Tag Archives: மலைப்பாம்பு

பாம்பு – 2

 

சில இந்தியப் பாம்புகளைப் பற்றி சொல்வதற்கு முன் பாம்பின் உடலமைப்பில் உள்ள சில விசேஷங்கள் பற்றிக் கூற விரும்புகிறேன்.

உடலுருப்புகள்  பாம்பின் உடல் குறுகலாய் நீண்டு ஒரு கொடி போல இருப்பதால் அதன் உள் உருப்புகளும் மெலிந்து நீண்டு இருக்கும்.  மற்ற மிருகங்களைப் போல் அதன் நுரை ஈரல்கள் இராது.  ஒன்றுடன் ஒன்று இணைந்திராமல், வலது ஈரல் நீண்டு உடலின் பாதி தூரம் வரை செல்லும்.  இடது நுரை ஈரல் குட்டையானது.  சில பாம்புகளில் இது இல்லாமல் கூட இருக்கலாம்.  அல்லது மூன்றாவதாக மிகக் குட்டியான ஒரு நுரை ஈரலும் இருக்கலாம்.  இவ்வாறு நீண்ட நுரை ஈரலைக் கொண்டதால் தான் பாம்பு மூச்சு விடுவது மனிதனையோ மற்ற மிருகங்களையோ போல இரண்டு மூன்று வினாடிகளில் முடிந்து விடாமல் பெரியதோர் பலூனிலிருந்து காற்றை விடுவது போல புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்……….ஸென்று பல வினாடிகள் நீடிக்கின்றது.மூத்திரக் காய்கள் இரண்டு உண்டு.  ஆனால் ஒன்றன் பின் ஒன்றாய்.

 

ருசி பார்த்தல் பாம்பினால் செய்ய முடியாத ஒரு காரியம்.  காரணம் அதன் நாக்கு மணம் நுகர்வதர்க்காக மட்டுமே அமைக்கப்பட்ட ஒன்று.  அதனால் என்ன?  கண்ணால் பார்த்து மணம் நுகர்ந்தால் போதுமே தனக்குப் பிடித்த உணவினைக் கண்டு கொள்ள.

 

கீழ் வரும் படத்தினைப் பாருங்கள் பாம்பின் உடலுள் உருப்புகள் எவ்வாறு அமைந்துள்ளன என்று.

பாம்பு-2-பாம்பின் உடல் உறுப்புகள்

பாம்பின் உடல் உறுப்புகள்

பாம்பின் வாய்  பாம்பின் தாடைகள், நம் தாடைகளைப் போல் ஒன்றோடொன்று நிரந்தரமாக இணைக்கப் பட்டவை அல்ல.  தேவைப் படும் போது தாடை மூட்டுகள் கழன்று தாடைகளை வேண்டுமளவுக்கு விரித்துக் கொள்ள முடியும்.  அதனால் தான் பாம்பு தன் தலையை விட அதிக பருமனான இரையை கவ்வி விழுங்க முடிகிறது.

 

இனப் பெருக்கம்  மிருகங்களை முட்டை இட்டுக் குஞ்சு பொரிப்பவை, குட்டி போட்டு பால் கொடுப்பவை என இரு வகையாகப் பிரிப்பார்கள்.  ஆனால் பாம்புகளில் மூன்று வகை உண்டு.  முட்டை இட்டுக் குஞ்சு பொரிப்பவை, முட்டையை வயிற்றுக்குள் வைத்திருந்து அது குஞ்சாக வெளி வரும்போது வெளிக் கொணரும் பாம்புகள் மற்றும் வயிற்றுக் குள்ளேயே கருவினுக்கு முட்டையின் வெள்ளைக் கருவினாலும், தொப்புள் கொடி போன்றதொரு அமைப்பின் மூலம் தன் உடலிலிருந்தே உணவு கொடுத்தும் வளர்த்துப் பின் குட்டி வளர்ச்சி அடைந்ததும் வெளிக் கொணரும் பாம்புகள் என்பவை அவை.

 

பாம்பின் முட்டைகள் கோழி முட்டை போல கெட்டியான ஓடுகள் கொண்டவை அல்ல.  மெல்லிய தோல் போன்ற ஒன்றுதான் முட்டையின் சட்டை.

