்தை உடனே தடை செய் என்கிறது தாரிக் இ தாலிபான். மீறி வாங்குபவர்கள் கடுமையான பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கிறது. தடை செய்யப்பட்ட இந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஷாஹிதுல்லா ஷாஹித் கூறுவதைக் கவனியுங்கள். ‘மலாலா எந்த வீரச் செயலும் செய்யவில்லை; இஸ்லாமை மதச்சார்பின்மை என்ற பெயரில் பண்டமாற்று வியாபாரம் செய்துவிட்டாள். இதற்கு அவளுக்கு இஸ்லாமின் விரோதிகளிடமிருந்து விருது கிடைத்திருக்கிறது’. கூடவே ஒரு எச்சரிக்கை. ‘மலாலாவைக் கொல்வதற்கு இன்னொரு வாய்ப்புக் கிடைக்குமானால் நிச்சயம் தவறவிடமாட்டோம். அவள் எழுதிய புத்தகத்தை வாங்குபவர்களையும் நாங்கள் குறி வைப்போம்’ என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த எச்சரிக்கைக்குப் பலனும் கிடைத்திருக்கிறது. பெஷாவரில் உள்ள ஒரு பெரிய புத்தகக் கடை மலாலாவின் புத்தகத்தை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டது. ‘பலர் எங்களை தொலைபேசியில் அழைத்து இந்தப் புத்தகம் கிடைக்குமா என்று கேட்கிறார்கள். இதன் விநியோகிப்பாளர் யார் என்று தெரியாது என்று சொல்லிவிடுகிறோம்’ என்கிறார் புத்தகக் கடையின் சொந்தக்காரர்.

படிக்காத ஒரு அம்மாவுக்கும், பள்ளிக்கூடம் நடத்திக் கொண்டிருந்த ஒரு அப்பாவுக்கும் பிறந்தவள் மலாலா. தனது 11 வது வயதிலேயே ஸ்டீஃபன் ஹாகிங்ஸ் எழுதிய ‘எ ப்ரீப் ஸ்டோரி ஆப் டைம்’ என்ற புத்தகத்தை படித்தவள். கேட்பவரை மயக்கும் பேச்சு வல்லமை கொண்ட இந்தப் பெண் தனது வாழ்க்கையில் இன்னும் நிறைய சாதிப்பாள் என்பதில் சந்தேகம் இல்லை.

புத்தகத்திலிருந்து சில வரிகள்:

‘நடு இரவில் உதயமான நாட்டில் பிறந்தவள் நான். ஒரு நண்பகலில் கிட்டத்தட்ட இறந்து பிழைத்தவள்’

‘ஆண் குழந்தைகளைக் கொண்டாடும் சமூகத்தில் நான் பிறந்தபோது என் அம்மாவை எல்லோரும் ‘பெண் குழந்தையா?’ என்று துக்கம் விசாரித்தனர். என் அப்பாவை யாரும் வாழ்த்தவில்லை.’

‘நான் படிக்கும் புத்தகங்களில் வரும் காட்டேரிகள் போன்ற தாலிபன்கள் பெண்களின் பள்ளிக்கூடங்களை அழித்தனர். இசையையும், காணொளிகளையும் தடை செய்தனர். பழம் பெருமை வாய்ந்த புத்தர் சிலைகளை குண்டு போட்டு தகர்த்தனர். ஆனால் எதையும் புதிதாக உருவாக்கவில்லை’

‘என்னைச் சுடுவதன் மூலம் மக்களின் குரல்வளையை நெறித்து விடலாம்; யாரும் இதைப் பற்றிப்பேச மாட்டார்கள் என்று நினைத்தனர். இப்போது ஏன் என்னை சுட்டோம் என்று வருந்திக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.’