Category Archives: பாம்பு

பாம்பு 5

பாம்பு (5)

 

நேத்து ராத்திரி என் கனவுல ஒரு பாம்பு வந்து என்னைக் கேட்டிச்சு, ஐயா கல்பட்டாரே எங்களெப் பத்தி கட்டுரை எளுதி எங்கெளெ ஒரே அடியா வெஷம் உள்ளவங்க, வெஷமம் செய்யறவங்கன்னு டீவீ சீரியலுங்களுலெ வர வில்லீங்க மாதிரி ஜனங்களுக்குக் காட்டீட்டீங்களே.  எங்களுக்கும் மனுசங்களுக்கும் ஆண்டாண்டு காலமா இருந்து வந்திருக்கிற தொடர்பு பத்தி ஒரு வார்த்தெ எளுதினீங்களா?  இது என்னங்க ஓர வஞ்செனெ?” ன்னு.  அதன் விளைவுதான் இந்த அஞ்சாவது கட்டுரை.

 

மனிதன் இந்த உலகில் தோன்றிய நாள் முதல் இன்று வரை பாம்பும் மனிதனும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை.

 

Inline image 1

 

ஆதி மனிதன் ஆதாமும் ஏவாளும் ஒற்றுமை இன்றி வாழ்ந்தனர்.  ஆதாம் ஒரு சோம்பேரி.  உண்பதும் உறங்குவதுமே அவன் தொழில்.  ஏவாளின் வேலையோ அவனுக்கு உணவு தயார் செய்வது, நிலத்தைக் கொத்தி சீராக்கி பயிர் செய்வது இத்தியாதி.

 

அவர்களைப் படைத்த கடவுள் அவர்களை அறிவு புகட்டும் ஒரு மரத்தின் பழத்தினைத் தின்னக் கூடாது ஏனெனில் அது கெட்டது என்று சொல்லி இருந்தார்.

 

ஒரு நாள் ஏவாள் வேலை செய்து களைத்துத் தன் நிலையைப் பற்றி நொந்து கொண்டிருந்த போது அங்கு தோன்றிய பாம்பு அவளுடன் இதமாகப் பேசி இறைவன் தடை விதித்திருந்த அறிவு மரத்தின் பழத்தைத் தின்னத் தூண்டியது.  ஏவாள் தின்பதற்கு முன் அவள் கண்ணில் படாமல் அந்தப் பழத்தினைக் கொத்தி அதில் தன் விஷத்தை ஓரளவு ஏற்றி விட்டது.  பழத்தைத் தின்ற ஏவாள் தான் தின்றதோடு நிறுத்தாமல் ஆதாமின் உணவிலும் அதைக் கலந்தளித்து விட்டாள்.  கோபமடைந்த கடவுள் தன் கட்டுப் பாட்டை மீறிய ஆதாம் எவாளை ஈடன் நந்த வனத்தில் இருந்து விரட்டி விட்டார்.

 

ஈடனை விட்டு வெளியேறும் போது ஏவாள் உனக்கு ஒரு பரிசு வைத்திருக்கிறேன் எனச் சொல்லி ஆதாமின் கன்னத்தில் முத்தமிட்டாள்.  ஆதாம் ஏவாளை அன்புடன் பார்க்க, அணைக்க அதனைத் தொடர்ந்து நடந்ததின் விளைவே இன்றைய மனித சமுதாயம்.  கடவுளின் எண்ணத்தில் பாம்பு ஒரு கெட்ட பிராணி.  ஆதாம் எவாள் மனதிலோ பாம்பு அவர்களை சேர்த்து வைத்த ஒரு தேவ லோகத்து ராணி.  இது விக்கிபீடியாவில் கண்ட செய்தி..

 

காடுகளில் தனித் தனியே சுற்றித் திரிந்த ஆதி மனிதன் கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து வாழ ஆரம்பித்தது கிருஸ்து பிறப்பதற்கு சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்துதான்.  மனிதன் கூட்டம் கூட்டமாக வாழ ஆரம்பித்தது நதிகளைச் சுற்றிதான்.  முதலில் மெஸபொடோமியாவில் (இன்றைய ஈராக்கும், சிரியா, துருக்கி, ஈரான் இவைகளின் சில பகுதிகளும் சேர்ந்தது ஆரம்பித்தது மனித சமுதாயம்.  பின்னர் எகிப்து நாட்டில் உள்ள நைல் நதிப் பிரதேசம், இந்தியாவில் உள்ள சிந்து நதிப் பிரதேசம் என்று மனிதன் நதிகளைச் சுற்றியே வாழத் தொடங்கினான்.

 

அப்படி வாழ ஆரம்பித்த மனிதர்கள் மனதில் எல்லாம் பாம்பிற்கு ஒரு நீங்காத இடம்.  எப்படி எனப் பார்க்கலாம்.

மெஸபொடோமிய இதிகாசங்கள் படி லிலித் என்பவளொரு ஒழுக்கம் கெட்ட பெண்.  புயலின் சின்னம் அவள். வியாதிகள், இறப்பு அவற்றுக்கும் காரண கர்த்தா அவளே. 

 

அவள் மானம் காக்க உடலினைச் சுற்றிக் கொள்வது ஒரு பாம்பினைத்தான்.

Inline image 2

கிரேக்கர்களின் இதிகாசங்கள் படி பாம்பு மிகவும் கெட்ட ஜந்து.  மெட்யூஸா என்பவள் மிகக் கொடியவள்.  அவள் தலையில் மயிர்களுக்குப் பதிலாக பாம்புகள் இருக்கும்.

 

Inline image 1

  மெட்யுஸா   

 

அவர் கழுத்தில் இருப்பது கார்டெர எனப்படும் அமெரிக்க நாட்டு ஓலைப் பாம்பு.

Inline image 2

இன்நாளைய மெட்யுஸா

 

எகிப்திய சரித்திரத்தில் பாம்புகளுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு.  அவை ஒரு கடவுளாக வழிபடப் பட்டன.  எகிப்திய மன்னர்களான பாரோக்களின் மகுடத்தில் இடம் பிடித்தவை பாம்புகள்.

 

எகிப்தியர் பாம்புகளைக் கெட்ட காரியங்களுக்கும் பயன் படுத்தினர்.  எதிரிகளைக் கொல்வதற்கும், தற்கொலை செய்து கொள்வதற்கும் பாம்புகள் பயன் படுத்தப் பட்டன. (அழகி கிளியோபாட்ராவின் தற்கொலை ஒரு உதாரணத்திற்கு.)

 

சிந்து நதி சமுதாயம் பற்றிக் கேட்கவே வேண்டாம்.  பாம்புகள் இந்து மதத்தில் பின்னிப் பிணைந்த ஒன்று.

 

Inline image 3

பரமசிவனின் கழுத்தில் நல்ல பாம்பு ஆபரணம்

Inline image 4

மகாவிஷ்ணு படுத்துறங்குவது பாம்புப் படுக்கையில்.

Inline image 5

கிருஷ்ணன் நர்த்தனமாடியது காளிங்கன் என்ற பாம்பின்      தலைமேல். 

Inline image 6

முருகனின் வாகனமான மயிலின் கால்களில் ஒரு நல்ல பாம்பு

இராமாயண காவியத்தில் இந்திரஜித் இலக்குமணன் மீது ஏவியது நாகாஸ்திரம்.  மகாபாரத யுத்தத்தில் கர்ணன் அர்ஜுனன் மீது விட்டதும் நாகாஸ்திரமே.  அவளவு ஏன்.  இன்று நம் நாட்டிலும் இருக்கிறது ஒரு நாகா ஏவுகணை.

 

இதிகாச புராணங்களை விட்டு விஞ்ஞான உலகுக்கு வருவோம். மருத்துவ உலகில் நோயாற்றும் சின்னமான அஸ்க்ளிபியஸின் கைத்தடி என்றழைக்கப் படுவது ஒற்றைப் பாம்பொன்று சுற்றிய கைத்தடி.

 

கிரேக்கர்கள் வைத்தியத் துறைக்கு உபயோகிக்கும் சின்னம் காடூசியஸ் சின்னம்.  இது ஒரு கைத்தடியில் இரண்டுபாம்புகள் சுற்றி இருப்பது போல அமைந்த ஒன்று.

 

இந்திய மருத்துவக் கழகம், அமெரிக்க ராணுவ மருத்துவ பிரிவு இவற்றின் சின்னமும் காடூசியஸ் சின்னம்தான்.

Inline image 1                                                           Inline image 2

காடூசியஸ் சின்னம்                         அஸ்க்ளீபியஸ்   சின்னம்  

Inline image 3                                                        Inline image 4

இந்திய மருத்துவக் கழகம் மற்றும் அமெரிக்க ராணுவத்தின்            மருத்துவப்  பிரிவு  இவற்றின் சின்னமான  காடூசியஸ்  சின்னம்

மருத்துவர்களுக்குத் தேவையான மருந்துகளைத் தயாரிக்கும் தொழில் துறையின் சின்னம் என்ன என்று தெரியுமா?  ஹைஜியாவின் கோப்பை (Bowl of Hygieia).  ஹைஜியா என்பவள் உடல் நலம் காக்கும் கிரேக்க பெண் தெய்வம்.

Inline image 5

ஹைஜியாவின் கோப்பை

பாம்புகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே உள்ள தொடர்பு ஒரு பின்னிப் பிணைந்த தொடர்புதானே?

 

பாம்புகளைப் பற்றி எழுதும்போது பாம்புகளுக்கும் மனிதனுக்கும் ஆண்டாண்டுகளாக இருந்துவரும் தொடர்பு பற்றி எழுதாது என் தவறுதானே  அதை இப்போது ஓரளவுக்கு சரி செய்து விடேன் என நினைக்கிறேன்.

 

இத்துடன் இந்தத் தொடர் நிறைவு பெறுகிறது.

 

நடராஜன் கல்பட்டு

 

நன்றி: திரு கல்பட்டு நடராஜன் அவர்களுக்கு

 

 

 

பாம்பு – 4

பாம்பு   பாம்பு 2  பாம்பு 3  பாம்புக்குக் காது கேட்குமா?

பாம்பு  (4)

 

பாம்புக் கடிக்கு வைத்தியம் பற்றிப் பார்க்கப் போகுமுன் வேறு சில பாம்புகள் பற்றியும் பார்க்கலாமா?

 

விஷம் துப்பும் நாகம்  (Spitting cobra) என்ற ஒரு பாம்பு ஆப்பிரிக்காக் கண்டத்தில் காணப்படுகிறது இந்த வகைப்பாம்பு..

Inline image 6

விஷம் துப்பும் நாகம்

இந்தப் பாம்பு தன்னைத் தாக்க வரும் எதிரிகளின் முகத்தில் விஷத்துளிகளைத் தெறிக்குமாம்.  எப்படி என்கிறீர்களா?  தன் விஷப் பையினைத் தசைகளால் சுருக்கி விஷத் துளிகள் விஷப் பற்களின் துவாரம் வழியே வெளி வரும் போது வாயினால் காற்றை திடீரெனெ பலத்துடன் வெளி விடுமாம்.  அப்போது விஷப் பற்களின் நுனியில் தொங்கிக் கொண்டிருக்கும் விஷத் துளிகள் மிக மிக நுண்ணிய துளிகளாக மாறி சுமார் 6 முதல் 10 அடி வரை பாயும்.  இந்தப் பாம்பு எதிரியின் கண்களைக் குறி வைக்குமாம்.  இவ் விஷத் துளிகள்    காயம் எதுவும் இல்லாத தோலில் விழுந்தால் ஒரு ஆபத்தும் இல்லை.  ஆனால் கண்களில் விழுந்தாலோ உடனே வைத்தியம் செய்யா விடில் கண் பார்வை போய் விடும்.

