Category Archives: Life

வலி நல்லது!

pains

பிப்ரவரி மாதம் சினேகிதி (திருமதி மஞ்சுளா ரமேஷ்) இதழில் வெளியான எனது கட்டுரை

‘களிமண்ணாகவே இருக்க விருப்பமா? என்ற தலைப்பில் வெளியாகி இருக்கிறது.  நான் கொடுத்திருந்த தலைப்பு : வலி நல்லது

ஒரு நாள் இணையத்தை மேய்ந்து கொண்டிருந்த போது ஒரு வலைப்பதிவு – அதன் தலைப்பு: என் கவனத்தைக் கவர்ந்தது. ‘Don’t waste your pains’

 

என்ன தலைப்பு இது? என்ன சொல்ல வருகிறார்  என்று புருவங்களில் முடிச்சுடன் படிக்க ஆரம்பித்தேன். படித்தபின் வியப்பின் உச்சத்திற்கே போய்விட்டேன், எவ்வளவு பெரிய உண்மையை அவர் விளக்கி இருக்கிறார் என்று. ரொம்பவும் சஸ்பென்ஸ் வைக்காமல் அதை இதோ உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.

 

‘நான் எத்தனை பாடுபட்டிருக்கேன் தெரியுமா? வாழ்க்கையோட ஒவ்வொரு கட்டத்திலேயும் துன்பங்கள், அவமானங்கள், வேதனைகள், வலிகள்…. ‘

 

இப்படி நம்மில் பலர் சொல்கிறோம். இந்த மாதிரி துன்பங்கள், வறுமை, அவமானங்கள் இவற்றிலிருந்து நீங்கள் எதுவும் கற்றுக் கொள்ளவில்லையானால் நீங்கள் உங்கள் வலிகளை வீணாக்குகிறீர்கள் என்கிறார்.  இவர் சொல்வதை மேலும் கேட்போமா?

 

“என் வாழ்க்கையில் நல்லதோ, கெட்டதோ எது நடந்தாலும் அது என்னை மாற்றவும் என்னை சரியான வழியில் நடத்துவும் என்றும் நம்புகிறேன் நான்.

 

என் இளமைக்காலம் அப்படியொன்றும் துன்பமயமாக இல்லை; அதே சமயம் சுலபமாகவும் இல்லை. மனம் சோர்வாக இருக்கும்போது என் வாழ்க்கை வேறு மாதிரி இருந்திருக்கலாம்; நிறைய நடக்ககூடாதவைகள் நடந்து விட்டன என்று தோன்றும். நல்ல மனநிலையில் இருக்கையில் ‘அப்படித் துன்பப்பட்டதால் தான் நான் ஒரு நல்ல பெண்மணியாக இன்று உருவாகியிருக்கிறேன்’ என்று தோன்றும்.

 

இந்தத் துன்பங்கள் எல்லாம் என்னை பலசாலி ஆக்கியிருக்கிறது. நான் எவ்வளவு பலசாலி என்று என்னை உணர வைத்திருக்கிறது. இந்த மனோபலம் இல்லாமல் என்னால் ஒன்றும் செய்ய இயலாது என்றும் தெரிந்து கொண்டிருக்கிறேன். வாழ்வின் அக்கரையிலிருந்து பார்க்கக் கற்றுக் கொண்டிருக்கிறேன். இதனால் மற்றவர்களின் வலிகளை உணர முடிகிறது. வாழ்க்கை சுலபமாக இருந்திருக்கலாம். சுலபமாக இருக்கும் வாழ்க்கை நிச்சயம் நல்லபடியாக இருக்கும் என்று சொல்லமுடியாதே! எனக்கு ரோஜா மலர்களால் ஆன பாதை இருந்திருந்தால் நான் இப்போது இருக்கும் நானாக இருந்திருக்க மாட்டேன்.