 

பல பாம்புகள், நல்ல பாம்பு உட்பட, முட்டை இட்டபின் அவற்றைப் பற்றிக் கவலைப் படுவதில்லை.  ராஜ நாகம் முட்டைகளை கூடு அமைத்து அதில் இடும்.  மலப்பாம்பு சுமார் முப்பது முதல் நூறு முட்டைகள் வரை இட்டு அவற்றை ஒன்றாகச் சேர்த்து தன் உடலால் சுருட்டி இறுக்க அணைத்துக் கொண்டு அடை காக்கும்.

 

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... தொந்திரவு பண்ணாதீங்க

“உஸ்ஸ்ஸ்ஸ்………தொந்திரவு பண்ணாதீங்க. நான் அடை காத்துகிட்டு இருக்கேன்.”

பாம்புகள் குளிர் ரத்தப் பிராணிகள் என்று சொல்வார்கள்.  அதாவது அவற்றின் உடல் உஷ்ணம் நம் உடல்கள் போல ஒரே நிலையில் இருக்காது.  வெளியெ என்ன உஷ்ணமோ அதே நிலையில் இருக்கும்.  ஆனால் அடை காக்கும் மலைப் பாம்பு தன் உடலின் உஷ்ணத்தை முட்டைகள் குஞ்சுகளாக மாறத் தேவையான உஷ்ண நிலையான 88 முதல் 90 டிகிரி ஃபேரன்ஹீட் வரையான நிலையில் வைத்துக் கொள்கிறது.  எப்படித் தெரியுமா?  தன் உடலில் உள்ள தசைகளை இறுக்கி விரிப்பதன் மூலம் இந்த வேலையைச் செய்கிறது மலைப் பாம்பு.

 

விரியன் பாம்புகள் குட்டி போடும் இனம்.

தென் அமெரிக்கப்  பாம்புகளான பச்சை அனகொண்டாவும் போ கன்ஸ்ட்ரிக்டாரும் வயிற்றுக் குள்ளேயே முட்டையியனை வைத்து முட்டைக்குள் இருக்கும் கருவிற்கு, முட்டைக்குள் கருவினைச் சுற்றி இருக்கும் பதார்த்தம் மூலமாகவும், தன் உடலில் இருந்தே தொப்புள் கொடி போன்ற உருப்பின் வழியேயும் உணவளித்து பின் கரு குட்டியாக வளர்ச்சி அடைந்தவுடன் அதை வெளிக் கொணரும்.

 

பாம்பு-2-பச்சை அனகொண்டா

பச்சை அனகொண்டா

 

பாம்பு-2-போ கன்ஸ்ட்ரிக்டார்

போ கன்ஸ்ட்ரிக்டார்

பாம்புகள் புணருதல்  நல்ல பாம்பும் சாரைப் பாம்பும் புணர்ந்துதான் பின் நல்ல பாம்புகள் முட்டை இடுகின்றன என்று சிலர் சொல்வார்கள்.  இது ஒரு தவறான கருத்து.  ஒரே இனப் பாம்புகள் தான் புணர்ந்து இனப் பெருக்கம் செய்கின்றன.

 

கீரியும் பாம்பும் : பாம்பின் ஜன்ம விரோதி கீரிப் பிள்ளை.  கீரியின் உணவு பாம்பு.  கீரி பாம்புடன் இயற்கைச் சூழலில் சண்டை போடுவது பார்க்க வேண்டிய ஒன்று.  கீரி தன் அடர்ந்த ரோமங்களை சிலிர்த்துக் கொண்டு தன் உருவத்தினை இரு மடங்குக்குமேல் ஆக்கிக் கொள்ளும்.  பின் பாம்பின் பாதி உடலைப் பிடித்துக் கவ்வுவது போல் பாசாங்கு செய்யும்.  பாம்பு அதனைக் கொத்த வரும்போது தன் தலையைத் திருப்பிக் கொண்டு விடும்.  பாம்பு தன் கண்ணுக்கு உடலெனத் தெரியும் கீரியின் ரோமங்களைத் தாக்கும்.  ஆனால் அதன் விஷப் பற்கள் கீரியின் உடலைத் தாக்காது.  ரோமங்களைத் தான் தாக்கும்.  இப்படியே பல முறை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாகச் சுற்றிச் சுற்றி வந்து கீரி பாம்பினைக் களைப்படையச்செய்யும்.  பாம்பு முற்றிலுமாகக் களைத்திருக்கும் போது கீரி அதன் தலைக்கு சற்று கீழே கவ்விக் கடிக்கும்.  பாம்பின் உயிர் போனபின் மெல்ல மெல்லத் தலையைத் தவிற மற்ற பாகங்களைத் தின்று விடும்.