கிலு கிலுப்பை வால் கொண்ட பாம்பு (Rattle snake) எனப்படும் மிகக் கொடிய விஷம் கொண்ட ஒரு வகைப்பாம்பு அமெரிக்காவின் வரண்ட தென் மாகாணங்களில் காணப்படும்.  இதன் வால் நுனி உடலில் இருந்து மாறு பட்டுக் காணப் படும். இது எதிரிகளை எச்சரிக்க வாலை வேகமாக ஆட்டும்.  அப்போது ஒரு கிலுகிலுப்பையை ஆட்டியது போன்ற ஒலி கிளம்பும்.

Inline image 5

கிலுகிலுப்பை வால் கொண்ட பாம்பு

கிலு கிலுப்பை வால் கொண்ட பாம்பின் விஷம் முக்கியமாக நம் ரத்த மண்டலத்தைத் தாக்கும்.  ரத்தம் தனது உறையும் தன்மையை இழக்கும்.  மேலும் கடி பட்ட இடத்தைச் சுற்றியுள்ள இடங்களின் புரதப்பொருட்களை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரியச் செய்யும்.  அதனால் கிலு கிலுப்பைப் பாம்பு கடி பட்டவர்கள் உடனே வைத்தியம் செய்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டால் கூட சில சமயம் கடி பட்ட உருப்புகளை அவர் இழக்க நேரிடும்.

 

கடல் வாழ் பாம்புகள் :  பாம்புகள் நிலத்தில் மட்டும்தான் வாழும் என்பதில்லை. நீரில் வாழும் பாம்புகளும் உள்ளன.  அவற்றில் கடல் வாழ் பாம்புகள் கொடிய விஷம் கொண்டவை.  இவை கடலில் வாழ்ந்தாலும் மீன்களைப் போல சுவாசிப்பதற்கு செதிள்கள் கிடையாது.  ஆகவே சுவாசிப்பதற்காக அவ்வப்போது தலையை நீருக்கு வெளியே கொண்டு வரவேண்டும்.  இந்தப் பாம்புகளின் வால் பட்டையாயிருக்கும்.  அதை அவை நீரில் நீந்திச் செல்ல துடுப்பு போல உபயோகிக்கும்.

Inline image 4

மஞ்சள் உதடுகள் கொண்ட கடல் கட்டு விரியன்

 

Inline image 3

பாம்பின் விஷம் : நல்ல பாம்பு, கட்டு விரியன் பாம்புகளின் விஷம் நரம்பு மண்டலத்தைத் தாக்கும் விஷம்.(Neurotoxin)  இவ்விஷம் நரம்புகளுக்கும் தசைகளுக்கும் பாலமாய் உள்ள திசுக்களைச் செயலிழக்கச் செய்யும்.  அதனால் நம் உடலில் உள்ள இச்சா தசை அனிச்சா தசை இரண்டுமே வேலை செய்யாது.  அதன் விளைவாக தன்னிச்சையாகச் செயல் படும் நுரை ஈறல், இருதயம் இரண்டும் தன் வேலையை நிறுத்திக் கொள்ளும்.  உயிரும் பிரியும்.

 

கட்டு விரியன் பாம்பின் விஷம் நல்ல பாம்பின் விஷத்தைப் போல பதினாறு மடங்கு வீரியம் உடையது.

 

கண்ணாடி விரியன் பாம்பின் விஷம் சற்று மாறுபட்டது.  அது ரத்த மண்டலத்தைத் தாக்கும் விஷம்(Heamotoxin).  ரத்தத்திலுள்ள சிவப்பு அணுக்களை அழிக்கும்.  ரத்தம் உறைவதைத் தடுக்கும்.  உடல் உறுப்புகளின் செயலை அழிக்கும்.  முக்கியமாக மூத்திரக் காய்களை செயல் இழக்கச்செய்யும்.

 

பாம்புக் கடி விஷத்தினை முறியடிக்கும் மருந்து பாம்பின் விஷத்தில் இருந்துதான் தயாரிக்கப் படுகிறது.  இந்தியாவில் சென்னை, கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிட்யூட்டில் இது தயாரிக்கப் படுகிறது.  இம் மருந்து தயாரிக்க ஒரு குதிரைக்கு  வீரியம் மிகவும் குறைக்கப் பட்ட விஷத்தினை ஊசி மூலம் ஏற்றுவர்.  பின் தினமும் மெல்ல மெல்ல விஷத்தின் வீரியம் அதிகரிக்கப் படுகிறது.  குதிரையின் உடலில் இந்த விஷத்திற்கான எதிர்ப்பு சக்தி மெல்ல மெல்ல வளருகிறது.  எதிர்ப்பு சக்தி முற்றிலுமாக வளர்ந்த பின் குதிரையின் ரத்தத்தை எடுத்து அதிலிருந்து விஷம் முறியடிக்கும் மருந்தினைத் தயாரிக்கின்றனர்.

 

செயற்கை முறையில் தயாரிக்க ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  அது நடந்தால் பாம்புக் கடி முறிவுக்கான மருந்தின் தட்டுப் பாடு நீங்கும்.

 

இருளர்களும் பாம்புகளும் :  தமிழ் நாட்டில் திருவள்ளூர், செங்கல்பட்டு ஜில்லாவிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் இருளர்கள் என்ற ஒரு பழங்குடி வகுப்பினர் வசிக்கின்றனர்.  (இந்த இருளர்கள் மத்தியதரைக் கடல் நாடான அல்பேனியாவிலும் இருக்கின்றார்களாம்!)

 

இருளர்களின் முக்கியத் தொழில் பாம்பு, எலி பிடித்தல்.  பிள்ளைப் பிராயத்திலேயே இத்தொழிலை கற்க ஆரம்பித்து விடுகிறார்கள் இவர்கள்.  பேசும் மொழி தமிழும் தெலுங்கும் கலந்த ஒன்று.  பயிர்கள் நடவு, அறுவடை காலங்களில் அன்றாட விவசாயக் கூலிகளாக வேலையும் செய்கின்றனர்.

 

1972ல் இந்திய வனவிலங்குப் பாது காப்புச் சட்டம் வரும் வரை இவர்கள் பிடித்த பாம்புகளைத் தோலுரித்து வெளி நாடுகளுக்கு பாம்பின் தோலை ஏற்றுமதி செய்வோருக்கு விற்று வந்தனர்.

 

தானியகளை அதிக அளவில் (25 சதவிகிதத்துக்கு மேல்) தின்று தீர்ப்பது எலிகள் என்பதாலும்,  அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்திருப்பது பாம்புகள் என்பதாலும் வனவிலங்குப் பாதுகாப்பு சட்டப்படிபாம்புகளைப் பிடிப்பதும், பாம்புத் தோல் ஏற்றுமதி செய்வதும் தடை செய்யப் பட்டது.  இதனால் வருவாய் இழந்த இருளர்கள் வறுமையில் வாட ஆரம்பித்தனர்.

 

இருளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த பாம்பு நிபுணர் ரோமுலஸ் விட்டாகர் என்பவரும் (சென்னை கிண்டி பாம்புகள் பூங்கா, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள முதலைகள் பண்ணை இவைகள் தோன்றக் காரணமாய் இருந்தவர்மற்றும் ஒத்த கருத்துடையவர்களுமாகச் சேர்ந்து இருளர் கூட்டுறவுச் சங்கத்தினை ஆரம்பித்தனர்.  இந்த சங்கம், அங்கத்தினர்கள் பிடித்து வரும் ஒவ்வொரு விஷப் பாம்புக்கும் ரூ.150/– கொடுக்கிறது.

 

இவர்கள் பிடித்து வரும் பாம்புகளிலிருந்து விஷம் எடுக்கப் படுகிறது.  மூன்று வாரங்கள் வைத்திருந்துபாம்புகளிலிருந்து விஷம் கறந்த பின் அவை மீண்டும் காட்டிற்குள் விட்டு விடப் படுகின்றன.

 

Inline image 1

பாம்பின் விஷம் கறத்தல்

சர்வதேசச் சந்தையில் ஒரு கிராம் விரியன் பாம்பின் விஷம் சுமார் 2,000 டாலர்கள்.  நல்ல பாம்பின் விஷத்தின் விலை குறைவு.  சுமார் 1,000 டாலர்களே.  காரணம் நல்ல பாம்புகள் அதிக அளவில் கிடைப்பதுதான்.

 

கறந்து சேகரிக்கப் பட்ட பாம்பின் விஷம் திரவ நிலையில் இருக்கும்.  அதற்கு அதீதக் குளிரூட்டி பொடியாக மாற்றி சிறிய கண்ணாடிக் குழாய்களில் அடைத்து பாம்புக் கடிக்கான மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விற்கப் படுகிறது.

 

பாம்புக் கடியும் மாந்திரீகமும் மந்திரத்தில் மாங்காய் விழுமோ விழாதோ எனக்குத் தெரியாது.  ஆங்கிலேயர் நம் நாட்டை ஆண்ட நாட்களில் ரயில்வேயில் அதிகாரியாகப் பணியாற்றி வந்த என் தந்தை சொன்ன ஒரு செய்தி என் ஞாபகத்துக்கு வருகிறது.  அந்த நாட்களில் ஒரு ரயில் நிலய இயக்குனர் (Station master) பாம்புக் கடிக்கு மந்திரிப்பதில் வல்லவராம்.  எவருக்கு பாம்பு கடித்தாலும் உடனே அவருக்குத் தந்தி மூலம் செய்தி அனுப்பினால் அவர் எதோ மந்திரம் ஜபித்து தான் அணிந்துள்ள துணியிலிருந்து ஒரு சிறிய துண்டைக் கிழித்துப் போடுவாராம்.  அதே சமயம் அது வரை படுத்திருந்த பாம்புக் கடி பட்ட மனிதர் எழுந்து உட்காருவாராம்.  அன்றைய அரசாங்கம் எல்லா ரயில் நிலய இயக்குனர்களுக்கும் ஒரு ஆணை பிறப்பித்திருந்ததாம், எந்த ஒரு ரயில் நிலையத்திலும் எந்த வேளையிலும் ஒருவர் வந்து இன்னாரை பாம்பு கடித்து விட்டது என்று சொன்னால் அந்த செய்தி உடனே அந்த குறிப்பிட்ட நிலைய இயக்குன்ருக்கு இலவசமாகத் தந்தி மூலம் தெரிவிக்கப்பட வேண்டும் என்று. இன்நாட்களில் அப்படிப் பட்டவர்கள் இருக்கிறார்களோ  இல்லையோ தெரியாது.  ஆனால் மந்திரிப்பதாகச் சொல்லி ஏமாற்றுபவர்கள் பல பேர் இருக்கிறார்கள்.