 

சில சமயங்களில் நம் வலிகள் தான் நம்முடன் சத்தமாகப் பேசி நம்மை நல்வழிப் படுத்தும் ஆசிரியர் என்று தோன்றும்.

 

ஒரு அறிஞர்  கூறுகிறார்: ‘நமது சந்தோஷங்களின் போது இறைவன் நம் காதுகளில் கிசுகிசுப்பாகப் பேசுகிறான். நாம் பகுத்தறிவுடன் செயல்படும்போது சாதாரண குரலில் பேசுகிறான். ஆனால் வாழ்க்கையில் நாம் வலியை உணரும்போது சத்தம் போட்டு பேசுகிறான். வலிதான் இந்த காது கேளாத உலகத்தை தட்டி எழுப்ப அவன் பயன்படுத்தும் ஒலிபெருக்கி’ என்று.

 

அவர் சொல்வது முற்றிலும் சரி. நல்ல விஷயங்கள் நம் வாழ்க்கையை நடத்த உதவுகின்றன. ஆனால் கெட்ட விஷயங்கள்தான் நம்மை முட்டிப்போட வைத்து, நம் தவறுகளை நமக்கு உணர்த்தி, நம்மை வளரச்செய்து நம்மை மாற்றவும் செய்கின்றன. நமது வாழ்க்கையின் ஒவ்வொரு பருவமும் ஒரு பயனுக்காகவே. இன்றைக்கு நான் அனுபவிக்கும் இன்னல்கள் நாளைய இன்னல்களை எதிர்கொள்ள எனக்கு உதவுகின்றன. அவைகளிலிருந்து நான் கற்றுக்கொள்ளும் பாடங்கள் என்னை  மெருகேற்றுகின்றன’.

 

இந்தக் கட்டுரையாளர் சொன்னதையே இந்தக் கதையும் சொல்லுகிறது, படியுங்கள்.

 

ஒரு தம்பதி. அவர்களுக்கு அழகிய கலைப் பொருட்களை சேகரிக்கும் ஆர்வம் அதிகம். ஒரு முறை  ஒரு அலங்காரப் பொருட்கள் கடைக்குச் சென்றனர். அங்கு ஒரு தேநீர் கோப்பை அவர்களின் கண்களையும் கருத்தையும் கவர்ந்தது. அதைக் கையில் எடுத்து வைத்துக்  கொண்டு ரசித்துக் கொண்டிருந்த போது அது பேச ஆரம்பித்தது.

 

‘நான் எப்போதுமே இதைப் போல ஒரு அழகிய தேநீர்க் கோப்பையாக இருந்ததில்லை. முதலில் நான் ஒரு சிவப்புக் களிமண்ணாக இருந்தேன். என்னைக் கைகளால் நன்கு பிசைந்து பிசைந்து தட்டித்தட்டிக் கொடுத்தார் எனது முதலாளி. ‘ என்னை விட்டுவிடுங்கள்’ என்று சத்தம் போட்டேன். ‘இப்போதைக்கு உன்னை விடுவதாக இல்லை’ என்றார். பிறகு என்னை சக்கரத்தில் வைத்து சுற்ற ஆரம்பித்தார். ‘எனக்கு தலைசுற்றல் தாங்கவில்லை, என்னை விட்டுவிடுங்கள்’ என்று கத்தினேன்.  ‘இப்போது இல்லை’ என்றார் அவர். பிறகு என்னை கொதிக்கும் உலையில் வைத்தார். கடவுளே! இப்படி ஒரு சூட்டை நான் அனுபவித்ததே இல்லையே! ஓ ஓவென்று கதறினேன். ‘என்னை வெளியில் விடுங்கள், வெளியில் விடுங்கள்’ என்று கூப்பாடு போட்டேன். எதற்காக என்னை இப்படிச் சுட வேண்டும் என்று புரியவே இல்லை. என்ன மனிதர் இவர்!