 

பாம்பு கீரி சண்டை-www.pixgallery.in

பாம்பின் எதிரி கீரி

 

பாம்பின் ஊணவு எலி, பல்லி, பறவைகள், சிறிய  விலங்குகள்.  அது சரி.  பாம்பு யாருக்கு உணவு?  கழுகு, கருடன், கீரி இவற்றுக்கு மட்டும் தானா?

 

இல்லை.  பாம்பு மனிதனுக்கும் உணவு.  கிழக்காசிய நாடுகளில் பலருக்கு பாம்பு மிகப் பிடித்த உணவு.  தலையை வெட்டி விட்டால் பாம்பு ஒரு மாமிசப் புடலங்காய்தானே?

 

பாம்பின் ரத்தத்தைக் குடித்தால் ஆணின் வீரியம் அதிகரிக்கும் என நம்புவோரும் உள்ளனர் கிழக்காசியாவில், அதுவும் பாம்பு உயிருடன் இருக்கும்போதெ அதன் உடலில் இருந்து எடுக்கப் படும் ரத்தம்!

 

“கொடிய விஷமுள்ள பாம்பு எது, விஷமற்ற பாம்பு எது என்று கண்டு பிடிக்க முடியுமா?” என்றால் முடியும் பாம்பின் தலையைப் பார்த்துக் கண்டு பிடிக்கலாம்.

 

பாம்பு-2-விஷப் பாம்பைக் கண்டறிதல்

விஷப் பாம்பைக் கண்டறிதல்

 

1. விஷமற்ற பாம்பின் கண்களின் பாப்பா வட்ட வடிவில் இருக்கும்.  விஷமுள்ள பாம்புகளின் கண்களில் இது நடுவில் சற்றே அகன்று மேலிருந்து கீழாக இரு கோடுகள் போலிருக்கும்.

 

  1. விஷமற்ற பாம்பின் மேல் தாடையில் கண்களுக்குக் கீழாக செதிள்கள் ஒரு வரிசைதான் இருக்கும்.  விஷமுள்ள பாம்பிற்கு இங்கு இரண்டு மூன்று வரிசைகள் செதிள்கள் காணப்படும்.

 

  1. விஷப் பாம்பின் மேல் தாடையில் நாசித் துவாரங்களின் பக்க வாட்டில் சிறிய பள்ளம் இருக்கும்.

 

ஆனால் ஒன்று.  பாம்பு நாம் பார்ப்பதற்காக தலையைக் காட்டிக் கொண்டு அமைதியாக உட்கார்ந்து கொண்டு இருக்க வேண்டுமே! அதற்கு என்ன செய்ய?

 

பாம்பு ஒருவரைக் கடித்துவிட்டால் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை அடுத்த கட்டுரையில் பார்க்கலாமா?

 

(தொடரும்)                                           கல்பட்டு நடராஜன்

 

பாம்பு முதல்பகுதி 

பாம்பு …!

இந்தப் பதிவு நான் எழுதியது அல்ல. வல்லமை குழும நண்பர் திரு கல்பட்டு நடராஜன் அவர்கள் எழுதியது. அவரது முன் அனுமதியுடன் அவரது பதிவுகளை வாங்கி இங்கு பதிகிறேன்.

நன்றி நடராஜன் ஸார்!

