முதல் பகுதி இரண்டாம் பகுதி மூன்றாம் பகுதி
தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு:
இவையெல்லாம் சரியான விதத்தில் செயல்முறைபடுத்தப் பட்டால் நல்ல பலன்கள் ஏற்படும் என்று பாரதி ஷர்மா கூறுகிறார். இவர் புது தில்லி குழந்தை நல குழுவின் முன்னாள் தலைவர். ஷக்தி ஷாலினி என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் அமைப்பாளர். இவர் கூறுகிறார்: ‘2007 ஆம் ஆண்டு ஒரு 5 வயதுச் சிறுமி கொஞ்ச நேரம் தனிமையில் இருக்க நேர்ந்தது. (அம்மா ஊருக்குப் போய்விட்டாள்; அப்பா இரவு பணி முடிந்து திரும்ப வேண்டும்.) பக்கத்துவீட்டிலிருந்து இவளுக்குத் துணைக்கு வர வேண்டிய பெண்மணி சிறிது தாமதமாக வந்து சேருவதற்குள், அருகிலிருந்த வீட்டிலிருந்த ஒருவனால் பலாத்காரம் செய்யப்பட்டு ஒரு மாதம் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய அளவிற்கு காயப்படுத்தப்பட்டாள்.
அந்தப்பகுதி மக்கள் ஒன்று கூடி வேர்ல்ட் விஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஒரு சமூக ஆர்வலருக்கு தகவல் கொடுக்க முதல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. திருமதி சர்மாவின் முயற்சியால் ‘ஹக்’ அமைப்பிலிருந்து இலவசமாக வாதாட ஒரு வக்கீல் ஏற்பாடு செய்யப்பட்டார். நிலைமை முற்றிலும் மாறியது. பெற்றோர்கள் நடந்ததை இழிவாகக் கருதி அந்தக் குழந்தையை பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பவிருந்தனர். ஆனால் குழந்தைகள் நலக் குழுமமும், வக்கீலும் திரும்பத் திரும்ப எடுத்து சொல்லி அவர்களின் மனதை மாற்றினர். ஒரு அரசாங்க வக்கீலால் செய்ய முடியாத ஒன்று இது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மெத்தனமாக 7 முறை வழக்கை ஒத்திவைத்தார். வக்கீல் இதனை தில்லி உயர் நீதிமன்றத்திடம் தெரிவிக்க, வழக்கு நடைபெற வேண்டிய வழிவகைகள் வகுக்கப்பட்டன. வழக்கு நடந்து முடிக்க 3 வருடங்கள் ஆயிற்று. குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை. குடும்பம் தன் பழைய நிலைக்குத் திரும்பியது; குழந்தையும் குடும்பத்தால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
‘பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் சட்டஉதவி இன்றியமையாதது. பெற்றோர்களுக்கு என்ன செய்வது என்று தெரியாது. தேவையான பணம் இருக்காது. மிகப் பெரிய அதிர்ச்சிக்கு ஆளாகியிருப்பார்கள். இந்த சூழ்நிலையில் அர்பணிப்பு நோக்கம் கொண்ட ஒரு வக்கீலின் உதவி அவர்கள் வாழ்வையே மீட்டுத் தரும்’ என்கிறார் பாரதி.
என்ன தீர்வு?
புது தில்லியில் நடந்த குழு வன்புணர்வும், 5 வயதுச் சிறுமிக்கு ஏற்பட்ட கொடூர அனுபவங்களும் நாடு முழுவதும் எல்லோருடைய உணர்ச்சிகளையும் கொந்தளிக்க செய்திருக்கின்றன. இந்தப் போராட்டங்களினால் இந்த விஷயங்களில் நிலவும் மௌனம் கலந்திருக்கிறது, நாட்டின் மனச்சாட்சி தட்டி எழுப்பபட்டிருக்கிறது, சட்டத் திருத்தங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்றாலும், இரண்டு விஷயங்கள் உறுத்துகின்றன.
முதலாவது கற்பழிப்பவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்பது. இரண்டாவது ஆபாசப் படங்களை தடை செய்ய வேண்டும் என்பது.
நன்னெறி சார்பிலும், சட்ட விவாதங்கள் மூலமும் ஒரு ஜனநாயக குடியரசில் மரண தண்டனை சரியல்ல என்றாலும் குழந்தை வன்புணர்விற்கு மரண தண்டனை என்பது தற்கேடாகவே அமையும்.
பல குடும்பங்கள் தங்கள் குழந்தைகள் கற்பழிக்கப்பட்டன என்பதை குடும்ப மரியாதை என்ற பேரில் பேசவே விரும்புவதில்லை. இப்படி இருக்கும்போது வெளியில் சொன்னால் உங்கள் அப்பா, சகோதரர், மாமா பக்கத்து வீட்டுக்காரர் மரண தண்டனைக்கு ஆளாவார் என்றால் யார் வாயைத் திறப்பார்கள்?