 

இனி ஒருவரை பாம்பு கடித்து விட்டது என்றால் செய்யக் கூடாதவை என்னென்ன, செய்ய வேண்டியவை என்ன என்பதைப் பார்க்கலாம்.

 

முதலில் செய்யக் கூடாதவை பற்றி.

 

1.  பதட்ட மடையாதீர்கள்.  நீங்களும் பதடமடைந்து கடி பட்டவரையும் பதட்டம் அடையச் செய்யாதீர்கள்.  பதட்டம் ரத்த ஓட்டத்தை அதிகரித்து விஷம் உடலில் பரவுவதை துரிதப் படுத்தும்.

 

2.  கடி பட்டவர் மேல் கைகளால் தட்டுவதும், கடி பட்ட இடத்தினைத் தேய்ப்பதும் கூடவே கூடாது.  இதனாலும் விஷம் உடலில் வேகமாகப் பறவும்.

 

3.  கடி பட்ட இடத்தில் கத்தியால் கீறி வாயினால் ரத்த்தோடு விஷத்தையும் உரிஞ்சித் துப்பிவிட முயற்சி செய்யாதீர்கள்.  இப்படிச் செய்வதால் மூன்றுவித பாதிப்புகள் ஏற்படலாம்.  ஒன்று கடித்த பாம்பு கண்ணாடி விரியனாக இருந்தால் ரத்தத்தின் உறையும் தன்மை போய்விடுமாதலால் நிற்காத ரத்தப் பெருக்கெடுத்து அதனாலேயே அவர் உயிர் போகலாம்.  இரண்டாவது உங்கள் வாயில் புண் இருதால் அதன் வழியே உங்களுக்கும் விஷம் பரவலாம்.  மூன்றாவது உங்கள் வாயில் இருக்கும் நுண் கிருமிகள் கடி பட்டவருக்குப் பரவலாம்.

 

4.  முன் காலத்தில் பெரிதும் சொல்லப் பட்ட ஒரு முதலுதவி கடி பட்ட இடத்துக்கு மேல் ஒரு கயிற்றினைக் கட்டி, அதற்குள் ஒரு பென்சிலைச் சொருகி, அந்தப் பென்சிலைச் சுற்றுவதன் மூலம் கட்டு இறுகி (Torniquet) ரத்த ஓட்டமும் விஷம் பரவுதலும் தடைப்படும் என்படதாகும்.  ஆனால் எற்படக் கூடியது என்ன தெரியுமா?  கடி பட்ட இடத்தில் உள்ள திசுக்கள் சிதைந்து பின்னர் அவருக்கு பாம்புக் கடிக்கான வைத்தியம் செய்யப் பட்டு அவர் உயிர் பிழைத்தாலும் கடி பட்ட உறுப்பினக் கழித்து விட வேண்டிய நிர்பந்தம் வரும்.

 

5.  கடித்த பாம்பினைத் தேடி அதை அடிப்பதில் உங்கள் நேரத்தைச் செலவிடாதீர்கள்.  அதனால் இரண்டு பாதிப்புகள்.  ஒன்று கடி பட்டவருக்கு உடனே தேவையான சிகிச்சை அளிப்பதின் பொன்னான நேரம் விரயமாதல்.  மற்றொன்று அந்தப் பாம்பு உங்களையும் கடிக்க நேரிடலாம்.

 

6.  கடி பட்ட உறுப்பினை, அது காலோ, கையோ, இருதய மட்டத்திற்கு மேலாக வைக்காதீர்கள்.  அப்படி வைப்பதால் விஷம் வேகமாகப் பறவும்.

 

7.  கடி பட்டவரை நடக்க வைக்காதீர்கள்.  அதனால் அவரது ரத்த ஓட்டம் அதிகரித்து விஷம் வேகமாக உடலில் பறவும்.

 

இனி செய்ய வேண்டியவை என்னென்ன என்று பார்க்கலாம்.

 

நீங்கள் சரியான (RIGHT) நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அது என்ன சரியான நடவடிக்கை எங்கீறீர்களா?  மேலே படியுங்கள்.

 

1.  கடி பட்டவருக்கு தைரியமூட்டுங்கள்.  எல்லாப் பாம்புகளுமே விஷப் பாம்புகள் அல்ல. (Reassure)

 

2.  பாம்புக் கடி பட்டவரையும் கடி பட்ட அவயவத்தினையும் அசைய விடாதீர்கள்.  கடி பட்ட இடத்துக்கு மேல் இருகக் கட்டும் பட்டிச் சுருளினால் (Compression bandage) ஒரு அளவு கோலையோ பட்டையான குச்சியையோ வைத்து கட்டுப் போடுங்கள்.  (Immobilize)

 

3.  உடனே எந்த வைதிய சாலையில் பாம்புக் கடிக்கான மருந்து இருக்கிறது என்பதை  விசாரித்தறிந்து நேராக அங்கு கூட்டிச் செல்லுங்கள்.  ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியாய் அலைந்து பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம்.  (Go to Hospital)

 

4.  பாம்பு கடி பட்டவருக்கு கீழ்க் கண்ட மாறுதல்கள் ஏற்படலாம்.

இவற்றில் எந்த மாறுதல்கள் காணப் பட்டன என்பதை மனதில் இருத்தி மறக்காமல் வைத்தியரிடம் சொல்லவும்.

 

அ.  கடிபட்ட இடத்திலிருந்து ரத்தப் பெருக்கு.

ஆ.  கண் பார்வை மங்குதல்.

இ.  தோளில் எரிச்சல்.

ஈ.  வலிப்பு.

உ.  பேதி.

ஊ.  மயக்கம்.

எ.  அதிகமாக வியர்த்து விடுதல்.

ஏ.  ஜுரம்.

ஐ.  அதிகமாக தாகம் எடுத்தல்.

ஒ.  தசைளை இயக்க முடியாமை.

ஓ.  வயிற்றுப் பிரட்டலும் வாந்தியும்.

ஒள. மறத்துப் போதலும் ஊசிகள் குத்தும் உணர்ச்சியும்.

அ.அ.  இதயத் துடிப்பின் வேகம் அதிகரித்தல்.

ஆ.ஆ.  அதீத வலி.

இ.இ.  தோலின் நிறம் மாறுதல்.

ஈ.ஈ.  கடித்த இடத்தில் வீக்கம்.

உ.உ.  சோர்வு.

 

பாம்பை நீங்கள் பார்த்திருந்தால் அதன் நிறம், உடலில் காணப் பட்ட குறியீடுகள், கடிக்கும் போதோ பின் அடிக்கும் போதோ படமெடுத்ததா என்பது போன்ற விவரங்களையும் வைத்தியரிடம் சுருக்கமாகச் சட்டென்று சொல்லுங்கள்.  (Tell the doctor)

 

மேற்சொன்னவையே ஒருவரை பாம்பு கடித்து விட்டால் நீங்கள் எடுக்க வேண்டிய சரியான நடவடிக்கைகள்(RIGHT actions).

 

கோழி மிதிச்சு குஞ்சு சாகுமா?” என்பது பழமொழி.  “பாம்பு கடித்து பாம்பு சாகுமா?” என்பது கேள்வி.  சாகாது,ஒரே ரகப் பாம்பாயிருந்தால்.  காரணம் அதன் உடலிலே அதன் விஷத்திற்கான எதிர்ப்பு சக்தி உள்ளடங்கி இருப்பதுதான்.

 

கட்டுரையை முடிக்கும் முன் இரு  வேண்டுகோள்கள்.

 

ஒன்று:  பாம்பினைக் கண்டால் அதை உடனே அடித்துக் கொல்லாதீர்கள்.  பயத்திற்கு அடிமையாகி அதைவெறுக்காதீர்கள்.  அவை மனித குலத்திற்கு இழைக்கும் தீங்கினைவிட நன்மை பல மடங்கு அதிகம் என்பதை மறக்காதீர்கள்.

 

இரண்டு:  உங்கள் ஊரில் உள்ள எந்தெந்த மருத்துவ மனைகளி லெல்லாம்  பாம்புக் கடி விஷத்தினை முறியடிக்கத் தேவையான மருந்து கிடைக்கும் என்பதைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.  இது உங்களுக்கும் உதவியாக இருக்கும்.  பிறருக்கும் உதவியாக இருக்கும்.  காரணம் பாம்பு கடித்தால் ஓரிரு மணி நேரத்திற்குள் வைத்தியம் செய்யா விட்டால் உயிருக்கே ஆபத்தாய் முடியும்.                     

 

கட்டுரையை இத்தோடு முடித்திட நினைத்தேன்.  ஆனால்……

 

நடராஜன் கல்பட்டு

 

 

 

 

 

பாம்புக்குக் காது கேட்குமா?

பாம்பு  பாம்பு 2 பாம்பு 3

பாம்பு-1-மலைப் பாம்பு

பாம்புக்கு காது கேட்குமா? தொடர்ந்து குறிவைத்து தாக்குமா? பாம்புக்கு வார்க்கப்படும் முட்டையும், பாலையும் அது குடித்து விடுகிறதா? கொம்பேறிமூக்கன் தன்னால் கடித்து இறந்தவரை எரிக்கும் வரை மரத்தில் மறைந்திருந்து பார்க்குமா? இவையெல்லாம் உதகையில் நடைபெற்ற பாம்புகள் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்ற பார்வையாளர்களிடமிருந்து கேட்கப்பட்ட கேள்விகள்.

 

புவி வெப்பமடைதல் அபாய அளவுகளைக் கடக்கத் தொடங்கியதிலிருந்து அனைத்து பகுதிகளிலுமே தட்பவெப்பநிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக பாம்புகளே இல்லையெனவும், அப்படியே இருந்தாலும் அவை விஷத்தன்மை அற்றவையே என்ற நிலைதான் மலை மாவட்டமான நீலகிரியில் இருந்தது. ஆனால், அண்மைக்காலமாக குடியிருப்பு பகுதிகளிலும், விவசாய நிலங்களிலும், சாலையோரங்களிலும் பாம்புகள் காணப்படுகின்றன.

 

எனவே, நீலகிரி மக்களும் பாம்புகளைக் குறித்து தெரிந்து கொள்ளவும், அவை கடித்தால் உடனடி முதலுதவி என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளவும் சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட்டது. இதில் பாம்புகளைக் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டோர் முதல் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் பாம்புகளை பிடித்து அப்புறப்படுத்துவோர் வரை பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர்.

 

இக்கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்த உதகை அரசு கலைக்கல்லூரியின் உதவி பேராசிரியரும், சென்னை பாம்பு பண்ணையின் முன்னாள் இணை இயக்குநருமான டாக்டர் கண்ணன் தெரிவித்ததாவது:

 

“பாம்புகள் என்றாலே ஒருவித பயம் உள்ளது. அதுதான் பாம்புகளைக் குறித்த பல்வேறு தவறான தகவல்களுக்கும் காரணமாகும். பயம், மூடநம்பிக்கை, குறைந்துவரும் வன வளம், வாழ்விடங்கள் குறைப்பு போன்றவை பாம்புகளின் அழிவுக்குக் காரணமாக அமைகின்றன.