இதை எனது ஐம்பதாவது பதிவாக பதிவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

 

பாம்பு – 1

பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு கேட்டது, “கருடா சௌக்யமா? என்று

“அவரவர் இடத்தில் இருந்தால் எல்லோரும் சௌக்யமே”, என்றே கருடன் சொன்னது.

 

சரி பாம்பின் இடம், அதான் வீடு, எது என்றால் புற்றென்றுதான் எல்லோரும் சொல்வார்கள்.  “அது என்ன பாம்பு தானாகக் கட்டிகொண்ட வீடா?அல்லது வாடகை வீடா?” என்றால் இரண்டும் இல்லை.  பலவந்தமாக ஆக்கிரமித்துக் கொண்ட வீடு அது.

 

புற்று என்பது கறையான்கள் தாம் வாழக்கட்டிக்கொண்ட வீடு.  அந்தப் புற்றுகளுக்குள்ளோ அல்லது எலி வளைகளுக்குள்ளோ புகும் பாம்புகள் வீட்டு சொந்தக் காரர்களைத் தன் உணவாக்கிக் கொண்டு மிக மிக சௌகரியமாகக் குடும்பம் நடத்தும்.வீட்டைக் கட்டியது நாங்கள். குடி வந்தவரோ கூசாமல் தின்கிறார் எங்களை என்கின்றனவோ இந்தக் கரையான்கள்?

பாம்பு-1-புற்று

எலிகளின் கதையும் இதேதான்.  பாம்புகளுக்கு மிகவும் பிடித்த உணவு எலிகளும் தவளைகளும்.

நம் நாட்டில் உற்பத்தியாகும் தானியங்களில் சுமார் 20 முதல் 25 சத விகித வரையான தானியங்களைத் தின்று தீர்ப்பது எலிகள் என்கின்றனர் நிபுணர்கள்.  அந்த எலிகளின் வளைகளைத் தங்கள் வீடுகளாக்கிக் கொண்டு, எலிகளை உணவாக்கிக் கொண்டு, அவற்றின் பெருக்கத்தைக் கட்டுக்குள் வைப்பது பாம்புகள்.  இப்போது சொல்லுங்கள் பாம்புகள் நம் நண்பர்களா இல்லையா என்று.

 

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள்.  ஆனால் எல்லாப் பாம்புகளுமே உயிர் கொல்லும் விஷம் கொண்டவை அல்ல.  ஆனால் எவை கடித்தால் உயிருக்கு ஆபத்து, எவை கடித்தால் ஆபத்து இல்லை என்று எப்படித் தெரியும்?  அதனால் தான் பாம்பைக் கண்டவுடன் அதை அடித்துக் கொன்று விடுகிறார்கள் பலரும்.

 

பாம்பு தானாகச் சென்று யாரையும் கடிப்பதில்லை.  நாம் அதைத் துன்புறுத்தினாலோ அல்லது தப்பிப் போய் மிதித்து விட்டாலோ தான் அது நம்மைக் கடிக்கும்.

 

அன்டார்டிகா கண்டத்தைத் தவிற மற்ற எல்லாக் கண்டங்களிலும் பாம்புகள் உள்ளன. பாம்புகளில் கிட்டத்தட்ட சுமார் 3000 வகையான பாம்புகள் உள்ளன. இவற்றுள் சுமார் 534 வகைப் பாம்புகளே மிகக் கொடிய விஷம் கொண்டவை.

 

இந்த மூவாயிரம் வகையான பாம்புகளில் பத்தே சென்டி மீடர் நீளத்தில் மண் புழு போன்றிருக்கும் செய்யான் பாம்பிலிருந்து (Leptotyphlops carlae)  அனகொண்டா என்ற 7.5 மீடர் பாம்பு, மற்றும் 9.0 மீடர் நீளமுள்ள மலைப் பாம்பு வரை உள்ளன.  பல ஆண்டுகளுக்கு முன் 15 மீடர் நீளம் வரை உள்ள பாம்புகள் (Titanoboa cerrejonensis) கூட இருந்தனவாம்.செய்யான் பாம்பிற்குக் கண் பார்வை கிடையாதாம்.