 

ஒரு வழியாகக் உலையிலிருந்து என்னை எடுத்து வெளியில் வைத்தார். சூடு மெல்லமெல்லக் குறையத் தொடங்கியது. அப்பாடி என்று பெருமூச்செறிந்தேன். சற்று ஆறியவுடன் என் மேல் வண்ணக் கலவைகளைக் கொண்டு ஓவியம் தீட்ட ஆரம்பித்தார். வண்ணங்களின் வாசனையை என்னால் தாங்கவே முடியவில்லை. மூச்சு முட்டியது. ‘நிறுத்துங்கள், நிறுத்துங்கள்’ என்று கெஞ்சினேன். ஊஹூம் அவர் காதில் என் கெஞ்சல் விழவேயில்லை.

 

மறுபடியும் என்னை உலையில் வைத்தார். முதலில் நான் பட்ட வேதனை அடங்குமுன் இப்படியா? ஆனால் அந்த சூடு தேவலை போலிருந்தது. இந்த சூடு அதைப்போல இருமடங்கு வேதனையைக் கொடுத்தது. கதறினேன். அனல் தாங்க முடியாமல் புழுவாகத் துடித்தேன்.  துவண்டேன். எனக்குப் புரிந்தது, இந்த வேதனையிலிருந்து எனக்கு விடிவு இல்லை. இனி இப்படி ஒரு துன்பத்தை தாங்கும் வலிமை என்னிடம் இல்லை. நான் நம்பிக்கையை இழந்து கொண்டிருந்தபோது என்னை உலையிலிருந்து எடுத்து வெளியே வைத்தார். ஒரு மணி நேரம் கழித்து என்னை ஒரு கண்ணாடியில் பார்க்கச் சொன்னார். பார்த்தேன். வியந்தேன். என்னால் நம்பவே முடியவில்லை! நானா? இந்த தேநீர் கோப்பை எத்தனை அழகாக இருக்கிறது! இல்லையில்லை நான் எத்தனை அழகாக இருக்கிறேன்!

 

என் முதலாளி சொன்னார்: ‘ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள். இத்தனை கஷ்டங்கள் உனக்கு ஏற்படவில்லை என்றால் நீ வெறும் களிமண்ணாகவே இருந்து உலர்ந்து போயிருப்பாய். உன்னை சக்கரத்தில் வைத்து சுற்றும்போது நீ கத்தினாய். அப்போது உன்னை நான் விட்டிருந்தால் உடைந்து போயிருப்பாய். உலையில் உன்னை வைக்கவில்லை என்றால் நீ இறுகி இருக்க மாட்டாய். வண்ணக் கலவைகள் உன் உடம்பில் ஓவியமாக மாற உன்னை மறுபடி சுட வேண்டியிருந்தது. நீ இப்படித்தான் ஆக வேண்டும் என்று நான் மனதில் நினைத்தபடி உன்னை உருமாற்றி விட்டேன்’.

 

இந்த முதலாளி போலத்தான் கடவுளும். கடவுள் நம்மை உருவாக்கும் குயவன். அவர் மனதில் நாம் எப்படி உருவாக வேண்டும் என்று நினைக்கிறாரோ, அப்படி உருவாகவே நமக்கு வலிகளையும், வேதனைகளையும் கொடுக்கிறார். நம்முடைய பலங்கள், பலவீனங்கள் எல்லாமே அவருக்குத் தெரியும்.

அவர் கொடுக்கும் வலிகளையும் வேதனைகளையும் புரிந்துகொண்டு அவற்றிலிருந்து கற்போம் வாழ்க்கை என்னும் கல்வியை.

முதலில் குறிப்பிட்ட கட்டுரை, தேநீர் கோப்பையின் கதை இரண்டையும் படித்ததிலிருந்து ஒரு விஷயத்தை நான் உறுதியாகத் தெரிந்து கொண்டுள்ளேன். அது: எந்தப் பாடமும் கற்காமல் என் வலிகளை மறக்க நான் விரும்புவதில்லை. வலிகள் நிறைந்த பாதைகளைக் கடந்து சென்று ஒரு வலிமையான பெண்மணியாக, பக்குவப்பட்ட பெண்மணியாக உருவாக வலிகளை வீணாக்காதீர்கள்! வலி நல்லது!