 

பாம்புகளுக்கு மனிதர்களைப்போல வெளிப்புற செவியில்லாமல் உட்புற செவி மட்டுமே உள்ளதால் அதிர்வுகளை மட்டுமே அவை உணரும். அவற்றிற்குக் காது கேட்காது. அதிர்வுகளுக்கு ஏற்ப நகரும். அதனால், இவை துரத்திச் சென்று மனிதர்களைக் கடிக்கும் என்பது கற்பனையானதே. அதேபோல, பாம்புக்கு மூளைத்திறன் குறைவு என்பதால் அவற்றால் சிந்திக்க முடியாது. எனவே, பாம்புக்கு முட்டையும், பாலும் வைத்தால் அதை அவை குடித்து விடுகின்றன என்பது நம்பிக்கைதானே தவிர, உண்மையல்ல.

 

அதைப்போலவே கொம்பேறி மூக்கன் பாம்பு தான் கடித்து இறந்தவரை மயானத்தில் எரிக்கும் வரை அங்குள்ள மரத்தில் மறைந்திருந்து பார்க்கும் என கூறப்படுவதும் தவறானதாகும். கொம்பேறி மூக்கனுக்கு விஷத்தன்மையே கிடையாது. தவறான தகவல்களால்தான் பாம்புகளைக் குறித்து ஒரு பீதி நமக்குள் உள்ளது.

 

பாம்புகள் உழவனின் நண்பர்களாவர். சராசரியாக ஒரு ஜோடி எலி ஆண்டுக்கு தனது குடும்பத்தில் 880 குட்டிகள் உருவாக காரணமாக அமைகின்றது. இவ்வாறு நூற்றுக்கண்க்கில் பெருகும் எலிகளை மனிதர்களால் கட்டுப்படுத்த முடியாது. பாம்புகளால் மட்டுமே அவற்றை கட்டுப்படுத்த முடியுமென்பதால் தட்டுப்பாடில்லாமல் உணவு தானியங்கள் கிடைப்பதற்கு பாம்புகள் அவசியமானவையாகும்.

 

குளிர் ரத்த பிராணியான பாம்புகளால் நீலகிரி போன்ற குளிரான பகுதிகளில் இருக்க முடியாது என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது நீலகிரி மலைப்பகுதியிலும் பல்வேறு வகையான பாம்புகள் வசிக்கத் தொடங்கியுள்ளன.

 

இந்தியாவில் 283 வகையான பாம்புகள் உள்ளன. இவற்றில் 62 வகை பாம்புகள் விஷத்தன்மை கொண்டவையாகும். இவற்றில் 4 வகையான பாம்புகள் மனிதர்களின் வசிப்பிடங்களைச் சுற்றி மட்டும் வாழும் தன்மை கொண்டவை” என்றார்.

 

இக்கருத்தரங்கில் பங்கேற்ற சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் டாக்டர் பூபதி கூறியதாவது:

 

“பருவநிலை மாற்றங்களால் பாம்புகளில் பல வகை ஏற்கெனவே அழிந்துவிட்டன. ஒருசில வகையான பாம்புகளும் அழிவின் விளிம்பில் உள்ளன. உலகிலுள்ள பாம்புகளில் 10 சதவிகிதப் பாம்புகள் இந்தியாவில்தான் உள்ளன. தரையில் உள்ள பாம்புகள் விஷத்தன்மை கொண்டவையாக இருந்தாலும், கடல் பாம்புகள் விஷத்தன்மையற்றவையாகும். பொதுவாக அவை யாரையும் கடிப்பதுமில்லை. விஷத்தன்மை கொண்ட நாகப்பாம்பு கடித்தால் கண்டிப்பாக மரணம் என்பதும் தவறான தகவலாகும். பயத்தின் காரணமாகவே மனநிலை பாதிக்கப்பட்டு உயிரிழப்பிற்கு ஏதுவாகிறது.

 

இந்தியாவில் சுனாமி ஏற்பட்ட பின்னர் நிகோபார் தீவுகள் ஒன்றரை அடி உயரம் கீழேயும், அந்தமான் ஒன்றரை அடி உயரம் உயர்ந்துவிட்டதாகவும் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. இதுபோன்ற மாற்றங்களும் பாம்புகளின் வாழ்விடங்களை அழிப்பதோடு அவற்றின் இடப்பெயர்ச்சிக்கும் ஏதுவாகிறது.

எனவே, பாம்புகளைக் குறித்த பீதியை போக்கிக் கொள்வதோடு அவற்றைக் குறித்தும் தெரிந்து கொண்டால் பாம்புகளை நம்மால் காப்பாற்ற முடியும். இயற்கையின் சக்கரத்தில் பாம்புகளுக்கும் பிரதான இடமுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது” என்றார்.

இந்த கருத்தரங்கைத் தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் பாம்புகளைப் பிடித்து பாதுகாப்பாக வெளியேற்றுவதைக் குறித்து வனத்துறையினருக்கான பயிற்சி முகாமும் நடத்தப்பட்டது.

பாம்பு 3

 

திரு கல்பட்டு நடராஜன் அவர்களுக்கு நன்றியுடன்

பாம்பு  பாம்பு 2

பாம்பு (3

 

உலகில் உள்ள சுமார் 3,000 வகையான பாம்புகளில் இந்தியாவில் இதுவரை கணக்கில் வந்தவை சுமார் 270.  இவற்றில் மிகக் கொடிய விஷம் கொண்ட பாம்புகள் சில பாம்புகளே.

 

ஆன்மீக விசாரத்தில் உன்னத நால்வர் என்றழைக்கப் படும் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் என்பது போல பாம்புகள் விசாரத்தில் பெரிய நால்வர் என அழைக்கப் படும் நல்ல பாம்பு (The Indian Cobra), கட்டு விரியன் (Krait), கண்ணாடி விரியன் (Russell’s Viper), ரம்பச் செதிள் கொண்ட விரியன் (Saw-scaled Viper) மற்றும்இவற்றுடன் ராஜ நாகம் (King Cobra), பவழப் பாம்பு (Coral snake) என்பவையே இந்தியப் பாம்புகளில் மிகக் கொடிய விஷப் பாம்புகள்.  இவை மனிதனைக் கடித்தால் உடனே சரியான வைத்தியம் செய்யப்படா விட்டால் ஓரிரு மணி நேரத்திற்குள்  கடிபட்டவர் இறப்பது நிச்சயம்.

 

பாம்புக் கடிக்கான வைத்தியம் பற்றிப் பார்க்குமுன் இந்தப் பாம்புகளைப் பார்க்கலாமா?

 

நல்ல பாம்பு :  விஞ்ஞான ரீதியாக இந்தப் பாம்பிற்கு அளிக்கப் பட்ட பெயர் நஜா நஜா’ என்பதாகும்.  நஜாஎன்பது ஒரு போர்ச்சுகீசியச் சொல். நல்ல பாம்பிற்கு போர்சுகீசியப் பெயரா? எப்படி வந்திருக்கும்?  பல நூற்றாண்டுகளுக்கு முன் போர்ச்சுகீசிய மாலுமிகளும் அவர்களுடன் சென்றவர்களும் உலகெங்கிலும் அவர்கள் கண்ட தாவரங்கள், விலங்குகள், பறவைகள் பற்றிக் குறிப்பெடுத்துக் கொண்டு சென்றனர்.  நாகா நாகா என்று நம் மக்கள் கூறியதை நஜா நஜா என்று எழுதிக் கொண்டனரோ அல்லது ஹிந்தி பேசுபவர்கள், அது மிகக் கொடிய விஷப் பாம்பு.  அதன் அருகே போகாதே என ஜா ஜா” (Don’t go…don’t go) எனத் தடுத்ததை அவர்கள் அந்தப் பாம்பின் பெயர் நஜா நஜா என எடுத்துக் கொண்டனரோ தெரியாது.

 

 

நல்ல பாம்பு மற்ற பாம்புகளைப் போலவே நல்ல பாம்புதான்.  தானாக வந்து மனிதனை கடிக்காது, அதனை மிதித்தாலோ அல்லது கொல்ல முயற்சித்தாலோ தான் தன் விஷப் பற்கள் கொண்டு மனிதனை அது தீண்டும்.

 

Inline image 1                             Inline image 2

 

நல்ல பாம்பின் தலை – முன்னும் பின்னும்

 

நல்ல பாம்பு அதன் உயிருக்கு ஆபத்து வருகிறது என்று எண்ணினாலோ, அல்லது அதை நாம் சீண்டினாலோ, படமெடுக்கும்.  தன் உடலின் மூன்றில் ஒரு பகுதியை செங்குத்தாகத் தூக்கி நிறுத்திக் கொண்டுகழுத்தின் தசைகளைப் பக்க வாட்டில் பட்டையாக விரித்துப் பெரு மூச்சு விட்டு எதிரிகளை, கிட்டெ வராதே.  வந்தால் கொன்று விடுவேன் என முன் எச்சரிக்கை செய்யும் ஒரு செய்கையாகும் படமெடுப்பது என்பது.

 

நல்ல பாம்பு படமெடுக்கும் போது அதன் விரித்த படத்தின் பின் புறம் மூக்குக் கண்ணாடி போன்ற ஒரு குறியீடு தெரியும்.  இந்த மாதிரி குறியீடு கொண்ட நல்ல பாம்பினை ஆங்கிலத்தில் மூக்குக் கண்ணாடி அணிந்த நல்லபாம்பு (Spectacled cobra) என்பார்கள்.

 

ஒரு வகை நல்ல பாம்பின் தலையில் இது ஒற்றைக் கண்ணாடி வடிவில் இருக்கும்.  இந்த வகை நல்ல பாம்பினை ஒற்றைக் கண்ணாடி அணிந்த நல்ல பாம்பு (Monocled cobra) என்பார்கள்.

 

கட்டு விரியன்:  நல்ல பாம்பினும் கொடிய விஷம் கொண்ட பாம்பு இது.  நல்ல வேளையாக பகலில் படுத்துறங்கி இரவில் மட்டும் வெளி வரும் பாம்பு இது.  இதன் குறுக்கு வெட்டுத் தோற்றம் வட்டமாயில்லாமல் ஒரு முக்கோண வடிவில் இருக்கும்.  உடலில் பட்டை அடித்தது போன்ற வண்ணம் கொண்டிருக்கும்.

 Inline image 3

 

http://en.wikipedia.org/wiki/Bungarus

மஞ்சளும் கருப்புமான பட்டைகள்

கொண்ட கட்டு விரியன்.

Inline image 4

 

Photo Credit: Dr. Muhammad Sharif Khan

கருமை நிறப் பட்டைகளுடன் ஒரு கட்டுவிரியன்.

 

கண்ணாடி விரியன்:  இந்த வகைப் பாம்புகளுக்கு இப்பெயர் வரக் காரணம் இதன் உடல் பூராவுமே மூக்குக் கண்ணடிகள் போட்டாற் போன்ற வண்ணத் திட்டுகள் இருப்பது தான்.  கண்ணடி விரியன் களில் பல வகை உண்டு.  அவற்றில் இரண்டு ரஸ்ஸல்ஸ் விரியன்  (Russell’s viper), ரம்பச் செதிள் கொண்ட விரியன்  (Saw-scaled viper) என்பவை ஆகும்.