பாம்பு-1-செய்யான் பாம்பு

இந்த செய்யான் பாம்பு மேற்கிந்தியத் தீவுகளில் ஒன்றான பார்படாஸில் மட்டுமே காணப்படுகிறது எனச் சொல்கின்றனர் பாம்பு பற்றி அறிந்தோர்.  ஆனால் இந்தப் பாம்பை நான் பல முறை பார்த்திருக்கிறேன் நம் ஊர்களிலும்.  இது எந்த அளவுக்கு நாம் நம்மைச் சுற்றி உள்ளவை பற்றிக் குறிப்புகள் எடுத்து வைக்கிறோம்,  அவற்றைப் பற்றி ஆராய்ச்சிகள் செய்கிறோம் என்பதைக் காட்டுகிறது.

 

மிகச் சிறிய பாம்பினைப் பார்த்தோம்.  மிகப் பெரிய பாம்பைப் பார்க்க வேண்டாம்?  அதுதான் மலைப் பாம்பு,  சுமார் 9 மீடர் நீளம் வரை வளரக் கூடியது.

 

மலைப் பாம்பின் உணவு பறவைகள் மற்றும் சிறிய மிருகங்கள் ஆகும்.  வாயினால் கவ்விப் பிடித்த இரையினை தன் உடலால் சுற்றி வளைத்துப் பின்னர் தனது தசைகளை இறுக்கிக் கொண்டே போய் அவற்றின் உயிரை எடுத்து விடும்.  அந்த இறுக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பது அனுபவித்துப் பார்த்தால் தான் தெரியும்.

பாம்பு-1-மலைப் பாம்பு

மலைப்பாம்பு அதன் உயிருக்கு ஆபத்து என்று வந்தாலொழிய தரையில் மெதுவாகத்தான் ஊர்ந்து செல்லும்.  மரத்தின் மீதும் ஏறும்.  தண்ணீரில் நன்றாக நீந்திச் செல்லும்.வயிறு புடைக்க உண்ட பின் சில நாட்கள் பட்டினி கிடக்கும் உண்ட இரையின் உடல் அளவு பொருத்து.  ஒரு பாம்பு இரண்டு வருடம் வரை பட்டினி கிடந்ததாகக் கூடக் குறிப்பில் உள்ளது.

 

கட்டுரை என எழுதும்போது “நான்” வருவது தவிற்கப் பட வேண்டிய ஒன்று.  ஆனால் இது படித்துப் பட்டம் பெருவதற்காக எழுதும் கட்டுரை அல்ல.  பாம்பைப் பற்றி ஒரு நிபுணர் எழுதப் போகும் கட்டுரையும் அல்ல.  பாம்பைப் பற்றி ஒரு பாமரன் எழுதப் போகும் கட்டுரை.  ஆகவே நடுவில் “நான்” நுழைவதை நீங்கள் மன்னித்துக் கொள்ளத் தான் வேண்டும்.

 

திருச்சியில் சிங்காரத்தோப்பு என்று ஒரு இடம்.  அதில் உள்ள வீடுகள் எல்லாம் கிருஸ்துவர்களாக மாறிய முன்னாள் அந்தணர்கள் வீடுகள்.  அவர்கள் வீட்டில் பேசுவது  அக்ரகாரத் தமிழில்.  ஆடிக்கழைப்பது, தீபாவளி கொண்டாடுவது, தாலி கட்டிக் கொள்வது என எல்லாம் உண்டு.  ஆனால் பொட்டு வைத்துக் கொள்ள மாட்டார்கள்.  சர்ச்சுக்குப் போவார்கள். அவர்களில் ஒருவர் கலஞ்சென்ற தம்பு ஐயர்.

 

தம்பு ஐயர் ஒரு பிராணிகள் விரும்பி.  அவர் வீட்டில் ஒரு நரி, ஒரு குரங்கு, ஒரு முதலை, கீரிப் பிள்ளைகள், சில முயல்கள், சில பாம்புகள், கிளி, காடை, கௌதாரி என்று பறவைகள் என ஒரு குட்டி மிருகச் சாலையே  வைத்திருந்தார். குறவர்கள் அவரது நண்பர்கள்.  தங்கு தடையின்றி விலங்குகளுக்கு ஆகாரம் வர வேண்டுமே அதற்காகத்தான்.