காதலர் தினம் – காதல் கதை 2

valentines day
காதல் என்பது இரு நெஞ்சங்கள் அன்பால் இணைந்து, அன்பைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு உணர்வு. ஒருவரையொருவர் புரிந்துகொள்ளுதல் என்பது இதன் முக்கிய அங்கம். ஒருவரையொருவர் அப்படியே குறை நிறைகளுடன் ஏற்றுக் கொள்ளுதல் அடுத்த கட்டம். குறைகளை தன் மனம் கவர்ந்தவளுக்காக அல்லது ‘வனுக்காக’ மாற்றிக் கொள்ள முயலலாம். அல்லது நிறைவை நிறைவாக நினைத்துக் குறைகளை மன்னிக்கவும் மறக்கவும் செய்யலாம். ஏதானாலும் உனக்காக நான், எனக்காக நீ, என்று வாழ்வாங்கு வாழலாம்.
நம் இதிகாச புராணங்கள் பல காதல் கதைகளைச் சொல்லுகின்றன. ஸ்ரீ ராமாயணத்தில் பட்டாபிஷேக காட்சி. பட்டாபிஷேகம் நல்லபடியாக நடந்தேறியது. எல்லோருக்கும் பரிசுகள் கொடுத்தாகிவிட்டது; அனுமனுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று சீதைக்கு அவா. இராமபிரானைப் பற்றிய செய்தி கொண்டு வந்து சீதையின் ஆருயிர் காத்த உத்தமன் அல்லவா அனுமன்? சிந்தனை வயப்பட்டவளாய் இராமனைப் பார்க்கிறாள் சீதை; இராமனும் கண்களாலேயே உத்திரவு கொடுக்கிறான். தன் கழுத்தில் இருந்த மணி மாலையைக்  கழற்றி அனுமனின் கையில் கொடுக்கிறாள் சீதை. பார்வையிலேயே ஒருவரையொருவர் புரிந்து கொள்ளும் பக்குவம் இராமனுக்கும் சீதைக்கும் இருந்தது.
மேலும் படிக்க: காதலர் தினம்

காதல் கதை – 1

Longest married couple

காதலுக்கு ஆரம்பம் உண்டு; முடிவு இல்லை என்று ஒரு விளம்பரத்தின் ‘பஞ்ச்’ வரிகள்.

இதற்கு உதாரணமாக வாழ்பவர்கள் திரு கரம், அவரது மனைவி திருமதி கதரி சந்த் இருவரும். நீண்ட காலமாக திருமண பந்தத்தில் இணைந்து வாழ்பவர்கள் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருப்பவர்கள்.

திரு கரம் அவர்களுக்கு 107 வயது, அவரது மனைவிக்கு 100 வயது. இந்த ஜோடிக்கு 8 குழந்தைகள்; 28 பேரன் பேத்திகள்! திருமணம் ஆகி 87 வருடங்கள் ஆகின்றன.

இவர்களின் வெற்றிகரமான திருமண வாழ்க்கையின் ரகசியம் என்ன? ‘கதரியை எப்படியாவது சிரிக்க வைத்துவிடுவேன். ஜோக்குகள் சொல்லி அவளை சிரிக்க வைப்பது எனக்குப் பிடித்தமான ஒன்று. என்னைப் பொறுத்தவரை ரொமான்ஸ் என்பது வேடிக்கையும், விளையாட்டுமாய் மனைவியை மகிழ்விப்பதுதான்!’ என்கிறார் திரு கரம்.