   Inline image 5

http://en.wikipedia.org/wiki/File:Daboia_head.jpg                      http://en.wikipedia.org/wiki/File:Echis_carinatus_sal.jpg

கண்ணாடி விரியன் பாம்பு                                                      ரஸ்ஸல் கண்ணாடி விரியன்

 

1972ல் விஜயவாடாவில் ஒரு நாள் எனது கிருஸ்துவ சக அதிகாரி ஒருவருடன் எங்கள் வீட்டு வாசல் வராந்தாவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.  வாசலில் இருந்த முசுக்கொட்டை செடியருகே (Mulberry tree)பத்துப் பதினைந்து கட்டெறும்புகள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து செல்வது போல என் கண்ணில் பட்டது.  சற்று கூர்ந்து கவனித்ததில் எனக்குப் புரிந்து விட்டது அது என்னவென்பது. அப்போது விஜயவாடாவில் நாகபஞ்சமி என்ற சினிமா ஓடிக் கொண்டிருந்தது.  நண்பர் திடீரெனக் கேட்டார், உங்கள் மதத்தில் நல்ல பாம்பினை தெய்வமாகக் கொண்டாடுகிறீர்கள்.  இது உண்மையா? அல்லது கட்டுக் கதைகளா?” என்று.  அது உண்மையோ இல்லையோ எனக்குத் தெரியாது.  இப்போது உங்களுக்கு ஒரு உண்மையான பாம்பினைக் காட்டவா?” என்றேன். எங்கே? எங்கே காட்டு என்றார் அவர்.  நண்பர் மேத்யூ குட்டியை முசுக் கொட்டை செடியருகே அழைத்துச் சென்று அங்கு வளைந்து வளைந்து செல்லாமல் கிட்டத் தட்ட நேர் கொட்டில் சென்று கொண்டிருந்த ஒரு சின்ன பாம்பினைக் காட்டினேன்.  அதன் முன்னே ஒரு குச்சியை நீட்டினேன்.  குட்டிப் பாம்பு தன் உடலை விருட்டென வளைவுகளாக இழுத்துக் கொண்டு குச்சியினை பக்க வட்டாகத் தாக்கியது. பாம்புகளைப் பற்றி சிறிதளவு படித்திருந்த எனக்குப் புரிந்து விட்டது அந்தப் பாம்பு கண்ணாடி விரியனின் குட்டி என்று.  அடுத்த வினாடி ஒரு பெரிய கல்லை அதன் மேல் தூக்கிப் போட்டுப் பரலோகம் அனுப்பி விட்டார் மேத்யூ குட்டி.  ஏன் அவருக்கு நான்பாம்பைக் காட்டினேன் என வருந்தினேன் அன்று.

 

ராஜ நாகம்:  (King cobra)  ராஜ நாகம் நல்ல பாம்பில் ஒரு வகை.  ஆனால் இரண்டு வித்தியாசங்கள்.  ஒன்றுஇதன் உணவுகளில் மிக முக்கியமானது மற்ற  பாம்புகள்  (அதனால் தான் ராஜ நாகம் என்ற பெயரோ?)  மற்றொன்று இது சிறு குச்சிகள் சரகுகளைத் தன் உடலால் நகர்த்தி நகர்த்தி இரண்டடுக்கு வீடு (கூடு) கட்டி கீழ் தளத்தில் முட்டைகள் இட்டு, மேல் தளத்தில் படுத்துறங்கும்.  ராஜ நாகம் தன் வீட்டினை மிகுந்த ஆக்ரோஷத்துடன் பாது காக்கும்.

Inline image 6

 

உலகில் உள்ள கொடிய விஷப் பாம்புகளில் மிகப் பெரிய பாம்பு ராஜ நாகம்.  இது சுமார் 18.5 அடி வரை வளரக் கூடும். நல்ல பாம்பினைப் போலவே இந்தப் பாம்பும் படமெடுக்கும்.

 

இதன் கண் பார்வை மிக மிகக் கூர்மையானது. சுமார் 300 அடி தூரத்தில் நகரும் ஒரு இரையினை இது கண்டறியும் சக்தி படைத்தது என்கின்றனர் வல்லுனர்கள்.

 

 

பவளப் பாம்பு : (Coral snake). பவளம் என்றதும் பலதேசப் பெண்களுக்கு ஆபரணமாக அணிய ஆசை வரும்.  மஞ்சள், சிவப்பு, கருப்பு வர்ணப் பட்டைகளைக் கொண்ட இந்தப் பாம்பு பார்க்க மிக அழகாக இருக்கும்.

Inline image 7

 

http://www.team-bhp.com/forum/attachments/4×4-off-roading/91469d1232383511-snakes-coral.jpg 

 

அழகாக இருக்கிறதே எடுத்து அணியலாமோ என்று எண்ண வேண்டாம்.  மிகக் கொடிய விஷம் கொண்டபாம்புகளில் இதுவும் ஒன்று.

 

சில விஷமற்ற பம்புகள்:  விஷமற்ற பாம்புகள் என்றவுடன் இவற்றுக்கு முற்றிலுமாக விஷம் இராது என எண்ணி விட வேண்டாம்,  இந்த வகையில் சிலவற்றிற்கு விஷம் இருந்தாலும் அது மிக மிகக் குறைந்த வீரியமுடையதாகத் தான் இருக்கும்.  இவ்வகைப் பாம்புகளில் மூன்றினைப் பற்றிப் பார்க்கலாம்.

 

1. கொடி அல்லது சாட்டைப் பாம்பு (Vine or Whip snake):  நீண்டு மெலிந்து கொடி அல்லது சாட்டை போல் இருக்கும் இப் பாம்பில் பச்சை நிறத்தில் இருப்பவற்றை பச்சைப் பாம்பு என்றும், பழுப்பு நிறத்தில் உள்ளதை கொம்பேரி மூக்கன் என்றும் நிறத்தினை வைத்து அழைப்பார்கள் நம் தமிழ் நாட்டில்.  இதனை கண் கொத்திப்பாம்பு என்று அழைப்பவர்களும் உண்டு.

 

இந்த இரு வகைப் பாம்புகளுமே மிக மிகக் குறைந்த வீரியம் கொண்ட விஷம் உள்ள பாம்புகளே.  அவை கடித்தால் கடித்த இடத்தினைச் சுற்றி சிறிதளவு வீக்கமும், வலியும் இருக்கும்.  மூன்று நாட்களில் வலி குறைந்து அல்லது மறைந்து விடும்.

 

இந்தப் பாம்புகள் தாழ்வான மரக் கிளைகள் அல்லது செடிகளில் இருந்து கொக்கி போலத் தொங்கிக் கொண்டு இருக்கும்.  அவ்வாறு தொங்குவது தரையில் ஓடும் தன் இரையான ஓணான், பல்லி, சுண்டெலி இவற்றினைக் கண்டறிந்து தாக்கிப் பிடிப்பதற்கே.

 

கொம்பேரி மூக்கனின் தலை மேலிருந்து பார்த்தாலும் சரி, பக்க வாட்டில் இருந்து பார்த்தாலும் சரி ஒரு நீண்ட முக்கோண வடிவில் காணப்படும்.                            

 

 Inline image 8

http://en.wikipedia.org/wiki/Ahaetulla_nasuta

பச்சைப் பாம்பில் இரு வகை

.

கொம்பேரி மூக்கன் பற்றி நம் நாட்டில் இரு செய்திகள் பரவலாக உலவி வரும்.

 

1.  கொம்பேரி மூக்கன் மனிதனின் கண்களைக் குத்துவதற்காகத் தான் மரக் கிளைகளில் இருந்து தொங்கிக் கொண்டிருக்கும்.

 

2.  கொம்பேரி மூக்கனை ஒருவர் கொல்ல நினைத்து அடித்தால் அது அவரைத் தீண்டி விட்டு அவர் இறந்தாரா, இறந்தவரின் உடலை எரித்தார்களா இல்லையா எனப் பார்ப்பதற்காக அருகிலேயே தொங்கிக் கொண்டிருக்கும்.  புகை கண்ட பின்னர்தான் அது அங்கிருந்து மறையும்.

 

இந்த இரண்டில் முன்னதில் ஓரளவு உண்மை இருக்கலாம்.  காரணம் இதுதான்.  மரத்திலிருந்து தொங்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாம்பினை நாம் அணுகும் போது அது நம் கண்கள் அசைவதைத் தப்பாக தனது இரை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றெண்ணி நம்மைத் தாக்கும் வாய்ப்பு உள்ளது.

 

இரண்டாவது முற்றிலும் கட்டுக் கதையே.

 

நான்கு வருடங்களுக்கு முன் எங்கள் வீட்டில் தோட்ட வேலை செய்து கொண்டிருந்த இருவர் அடித்துப் பிடித்து உள்ளே ஓடி வந்து, சார் ஒரு கழி கொடுங்க.  பாம்பு ஒண்ணு வந்துருக்கு என்றனர்.  கழியைக் கொடுக்காமல் நான் வெளியெ வந்து பார்த்தேன்.  பாம்பு எங்கே?” என்றேன்.  அவர்கள் ஒரு மல்லிகைச் செடியியைக் காட்டினர்.  அதில் ஒரு பச்சைப் பாம்பு.  அதன் வாலைப் பிடித்து மெல்ல வெளியே இழுத்துத் தூக்கிப் பிடித்தேன். அவர்கள், சார் அது கண்ணெக் கொத்தீடும் என அலற நான் சிறிதும் பதட்டப் படவில்லை.  அந்தப் பாம்பினை புதர் மண்டி இருந்த பக்கத்து காலி மனையில் கொண்டு விட்டேன்.  கண் இமைக்குமுன் தன்னுடலை சற்றும் அசைவின்றி புதருக்குள் இழுத்துச் சென்றது அது.  என்ன கொள்ளை அழகு தெரியுமா பச்சைப் பாம்பு?

 

 

ஓலைப் பாம்பு :  ஓலைப் பாம்பு நம் தோட்டங்களில் சாதாரணமாகக் காணப்படும் ஒரு வகைப் பாம்பு.  ஓலைப்பாம்பு ஒன்றினை அடித்தால் ஒன்பது வரும்”, என்பார்கள்.  இது ஓரளவு உண்மையே.  சொந்த அனுபவத்தில் சொல்கிறேன்.

 

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பது, நாற்பதுகளில் திருச்சி, பொன்மலையில் நான் வசித்து வந்தபோது எங்கள் வீட்டுத் தோட்டத்திற்கு நிறைய பாம்புகள் வரும்.  அடிக்கடி அடிப்போம். ஒரு முறை புதராக மண்டிக் கிடந்த கொடி சம்பங்கியில் ஒரு பாம்பினை அடிக்கப் போய் அங்கிருந்து நாலா பக்கமும் பல பாம்புகள் சிதறி ஓடின.  எங்களுக்கு ஒரே ஆச்சரியம், திகில்.  அப்படி நடக்கக் காரணம் ஓலைப் பாம்புகள் கூட்டமாக வாழும் இயல்புடையவை என்பதுதான் எனப் பின் நாட்களில் அறிந்தேன்.