 

அவரது பொக்கிஷங்களை பார்த்துக் கொண்டு வரும்பு போது பாம்புகள் வைத்திருக்கும் இடத்திற்கு வந்தேன்.  “பாம்பிற்கு என்ன உணவளிப்பீர்கள்? எப்படி அளிப்பீர்கள்?” என்று நான் கேட்க அவர், “இதோ பார்”, எனச் சொல்லி பக்கத்தில் இருந்த ஒரு மூங்கில் கூண்டிலிருந்து ஒரு கௌதாரியை எடுத்து பாம்பு ஒன்று இருந்த கண்ணாடிப் பெட்டிக்குள் போட்டர்.  அவர் போட்ட அதே கணம் மின்னல் வேகத்தில் மேலெழும்பி அந்தப் பாம்பு கௌதாரியைக் கவ்விப் பிடித்தது.  பின் தன் உடலால் கௌதாரியைச் சுற்றிக் கொண்டு அதனை இறுக்க ஆரம்பித்தது.  ஓரிரு நிமிஷங்களுக்குள் கௌதாரியின் மடங்கி இருந்த கால்களும் விரல்களும் நீண்டு விரிந்தன.  அதன் உயிர் பிரிந்தது.  ஆனால் பாம்பு அதன் பிடியை விடவில்லை.  சில மணி நேரங்கள் வரை அப்படியே இறுக்கிப் பிடித்து வைத்திருக்குமாம் அது..  அவரை ஏன் நான் பாம்பின் இரை பற்றிக் கேட்டடேன் என வருந்தினேன்.

 

பின் அவர் வேறு ஒரு கண்ணாடித் தொட்டியில் இருந்த ஒரு குட்டி மலைப் பாம்பின் முதுகில் ரெண்டு தட்டுத் தட்டிக் கையில் எடுத்து அதை என் முன் கையில் வைத்தார்.  அது மெல்ல நகர்ந்து என் கையைச் சுற்றி கொண்டது.  பின் மெதுவாக என் கையை இறுக்குவதை உண்ர்ந்தேன்.  சில வினாடிகளில் அதன் இறுக்கம் அதிகமாகிக் கொண்டே போனது.  என் கையில் ரத்த ஒட்டம் நின்று போனதோ என்னவோ விரல்கள் மறத்துப் போக ஆரம்பித்தன.  நான், “அதை எடுத்து விடுங்கள்”, எனக் கத்தினேன்.  “நீயே எடு” என்றார்.  நான் வாலைப் பிடித்து எடுக்கப் போனேன்.  தம்பு ஐயர் என்னைத் தடுத்து நிறுத்தி முதலில் அதன் முதுகில் மெதுவாக ரெண்டு தட்டுத் தட்டி விட்டு எடு.  இல்லை என்றால் அது உன்னை கடிக்கலாம்.  பின் அதன் வாய்க்குள் இருந்து உன் கையை எடுப்பது கடினம்”, என்றார்.   அவர் சொன்னபடி செய்து மெல்ல அதன் வாலைப் பிடித்து சுற்றிச் சுற்றி பாம்பை என் கையிலிருந்து கழற்றினேன்.  அன்று அனுபவத்தில் தெரிந்து கொண்டேன் பாம்பு எப்படி இறுக்கிப் பிடித்துத் தன் இரையைக் கொல்கிறது என்று.  உடும்புப் பிடி என்பார்களே அதை விடப் பல மடங்கு கெட்டியானது தான் பாம்புப் பிடி.

 

அன்று இரவு உணவு உண்ணப் பிடிக்கவில்லை.  காரணம் ஓரு கொலை நடக்கத் துணை போன குற்ற உணர்வுதான். சரி என் கதையை விட்டு பாம்பின் கதைக்கே திரும்புவோம்.