ஆபாசப்படங்களுக்குத் தடை விதிப்பது சற்று சிக்கலானது என்றாலும் அதனால் பலன் ஏதும் இருக்காது.
‘அதீத காமவெறி களியாட்டங்கள் கொண்ட ஆபாசப்படங்கள் கைபேசியிலும், கணணியிலும், தொலைக்காட்சிகளிலும் வருவதைக் கட்டுபடுத்த வேண்டும்’ என்று சொல்லும் பாரதி அலி, ‘குழந்தைகள் ஒரு சினிமாவைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது நாயகன் நாயகி நெருக்கமாக இருக்கும் ஒரு சில காட்சிகள் வருகின்றன என்று சானலை மாற்றுவதைவிட முழு படமும் பார்க்க விடுங்கள். அப்போது பாலியல் உணர்வுகள் வாழ்வியலில் ஒரு அங்கம் என்றும், அது வெறும் உடல் சார்ந்த, தனியான, உணர்ச்சியற்ற ஒரு நடவடிக்கை அல்ல என்பதும் அவர்களுக்குப் புரியும்.’ என்கிறார்.
வன்புணர்வுக்குப் பலியானவர்களின் நிலை:
சுநீதா கிருஷ்ணன் 25 வருடங்களுக்கு முன் – அப்போது 16 வயதுச் சிறுமி – 8 நபர்களால் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டாள். அந்தக் கொடிய சம்பவத்தினால் மனம், உடல் இரண்டும் காயப்பட்டு பாதி செவிடாகவும் ஆனவள். ‘பலியானவள்’ என்று சமூகம் அவளுக்கு பெயர் சூட்ட விரும்பினாலும், தான் அந்தக் கொடுமையிலிருந்து தப்பிப் பிழைத்தவள் என்றும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராகப் போராடுபவள் என்றும் சொல்லிக் கொள்ளவே விரும்புகிறாள். தன் முகத்தை மறைக்கவோ, தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவோ வெட்கப் படுவதில்லை அவள். இந்தக் கொடுமையிலிருந்து தப்பி பிழைத்தவர்கள்தான் முதலில் தமக்கு ஏற்பட்ட அவமானத்திலிருந்து வெளி வரவேண்டும் என்கிறாள்.
‘தெஹெல்கா’ அவளை முதல் முறை சந்தித்தபோது, ஊடகங்களின் ஓரவஞ்சனையை கடுமையாகத் திட்டினாள். அவள் சில ரசிக்கத்தகாத விஷயங்களைச் சொன்னாள். ‘பத்திரிக்கையாளர்கள் கற்பழித்தவர்களை கண்டுகொள்வதில்லை – அப்படியே செய்தாலும் அவர்கள் கீழ் வர்க்கத்தைச் சேர்ந்தவராகவோஅல்லது பெயர் தெரியாத குற்றவாளியாகவோ இருப்பார்கள். மகளை தனியிடத்திற்கு அழைத்துச் செல்லும் தந்தையையோ, வீட்டில் யாருமில்லாத போது மட்டுமே வரும் ‘மாமா’ வைப் பற்றியோ எழுதுவதில்லை.’
‘குடும்பங்களில், நிறுவனங்களில் நடக்கும் வன்முறைகள் வெளியே வருவதில்லை.புது தில்லி பேருந்தில் நடந்த குழு வன்புணர்வு, 5 வயதுச் சிறுமி வன்புணர்வுக்கு ஆளானது எல்லாவற்றிற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வீதிகளில் வருவார்கள்; ஆனால் எண்ணிலடங்கா சிறுவர்களும் சிறுமிகளும் தினந்தோறும் இந்த மாதிரி குற்றங்களுக்கு சொந்த வீட்டிலேயே ஆளாவது, பல பெண்கள் அரசுப் பணியாளர்களால் துன்புறுத்தப்படுவது வெளியே வராது. கற்பழிப்புக்கு எதிரான சட்டம் சரியான வழியைக் காட்டினாலும், இராணுவ வீரர்களால் பெண்கள் கற்பழிக்கப்படுவதையும், மனைவியின் விருப்பத்திற்கு எதிராக கணவன் அவளை கூடுவது பற்றியும் அதிகமாக எதுவும் கூறவில்லை. குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பதைப் பற்றிய சொரணை வர வேண்டுமெனில் ஏற்படுத்த வேண்டுமெனில், இவற்றை தனியான ஒரு குற்றமாகப் பார்ப்பதை நிறுத்த வேண்டும்.’
வன்புணர்வு, பலாத்காரம், கற்பழிப்பு என்று எப்படி சொன்னாலும், இந்த சமூக நோயை அடியோடு அகற்ற பிரச்னையின் ஆழத்திற்குச் சென்று தான் ஆக வேண்டும்!