சாரைப் பாம்பு :  இதன் ஆங்கிலப் பெயர் ‘Rat snake’.  இப் பெயர் ஒரு காரணப் பெயர்.  இந்தப் பாம்பின் பிரதான உணவு எலிகள்.

 

Inline image 9

http://en.wikipedia.org/wiki/File:Yellowratsnake-1-.jpg

 

சாரைப் பாம்புகளில் சுமார் 32 வகையான பாம்புகள் உள்ளனவாம்.

 

இப்பாம்பு பற்றிப் பரவலாக நிலவி வரும் எண்ணம் இது நல்ல பாம்பின் காதலன் என்பது.  தவறான ஒரு கருத்து இது.  இப்படி ஒரு தவறான எண்ணம் வரக் காரணம் இதன் உருவமும் நிறமும் நல்ல பாம்பினைப் போல இருப்பதுதான்.

 

பாம்புகளைப் பற்றிப் பார்த்தோம்.  அடுத்த கடடுரையில் பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதைப் பார்ப்போம்.

 

(தொடரும்)  

 

நடராஜன் கல்பட்டு

பாம்பு – 2

 

சில இந்தியப் பாம்புகளைப் பற்றி சொல்வதற்கு முன் பாம்பின் உடலமைப்பில் உள்ள சில விசேஷங்கள் பற்றிக் கூற விரும்புகிறேன்.

உடலுருப்புகள்  பாம்பின் உடல் குறுகலாய் நீண்டு ஒரு கொடி போல இருப்பதால் அதன் உள் உருப்புகளும் மெலிந்து நீண்டு இருக்கும்.  மற்ற மிருகங்களைப் போல் அதன் நுரை ஈரல்கள் இராது.  ஒன்றுடன் ஒன்று இணைந்திராமல், வலது ஈரல் நீண்டு உடலின் பாதி தூரம் வரை செல்லும்.  இடது நுரை ஈரல் குட்டையானது.  சில பாம்புகளில் இது இல்லாமல் கூட இருக்கலாம்.  அல்லது மூன்றாவதாக மிகக் குட்டியான ஒரு நுரை ஈரலும் இருக்கலாம்.  இவ்வாறு நீண்ட நுரை ஈரலைக் கொண்டதால் தான் பாம்பு மூச்சு விடுவது மனிதனையோ மற்ற மிருகங்களையோ போல இரண்டு மூன்று வினாடிகளில் முடிந்து விடாமல் பெரியதோர் பலூனிலிருந்து காற்றை விடுவது போல புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்……….ஸென்று பல வினாடிகள் நீடிக்கின்றது.மூத்திரக் காய்கள் இரண்டு உண்டு.  ஆனால் ஒன்றன் பின் ஒன்றாய்.

 

ருசி பார்த்தல் பாம்பினால் செய்ய முடியாத ஒரு காரியம்.  காரணம் அதன் நாக்கு மணம் நுகர்வதர்க்காக மட்டுமே அமைக்கப்பட்ட ஒன்று.  அதனால் என்ன?  கண்ணால் பார்த்து மணம் நுகர்ந்தால் போதுமே தனக்குப் பிடித்த உணவினைக் கண்டு கொள்ள.

 

கீழ் வரும் படத்தினைப் பாருங்கள் பாம்பின் உடலுள் உருப்புகள் எவ்வாறு அமைந்துள்ளன என்று.

பாம்பு-2-பாம்பின் உடல் உறுப்புகள்

பாம்பின் உடல் உறுப்புகள்

பாம்பின் வாய்  பாம்பின் தாடைகள், நம் தாடைகளைப் போல் ஒன்றோடொன்று நிரந்தரமாக இணைக்கப் பட்டவை அல்ல.  தேவைப் படும் போது தாடை மூட்டுகள் கழன்று தாடைகளை வேண்டுமளவுக்கு விரித்துக் கொள்ள முடியும்.  அதனால் தான் பாம்பு தன் தலையை விட அதிக பருமனான இரையை கவ்வி விழுங்க முடிகிறது.

 

இனப் பெருக்கம்  மிருகங்களை முட்டை இட்டுக் குஞ்சு பொரிப்பவை, குட்டி போட்டு பால் கொடுப்பவை என இரு வகையாகப் பிரிப்பார்கள்.  ஆனால் பாம்புகளில் மூன்று வகை உண்டு.  முட்டை இட்டுக் குஞ்சு பொரிப்பவை, முட்டையை வயிற்றுக்குள் வைத்திருந்து அது குஞ்சாக வெளி வரும்போது வெளிக் கொணரும் பாம்புகள் மற்றும் வயிற்றுக் குள்ளேயே கருவினுக்கு முட்டையின் வெள்ளைக் கருவினாலும், தொப்புள் கொடி போன்றதொரு அமைப்பின் மூலம் தன் உடலிலிருந்தே உணவு கொடுத்தும் வளர்த்துப் பின் குட்டி வளர்ச்சி அடைந்ததும் வெளிக் கொணரும் பாம்புகள் என்பவை அவை.

 

பாம்பின் முட்டைகள் கோழி முட்டை போல கெட்டியான ஓடுகள் கொண்டவை அல்ல.  மெல்லிய தோல் போன்ற ஒன்றுதான் முட்டையின் சட்டை.

 

பல பாம்புகள், நல்ல பாம்பு உட்பட, முட்டை இட்டபின் அவற்றைப் பற்றிக் கவலைப் படுவதில்லை.  ராஜ நாகம் முட்டைகளை கூடு அமைத்து அதில் இடும்.  மலப்பாம்பு சுமார் முப்பது முதல் நூறு முட்டைகள் வரை இட்டு அவற்றை ஒன்றாகச் சேர்த்து தன் உடலால் சுருட்டி இறுக்க அணைத்துக் கொண்டு அடை காக்கும்.

 

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... தொந்திரவு பண்ணாதீங்க

“உஸ்ஸ்ஸ்ஸ்………தொந்திரவு பண்ணாதீங்க. நான் அடை காத்துகிட்டு இருக்கேன்.”

பாம்புகள் குளிர் ரத்தப் பிராணிகள் என்று சொல்வார்கள்.  அதாவது அவற்றின் உடல் உஷ்ணம் நம் உடல்கள் போல ஒரே நிலையில் இருக்காது.  வெளியெ என்ன உஷ்ணமோ அதே நிலையில் இருக்கும்.  ஆனால் அடை காக்கும் மலைப் பாம்பு தன் உடலின் உஷ்ணத்தை முட்டைகள் குஞ்சுகளாக மாறத் தேவையான உஷ்ண நிலையான 88 முதல் 90 டிகிரி ஃபேரன்ஹீட் வரையான நிலையில் வைத்துக் கொள்கிறது.  எப்படித் தெரியுமா?  தன் உடலில் உள்ள தசைகளை இறுக்கி விரிப்பதன் மூலம் இந்த வேலையைச் செய்கிறது மலைப் பாம்பு.

 

விரியன் பாம்புகள் குட்டி போடும் இனம்.

தென் அமெரிக்கப்  பாம்புகளான பச்சை அனகொண்டாவும் போ கன்ஸ்ட்ரிக்டாரும் வயிற்றுக் குள்ளேயே முட்டையியனை வைத்து முட்டைக்குள் இருக்கும் கருவிற்கு, முட்டைக்குள் கருவினைச் சுற்றி இருக்கும் பதார்த்தம் மூலமாகவும், தன் உடலில் இருந்தே தொப்புள் கொடி போன்ற உருப்பின் வழியேயும் உணவளித்து பின் கரு குட்டியாக வளர்ச்சி அடைந்தவுடன் அதை வெளிக் கொணரும்.

 

பாம்பு-2-பச்சை அனகொண்டா

பச்சை அனகொண்டா

 

பாம்பு-2-போ கன்ஸ்ட்ரிக்டார்

போ கன்ஸ்ட்ரிக்டார்

பாம்புகள் புணருதல்  நல்ல பாம்பும் சாரைப் பாம்பும் புணர்ந்துதான் பின் நல்ல பாம்புகள் முட்டை இடுகின்றன என்று சிலர் சொல்வார்கள்.  இது ஒரு தவறான கருத்து.  ஒரே இனப் பாம்புகள் தான் புணர்ந்து இனப் பெருக்கம் செய்கின்றன.

 

கீரியும் பாம்பும் : பாம்பின் ஜன்ம விரோதி கீரிப் பிள்ளை.  கீரியின் உணவு பாம்பு.  கீரி பாம்புடன் இயற்கைச் சூழலில் சண்டை போடுவது பார்க்க வேண்டிய ஒன்று.  கீரி தன் அடர்ந்த ரோமங்களை சிலிர்த்துக் கொண்டு தன் உருவத்தினை இரு மடங்குக்குமேல் ஆக்கிக் கொள்ளும்.  பின் பாம்பின் பாதி உடலைப் பிடித்துக் கவ்வுவது போல் பாசாங்கு செய்யும்.  பாம்பு அதனைக் கொத்த வரும்போது தன் தலையைத் திருப்பிக் கொண்டு விடும்.  பாம்பு தன் கண்ணுக்கு உடலெனத் தெரியும் கீரியின் ரோமங்களைத் தாக்கும்.  ஆனால் அதன் விஷப் பற்கள் கீரியின் உடலைத் தாக்காது.  ரோமங்களைத் தான் தாக்கும்.  இப்படியே பல முறை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாகச் சுற்றிச் சுற்றி வந்து கீரி பாம்பினைக் களைப்படையச்செய்யும்.  பாம்பு முற்றிலுமாகக் களைத்திருக்கும் போது கீரி அதன் தலைக்கு சற்று கீழே கவ்விக் கடிக்கும்.  பாம்பின் உயிர் போனபின் மெல்ல மெல்லத் தலையைத் தவிற மற்ற பாகங்களைத் தின்று விடும்.

 

பாம்பு கீரி சண்டை-www.pixgallery.in

பாம்பின் எதிரி கீரி

 

பாம்பின் ஊணவு எலி, பல்லி, பறவைகள், சிறிய  விலங்குகள்.  அது சரி.  பாம்பு யாருக்கு உணவு?  கழுகு, கருடன், கீரி இவற்றுக்கு மட்டும் தானா?

 

இல்லை.  பாம்பு மனிதனுக்கும் உணவு.  கிழக்காசிய நாடுகளில் பலருக்கு பாம்பு மிகப் பிடித்த உணவு.  தலையை வெட்டி விட்டால் பாம்பு ஒரு மாமிசப் புடலங்காய்தானே?

 

பாம்பின் ரத்தத்தைக் குடித்தால் ஆணின் வீரியம் அதிகரிக்கும் என நம்புவோரும் உள்ளனர் கிழக்காசியாவில், அதுவும் பாம்பு உயிருடன் இருக்கும்போதெ அதன் உடலில் இருந்து எடுக்கப் படும் ரத்தம்!

 

“கொடிய விஷமுள்ள பாம்பு எது, விஷமற்ற பாம்பு எது என்று கண்டு பிடிக்க முடியுமா?” என்றால் முடியும் பாம்பின் தலையைப் பார்த்துக் கண்டு பிடிக்கலாம்.