 

நகர்தல் : பாம்பின் கால் பாம்பறியும் என்பர்.  ஏனெனில்  பிறர் கண்களுக்குத் தெரியும் படியான புறக் கால்கள் இல்லை பாம்பிற்கு.  அதன் ஒவ்வொரு செதிளுமே இரு கால்கள்தான்.  அதன் உடலில் சாட்டை போல் நீளமான முதுகெலும்பில் இருந்து முளைத்துள்ள விலா எலும்புகள் தசைகள் உதவி கொண்டு செதிள் களை இயக்க பாம்பு இடம் விட்டு இடம் நகர்கிறது. மரம் ஏறுகிறது.  நீந்துகிறது.

 

மெதுவாகச் செல்லும் போதும், மணல் பாங்கான இடங்களில் செல்லும்போதும் வளைந்து வளைந்து செல்லும் பாம்பு வேகமாக ஓட நினைத்தால் நேர் கோட்டிலே வெகு வேகமாகப் பறக்கும், வானில் அல்ல தரையில்தான்.  அப்படி நேர் கோட்டில் போகும்போது அதன் முதுகில் அலைகளென எழும்பி இறங்கும் அசைவுகள் முன்னிருந்து பின் செல்வதைக் காணலாம்.

 

நுகர்தல் :  பாம்பிற்கு மிக நல்ல நுகரும் சக்தி உண்டு.  எலி போன்ற தன் இரை சென்ற பாதையினைக் கண்டறிவது இந்த மிகத் துல்லியமான நுகர் சக்தியால் தான்.  ஆனால் நம்மைப் போல் நாசிகளால் நுகர்வதில்லை பாம்புகள்.  பின் எப்படி நுகர்கின்றன அவை?

 

ஒவ்வொரு வினாடியும் தன் இரண்டாகப் பிளந்த நாக்கினை வெளியே நீட்டி இப்படியும் அப்படியுமாக பல திசையிலும் திருப்புகிறதே அது ஏன் தெரியுமா?  நுகர்வதற்காகத் தான்.

 

ஒலி கேட்டல் :   “மகுடியின் இசையில் மயங்கியது நாகம்” என்கிறார்களே அது உண்மையா என்றால் இல்லை.  பிடாரனின் கை அசைவுகளை கண் வாங்காது பார்ப்பது, பிடாரன் நம்மைத் தாக்க வருகின்றானா அல்லது நாம் அவனைத் தாக்க வேண்டுமானால் அதற்குத் தக்க தருணம் எது என்ற சிந்தனையில்தான்.

 

“இடியேருண்ட நாகம் போல்….” இது எந்த அளவு உண்மை?  உண்மை.  நூற்றுக்கு நூறு உண்மை.  பாம்புகளுக்கு இடியின் ஒலியைக் கேட்கவும் முடியும்.  மற்ற ஒலிகளையும் கேட்கவும் முடியும்.  ஆனால் அவ்வாறு கேட்பதற்கு  நம்மைப் போன்று புறச் செவிகள் கிடையாது.  அகச் செவிகள் உண்டு.  அந்த அகச் செவிகள் அதன் உடலில் உள்ள ஒவ்வொரு செதிளோடும் நரம்புகள் மூலம் இணைக்கப் பட்டிருக்கும்.   ஒலிகள் தரையில் உண்டாக்கும் அதிர்வுகளைச் செதிள்களின் மூலம் உணர்ந்து ஒலிகளைக் கேட்டறிகிறது.

 

ஒளி காணல் :  பாம்பின் கண்களுக்கு இமைகள் கிடையாது.  அவை எப்போதுமே திறந்திருக்கும், தூங்கும் போதும் கூட.  தூங்கும் போது வெளிச்சம் இடையூறாக இருக்குமே? என்ன செய்ய?  அப்போது பாம்பு தன் கண்களில் உள்ள பாப்பாவை (Pupa) இடைவெளி இல்லாது இறுக்க மூடிக் கொள்ளும்.

 

விஷம் :  “பாம்பிற்குப் பல்லில் விஷம்.  தேளுக்குக் கொடுக்கில் விஷம்.   அந்த ஆளுக்ககு உடம்பு பூரா விஷம்.”  இந்தக் கூற்றுகள் எவ்வளவு தூரம் உண்மை?  பின்னது இரண்டும் நூற்றுக்கு நூறு உணமையாய் இருக்கலாம்.  முன்னது ஐம்பது சத வீதம் உண்மை.  பாம்புக்குப் பல்லில் விஷம் இல்லை.  அது விஷத்தினை வைத்தியர் ஊசி கொண்டு மருந்து ஏற்றுவது போல் பல்லின் வழியாக நம்முள் செலுத்துகிறது.  விஷம் இருப்பது அண்ணத்தின் மேலாக உள்ள பையில்.