 

பாம்பு-2-விஷப் பாம்பைக் கண்டறிதல்

விஷப் பாம்பைக் கண்டறிதல்

 

1. விஷமற்ற பாம்பின் கண்களின் பாப்பா வட்ட வடிவில் இருக்கும்.  விஷமுள்ள பாம்புகளின் கண்களில் இது நடுவில் சற்றே அகன்று மேலிருந்து கீழாக இரு கோடுகள் போலிருக்கும்.

 

  1. விஷமற்ற பாம்பின் மேல் தாடையில் கண்களுக்குக் கீழாக செதிள்கள் ஒரு வரிசைதான் இருக்கும்.  விஷமுள்ள பாம்பிற்கு இங்கு இரண்டு மூன்று வரிசைகள் செதிள்கள் காணப்படும்.

 

  1. விஷப் பாம்பின் மேல் தாடையில் நாசித் துவாரங்களின் பக்க வாட்டில் சிறிய பள்ளம் இருக்கும்.

 

ஆனால் ஒன்று.  பாம்பு நாம் பார்ப்பதற்காக தலையைக் காட்டிக் கொண்டு அமைதியாக உட்கார்ந்து கொண்டு இருக்க வேண்டுமே! அதற்கு என்ன செய்ய?

 

பாம்பு ஒருவரைக் கடித்துவிட்டால் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை அடுத்த கட்டுரையில் பார்க்கலாமா?

 

(தொடரும்)                                           கல்பட்டு நடராஜன்

 

பாம்பு முதல்பகுதி 

பாம்பு …!

இந்தப் பதிவு நான் எழுதியது அல்ல. வல்லமை குழும நண்பர் திரு கல்பட்டு நடராஜன் அவர்கள் எழுதியது. அவரது முன் அனுமதியுடன் அவரது பதிவுகளை வாங்கி இங்கு பதிகிறேன்.

நன்றி நடராஜன் ஸார்!

இதை எனது ஐம்பதாவது பதிவாக பதிவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

 

பாம்பு – 1

பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு கேட்டது, “கருடா சௌக்யமா? என்று

“அவரவர் இடத்தில் இருந்தால் எல்லோரும் சௌக்யமே”, என்றே கருடன் சொன்னது.

 

சரி பாம்பின் இடம், அதான் வீடு, எது என்றால் புற்றென்றுதான் எல்லோரும் சொல்வார்கள்.  “அது என்ன பாம்பு தானாகக் கட்டிகொண்ட வீடா?அல்லது வாடகை வீடா?” என்றால் இரண்டும் இல்லை.  பலவந்தமாக ஆக்கிரமித்துக் கொண்ட வீடு அது.

 

புற்று என்பது கறையான்கள் தாம் வாழக்கட்டிக்கொண்ட வீடு.  அந்தப் புற்றுகளுக்குள்ளோ அல்லது எலி வளைகளுக்குள்ளோ புகும் பாம்புகள் வீட்டு சொந்தக் காரர்களைத் தன் உணவாக்கிக் கொண்டு மிக மிக சௌகரியமாகக் குடும்பம் நடத்தும்.வீட்டைக் கட்டியது நாங்கள். குடி வந்தவரோ கூசாமல் தின்கிறார் எங்களை என்கின்றனவோ இந்தக் கரையான்கள்?

பாம்பு-1-புற்று

எலிகளின் கதையும் இதேதான்.  பாம்புகளுக்கு மிகவும் பிடித்த உணவு எலிகளும் தவளைகளும்.

நம் நாட்டில் உற்பத்தியாகும் தானியங்களில் சுமார் 20 முதல் 25 சத விகித வரையான தானியங்களைத் தின்று தீர்ப்பது எலிகள் என்கின்றனர் நிபுணர்கள்.  அந்த எலிகளின் வளைகளைத் தங்கள் வீடுகளாக்கிக் கொண்டு, எலிகளை உணவாக்கிக் கொண்டு, அவற்றின் பெருக்கத்தைக் கட்டுக்குள் வைப்பது பாம்புகள்.  இப்போது சொல்லுங்கள் பாம்புகள் நம் நண்பர்களா இல்லையா என்று.

 

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள்.  ஆனால் எல்லாப் பாம்புகளுமே உயிர் கொல்லும் விஷம் கொண்டவை அல்ல.  ஆனால் எவை கடித்தால் உயிருக்கு ஆபத்து, எவை கடித்தால் ஆபத்து இல்லை என்று எப்படித் தெரியும்?  அதனால் தான் பாம்பைக் கண்டவுடன் அதை அடித்துக் கொன்று விடுகிறார்கள் பலரும்.

 

பாம்பு தானாகச் சென்று யாரையும் கடிப்பதில்லை.  நாம் அதைத் துன்புறுத்தினாலோ அல்லது தப்பிப் போய் மிதித்து விட்டாலோ தான் அது நம்மைக் கடிக்கும்.

 

அன்டார்டிகா கண்டத்தைத் தவிற மற்ற எல்லாக் கண்டங்களிலும் பாம்புகள் உள்ளன. பாம்புகளில் கிட்டத்தட்ட சுமார் 3000 வகையான பாம்புகள் உள்ளன. இவற்றுள் சுமார் 534 வகைப் பாம்புகளே மிகக் கொடிய விஷம் கொண்டவை.

 

இந்த மூவாயிரம் வகையான பாம்புகளில் பத்தே சென்டி மீடர் நீளத்தில் மண் புழு போன்றிருக்கும் செய்யான் பாம்பிலிருந்து (Leptotyphlops carlae)  அனகொண்டா என்ற 7.5 மீடர் பாம்பு, மற்றும் 9.0 மீடர் நீளமுள்ள மலைப் பாம்பு வரை உள்ளன.  பல ஆண்டுகளுக்கு முன் 15 மீடர் நீளம் வரை உள்ள பாம்புகள் (Titanoboa cerrejonensis) கூட இருந்தனவாம்.செய்யான் பாம்பிற்குக் கண் பார்வை கிடையாதாம்.

பாம்பு-1-செய்யான் பாம்பு

இந்த செய்யான் பாம்பு மேற்கிந்தியத் தீவுகளில் ஒன்றான பார்படாஸில் மட்டுமே காணப்படுகிறது எனச் சொல்கின்றனர் பாம்பு பற்றி அறிந்தோர்.  ஆனால் இந்தப் பாம்பை நான் பல முறை பார்த்திருக்கிறேன் நம் ஊர்களிலும்.  இது எந்த அளவுக்கு நாம் நம்மைச் சுற்றி உள்ளவை பற்றிக் குறிப்புகள் எடுத்து வைக்கிறோம்,  அவற்றைப் பற்றி ஆராய்ச்சிகள் செய்கிறோம் என்பதைக் காட்டுகிறது.

 

மிகச் சிறிய பாம்பினைப் பார்த்தோம்.  மிகப் பெரிய பாம்பைப் பார்க்க வேண்டாம்?  அதுதான் மலைப் பாம்பு,  சுமார் 9 மீடர் நீளம் வரை வளரக் கூடியது.

 

மலைப் பாம்பின் உணவு பறவைகள் மற்றும் சிறிய மிருகங்கள் ஆகும்.  வாயினால் கவ்விப் பிடித்த இரையினை தன் உடலால் சுற்றி வளைத்துப் பின்னர் தனது தசைகளை இறுக்கிக் கொண்டே போய் அவற்றின் உயிரை எடுத்து விடும்.  அந்த இறுக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பது அனுபவித்துப் பார்த்தால் தான் தெரியும்.

பாம்பு-1-மலைப் பாம்பு

மலைப்பாம்பு அதன் உயிருக்கு ஆபத்து என்று வந்தாலொழிய தரையில் மெதுவாகத்தான் ஊர்ந்து செல்லும்.  மரத்தின் மீதும் ஏறும்.  தண்ணீரில் நன்றாக நீந்திச் செல்லும்.வயிறு புடைக்க உண்ட பின் சில நாட்கள் பட்டினி கிடக்கும் உண்ட இரையின் உடல் அளவு பொருத்து.  ஒரு பாம்பு இரண்டு வருடம் வரை பட்டினி கிடந்ததாகக் கூடக் குறிப்பில் உள்ளது.

 

கட்டுரை என எழுதும்போது “நான்” வருவது தவிற்கப் பட வேண்டிய ஒன்று.  ஆனால் இது படித்துப் பட்டம் பெருவதற்காக எழுதும் கட்டுரை அல்ல.  பாம்பைப் பற்றி ஒரு நிபுணர் எழுதப் போகும் கட்டுரையும் அல்ல.  பாம்பைப் பற்றி ஒரு பாமரன் எழுதப் போகும் கட்டுரை.  ஆகவே நடுவில் “நான்” நுழைவதை நீங்கள் மன்னித்துக் கொள்ளத் தான் வேண்டும்.

 

திருச்சியில் சிங்காரத்தோப்பு என்று ஒரு இடம்.  அதில் உள்ள வீடுகள் எல்லாம் கிருஸ்துவர்களாக மாறிய முன்னாள் அந்தணர்கள் வீடுகள்.  அவர்கள் வீட்டில் பேசுவது  அக்ரகாரத் தமிழில்.  ஆடிக்கழைப்பது, தீபாவளி கொண்டாடுவது, தாலி கட்டிக் கொள்வது என எல்லாம் உண்டு.  ஆனால் பொட்டு வைத்துக் கொள்ள மாட்டார்கள்.  சர்ச்சுக்குப் போவார்கள். அவர்களில் ஒருவர் கலஞ்சென்ற தம்பு ஐயர்.

 

தம்பு ஐயர் ஒரு பிராணிகள் விரும்பி.  அவர் வீட்டில் ஒரு நரி, ஒரு குரங்கு, ஒரு முதலை, கீரிப் பிள்ளைகள், சில முயல்கள், சில பாம்புகள், கிளி, காடை, கௌதாரி என்று பறவைகள் என ஒரு குட்டி மிருகச் சாலையே  வைத்திருந்தார். குறவர்கள் அவரது நண்பர்கள்.  தங்கு தடையின்றி விலங்குகளுக்கு ஆகாரம் வர வேண்டுமே அதற்காகத்தான்.

 

அவரது பொக்கிஷங்களை பார்த்துக் கொண்டு வரும்பு போது பாம்புகள் வைத்திருக்கும் இடத்திற்கு வந்தேன்.  “பாம்பிற்கு என்ன உணவளிப்பீர்கள்? எப்படி அளிப்பீர்கள்?” என்று நான் கேட்க அவர், “இதோ பார்”, எனச் சொல்லி பக்கத்தில் இருந்த ஒரு மூங்கில் கூண்டிலிருந்து ஒரு கௌதாரியை எடுத்து பாம்பு ஒன்று இருந்த கண்ணாடிப் பெட்டிக்குள் போட்டர்.  அவர் போட்ட அதே கணம் மின்னல் வேகத்தில் மேலெழும்பி அந்தப் பாம்பு கௌதாரியைக் கவ்விப் பிடித்தது.  பின் தன் உடலால் கௌதாரியைச் சுற்றிக் கொண்டு அதனை இறுக்க ஆரம்பித்தது.  ஓரிரு நிமிஷங்களுக்குள் கௌதாரியின் மடங்கி இருந்த கால்களும் விரல்களும் நீண்டு விரிந்தன.  அதன் உயிர் பிரிந்தது.  ஆனால் பாம்பு அதன் பிடியை விடவில்லை.  சில மணி நேரங்கள் வரை அப்படியே இறுக்கிப் பிடித்து வைத்திருக்குமாம் அது..  அவரை ஏன் நான் பாம்பின் இரை பற்றிக் கேட்டடேன் என வருந்தினேன்.

 

பின் அவர் வேறு ஒரு கண்ணாடித் தொட்டியில் இருந்த ஒரு குட்டி மலைப் பாம்பின் முதுகில் ரெண்டு தட்டுத் தட்டிக் கையில் எடுத்து அதை என் முன் கையில் வைத்தார்.  அது மெல்ல நகர்ந்து என் கையைச் சுற்றி கொண்டது.  பின் மெதுவாக என் கையை இறுக்குவதை உண்ர்ந்தேன்.  சில வினாடிகளில் அதன் இறுக்கம் அதிகமாகிக் கொண்டே போனது.  என் கையில் ரத்த ஒட்டம் நின்று போனதோ என்னவோ விரல்கள் மறத்துப் போக ஆரம்பித்தன.  நான், “அதை எடுத்து விடுங்கள்”, எனக் கத்தினேன்.  “நீயே எடு” என்றார்.  நான் வாலைப் பிடித்து எடுக்கப் போனேன்.  தம்பு ஐயர் என்னைத் தடுத்து நிறுத்தி முதலில் அதன் முதுகில் மெதுவாக ரெண்டு தட்டுத் தட்டி விட்டு எடு.  இல்லை என்றால் அது உன்னை கடிக்கலாம்.  பின் அதன் வாய்க்குள் இருந்து உன் கையை எடுப்பது கடினம்”, என்றார்.   அவர் சொன்னபடி செய்து மெல்ல அதன் வாலைப் பிடித்து சுற்றிச் சுற்றி பாம்பை என் கையிலிருந்து கழற்றினேன்.  அன்று அனுபவத்தில் தெரிந்து கொண்டேன் பாம்பு எப்படி இறுக்கிப் பிடித்துத் தன் இரையைக் கொல்கிறது என்று.  உடும்புப் பிடி என்பார்களே அதை விடப் பல மடங்கு கெட்டியானது தான் பாம்புப் பிடி.

 

அன்று இரவு உணவு உண்ணப் பிடிக்கவில்லை.  காரணம் ஓரு கொலை நடக்கத் துணை போன குற்ற உணர்வுதான். சரி என் கதையை விட்டு பாம்பின் கதைக்கே திரும்புவோம்.

 

நகர்தல் : பாம்பின் கால் பாம்பறியும் என்பர்.  ஏனெனில்  பிறர் கண்களுக்குத் தெரியும் படியான புறக் கால்கள் இல்லை பாம்பிற்கு.  அதன் ஒவ்வொரு செதிளுமே இரு கால்கள்தான்.  அதன் உடலில் சாட்டை போல் நீளமான முதுகெலும்பில் இருந்து முளைத்துள்ள விலா எலும்புகள் தசைகள் உதவி கொண்டு செதிள் களை இயக்க பாம்பு இடம் விட்டு இடம் நகர்கிறது. மரம் ஏறுகிறது.  நீந்துகிறது.

 

மெதுவாகச் செல்லும் போதும், மணல் பாங்கான இடங்களில் செல்லும்போதும் வளைந்து வளைந்து செல்லும் பாம்பு வேகமாக ஓட நினைத்தால் நேர் கோட்டிலே வெகு வேகமாகப் பறக்கும், வானில் அல்ல தரையில்தான்.  அப்படி நேர் கோட்டில் போகும்போது அதன் முதுகில் அலைகளென எழும்பி இறங்கும் அசைவுகள் முன்னிருந்து பின் செல்வதைக் காணலாம்.

 

நுகர்தல் :  பாம்பிற்கு மிக நல்ல நுகரும் சக்தி உண்டு.  எலி போன்ற தன் இரை சென்ற பாதையினைக் கண்டறிவது இந்த மிகத் துல்லியமான நுகர் சக்தியால் தான்.  ஆனால் நம்மைப் போல் நாசிகளால் நுகர்வதில்லை பாம்புகள்.  பின் எப்படி நுகர்கின்றன அவை?

 

ஒவ்வொரு வினாடியும் தன் இரண்டாகப் பிளந்த நாக்கினை வெளியே நீட்டி இப்படியும் அப்படியுமாக பல திசையிலும் திருப்புகிறதே அது ஏன் தெரியுமா?  நுகர்வதற்காகத் தான்.

 

ஒலி கேட்டல் :   “மகுடியின் இசையில் மயங்கியது நாகம்” என்கிறார்களே அது உண்மையா என்றால் இல்லை.  பிடாரனின் கை அசைவுகளை கண் வாங்காது பார்ப்பது, பிடாரன் நம்மைத் தாக்க வருகின்றானா அல்லது நாம் அவனைத் தாக்க வேண்டுமானால் அதற்குத் தக்க தருணம் எது என்ற சிந்தனையில்தான்.

 

“இடியேருண்ட நாகம் போல்….” இது எந்த அளவு உண்மை?  உண்மை.  நூற்றுக்கு நூறு உண்மை.  பாம்புகளுக்கு இடியின் ஒலியைக் கேட்கவும் முடியும்.  மற்ற ஒலிகளையும் கேட்கவும் முடியும்.  ஆனால் அவ்வாறு கேட்பதற்கு  நம்மைப் போன்று புறச் செவிகள் கிடையாது.  அகச் செவிகள் உண்டு.  அந்த அகச் செவிகள் அதன் உடலில் உள்ள ஒவ்வொரு செதிளோடும் நரம்புகள் மூலம் இணைக்கப் பட்டிருக்கும்.   ஒலிகள் தரையில் உண்டாக்கும் அதிர்வுகளைச் செதிள்களின் மூலம் உணர்ந்து ஒலிகளைக் கேட்டறிகிறது.

 

ஒளி காணல் :  பாம்பின் கண்களுக்கு இமைகள் கிடையாது.  அவை எப்போதுமே திறந்திருக்கும், தூங்கும் போதும் கூட.  தூங்கும் போது வெளிச்சம் இடையூறாக இருக்குமே? என்ன செய்ய?  அப்போது பாம்பு தன் கண்களில் உள்ள பாப்பாவை (Pupa) இடைவெளி இல்லாது இறுக்க மூடிக் கொள்ளும்.

 

விஷம் :  “பாம்பிற்குப் பல்லில் விஷம்.  தேளுக்குக் கொடுக்கில் விஷம்.   அந்த ஆளுக்ககு உடம்பு பூரா விஷம்.”  இந்தக் கூற்றுகள் எவ்வளவு தூரம் உண்மை?  பின்னது இரண்டும் நூற்றுக்கு நூறு உணமையாய் இருக்கலாம்.  முன்னது ஐம்பது சத வீதம் உண்மை.  பாம்புக்குப் பல்லில் விஷம் இல்லை.  அது விஷத்தினை வைத்தியர் ஊசி கொண்டு மருந்து ஏற்றுவது போல் பல்லின் வழியாக நம்முள் செலுத்துகிறது.  விஷம் இருப்பது அண்ணத்தின் மேலாக உள்ள பையில்.

பாம்பு-1-விஷப் பல்

பாம்பு தன் இரு விஷமேற்றும் பற்களை விமான ஓட்டி தரையை விட்டு மேலே விமானம் எழும்பிய உடன் சக்கரங்களை உள்ளிழுத்துக் கொள்வது போல உள்ளிழுத்துக் கொள்ளவோ, மடக்கிக் கொள்ளவோ முடியும்.  அது மட்டுமல்ல. விமான ஓட்டி உள்ளிழுத்த சக்கரங்களைப் பலகைகள் வந்து மூடிக் கொள்வது போல தசைகள் பக்க வாட்டில் இருந்து உள் நோக்கி நகர்ந்து அப் பற்களை மூடிக் கொள்ளும்.

 

பாம்பின் விஷம் பிறரைத் தாக்குவதற்காகவோ அதன் தற்காப்பிற்காகவோ அல்ல. அது தன் இரையினைக் கொல்வதற்காகவோ அல்லது மயக்கமுறச் செய்வதற்காகவோ அல்லது இரையினை எளிதாக ஜீரணிப்பதற்குத் தயாராக்கவோ தான்.

 

தோலுரித்தல் :  தோலுரித்தல் என்றதும் சிலர் மணி பர்ஸ், இடுப்புக் கச்சை இவை செய்வதற்காகத் தோலை உரிக்கிறார்களே அப்படி என்று எண்ணி விடாதீர்கள்.  பாச்சை, வெட்டுக்கிளி, இடையான், தேள் போன்ற சில பூச்சிகள் வளர்ச்சிக்குத் தடையாக மாறும் கெட்டி அடைந்த தோலின் புறச் செல்களிலிருந்து சட்டையைக் கழற்றி எறிவது போல வளியே எறிகின்றனவே அது பற்றிதான் சொல்கிறேன் இங்கு.  பாம்பு அவ்வப் போது தன் சட்டையைக் கழற்றிப் போடும்.

 

பாம்பு சட்டை உரிப்பது வளர்ச்சிக்காக அல்ல.   அதனைக் கடித்துசத்தினை உரிஞ்சும் பேன் போன்ற பூச்சிகளிடமிருந்தும், வேறு பல கிருமிகளிடமிருந்தும் விடுதலை பெறவும், கீரல்கள் மிகுந்த மற்றும் இறந்து போன வெளி செல்களை விட்டெறியவும் தான்.சட்டை உரிக்கும் நேரம் வந்தால் வெளிப் புறச் செல்களுக்கு உள்ளாக அண்மையில் இருக்கும் செல்கள் திரவமாக மாறி வழுக்கலை அளிக்கிறது.  சட்டையின் வால் பக்கத்தை சொறசொறப்பான குச்சிகளில் ஒட்டச் செய்து அதிலிருந்து தன் உடலை மெல்ல வெளியே இழுத்துக் கொள்கிறது.

 

நாக ரத்தினம் :  “வயது முதிர்ந்த பாம்புக்குக் கண் சரியாகத் தெரியாது.  அதன் தலையில் உள்ள விஷம் கெட்டி அடைந்து ரத்தினமாக மாறும்.  அதனை இரவில் பாம்பு கக்கிவிட்டு அந்த ரத்தினம் வீசும் ஒளியில் தன் வேலைகளைச் செய்யும்.”  இது உண்மையா, கட்டுக் கதையா?  பின்னது என்றே நான் சொல்வேன்.

 

கட்டுரையும் பாம்பைப் போலவே நீண்டு கொண்டு போவதால் இப்போதைக்கு நிறுத்திக் கொண்டு மீண்டும் தொடர்கிறேன்.

 

 

தொடரும்…                                  நடராஜன் கல்பட்டு

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

 

நடராஜன் கல்பட்டு