பாம்பு-1-விஷப் பல்

பாம்பு தன் இரு விஷமேற்றும் பற்களை விமான ஓட்டி தரையை விட்டு மேலே விமானம் எழும்பிய உடன் சக்கரங்களை உள்ளிழுத்துக் கொள்வது போல உள்ளிழுத்துக் கொள்ளவோ, மடக்கிக் கொள்ளவோ முடியும்.  அது மட்டுமல்ல. விமான ஓட்டி உள்ளிழுத்த சக்கரங்களைப் பலகைகள் வந்து மூடிக் கொள்வது போல தசைகள் பக்க வாட்டில் இருந்து உள் நோக்கி நகர்ந்து அப் பற்களை மூடிக் கொள்ளும்.

 

பாம்பின் விஷம் பிறரைத் தாக்குவதற்காகவோ அதன் தற்காப்பிற்காகவோ அல்ல. அது தன் இரையினைக் கொல்வதற்காகவோ அல்லது மயக்கமுறச் செய்வதற்காகவோ அல்லது இரையினை எளிதாக ஜீரணிப்பதற்குத் தயாராக்கவோ தான்.

 

தோலுரித்தல் :  தோலுரித்தல் என்றதும் சிலர் மணி பர்ஸ், இடுப்புக் கச்சை இவை செய்வதற்காகத் தோலை உரிக்கிறார்களே அப்படி என்று எண்ணி விடாதீர்கள்.  பாச்சை, வெட்டுக்கிளி, இடையான், தேள் போன்ற சில பூச்சிகள் வளர்ச்சிக்குத் தடையாக மாறும் கெட்டி அடைந்த தோலின் புறச் செல்களிலிருந்து சட்டையைக் கழற்றி எறிவது போல வளியே எறிகின்றனவே அது பற்றிதான் சொல்கிறேன் இங்கு.  பாம்பு அவ்வப் போது தன் சட்டையைக் கழற்றிப் போடும்.

 

பாம்பு சட்டை உரிப்பது வளர்ச்சிக்காக அல்ல.   அதனைக் கடித்துசத்தினை உரிஞ்சும் பேன் போன்ற பூச்சிகளிடமிருந்தும், வேறு பல கிருமிகளிடமிருந்தும் விடுதலை பெறவும், கீரல்கள் மிகுந்த மற்றும் இறந்து போன வெளி செல்களை விட்டெறியவும் தான்.சட்டை உரிக்கும் நேரம் வந்தால் வெளிப் புறச் செல்களுக்கு உள்ளாக அண்மையில் இருக்கும் செல்கள் திரவமாக மாறி வழுக்கலை அளிக்கிறது.  சட்டையின் வால் பக்கத்தை சொறசொறப்பான குச்சிகளில் ஒட்டச் செய்து அதிலிருந்து தன் உடலை மெல்ல வெளியே இழுத்துக் கொள்கிறது.

 

நாக ரத்தினம் :  “வயது முதிர்ந்த பாம்புக்குக் கண் சரியாகத் தெரியாது.  அதன் தலையில் உள்ள விஷம் கெட்டி அடைந்து ரத்தினமாக மாறும்.  அதனை இரவில் பாம்பு கக்கிவிட்டு அந்த ரத்தினம் வீசும் ஒளியில் தன் வேலைகளைச் செய்யும்.”  இது உண்மையா, கட்டுக் கதையா?  பின்னது என்றே நான் சொல்வேன்.

 

கட்டுரையும் பாம்பைப் போலவே நீண்டு கொண்டு போவதால் இப்போதைக்கு நிறுத்திக் கொண்டு மீண்டும் தொடர்கிறேன்.

 

 

தொடரும்…                                  நடராஜன் கல்பட்டு

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

 

நடராஜன் கல்பட்டு