இவர்கள் சொல்லும் ரொமான்ஸ் ரகசியங்கள்:

எப்போதும் உண்மையாக இருப்பது: திருமண பந்தம் என்பது அதில் இணைந்த இருவரும் ஒருவர்  வாழ்க்கையை இன்னொருவருக்காக உண்மையாய் வாழ்வதுதான். மிகவும் கஷ்டமான சமயங்களிலும் ஒருவருக்கொருவர் உண்மையாக இருப்பது தான் திருமண பந்தத்தை வலுப்படுத்தும். இருவரும் பொய் சொல்லக் கூடாது. சிலசமயங்களில் ‘அக்கரைப் பச்சை’ என்று தோன்றினாலும் உண்மையில் அக்கரை பச்சையாக இருப்பதில்லை!

 

ஒருவர்மேல் ஒருவர் அக்கறை செலுத்துங்கள்: துணைவருடன் வாழ்நாள் முழுவதும் இருக்க விரும்பினால், ஒருவர்மேல் ஒருவர் அக்கறை கொள்ள வேண்டும். நல்ல நிலையில் இருக்கும்போதும் சரி, நிலைமை சற்று சரியும்போதும் சரி, ஒருவரையொருவர் நல்லபடியாகப் பார்த்துக் கொள்ளுங்கள். துணைவருக்காக சமைப்பது, அவரது கையைப் பிடித்துக் கொண்டு நடப்பது, அவர் மனமுடைந்து போகும்போது நல்ல துணையாக இருந்து அவருக்கு ஆறுதலாகத் தோள் கொடுப்பது என்று எல்லாவற்றிலும்  அக்கறையைக் காட்டுங்கள்.

துணைவரை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்:

யாரிடம் இல்லை குறை? உங்கள் துணைவரை அவரது நிறை குறையுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடிக்காததை சில சமயங்களில் செய்யக் கூடும். கண்டு கொள்ளாதீர்கள். பொறுத்துக் கொள்ளுங்கள். உங்களிடம் குறை இல்லையா? குளித்து விட்டு துணிமணிகளை அப்படியே போட்டு விட்டு வரலாம். உங்களுக்குப் பிடிக்காத பாட்டு உங்கள் துணைவருக்குப் பிடிக்கலாம்! அவரது குறைகளுடன் ஏற்றுக் கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள். அவரது குறைகளின் மேல் கோவம் வரலாம். பல ஆண்டுகள் திருமண பந்தத்தில் இருக்க வேண்டும் என்றால் இன்னொருவரின் குறையைப் பொருட்படுத்தாமல் இருக்கப் பழகுங்கள். அல்லது அக்குறையை விரும்பக் கற்றுக் கொள்ளுங்கள். அந்தக் குறையே அவருக்கு நிறைவைக் கொடுக்கிறது என்று நம்புங்கள்.

துணைவரின் வார்த்தைகளை காது கொடுத்துக் கேளுங்கள்: திருமண பந்தத்தில் மிக முக்கியமானது துணைவர் பேசும்போது உன்னிப்பாக கேட்டுக் கொள்வது. முக்கால்வாசி பிரச்னைகள் வருவது / வளர்வது துணைவர் பேசும்போது காது கொடுத்துக் கேட்காமையால் தான். பேப்பர் படித்துக் கொண்டே, தொலைக் காட்சியில் கண்களை வைத்துக் கொண்டே ‘ஊம்’ கொட்ட வேண்டாம். அலுவலகத்தில் மட்டுமே பிரச்னை வரும் என்றில்லை. வீட்டிலும் வரும். ஒருவர் பேசுவதை மற்றவர் காது கொடுத்துக் கேட்டாலே  பாதி சுமை குறைந்தாற்போல இருக்கும்.

சமூக, இன மத ஒழுக்கத்தைப் பின்பற்றுங்கள். உங்கள் மூலம் உங்கள் குழந்தைகளும் இவற்றின் பெருமைகளைத் தெரிந்து கொள்ளுவார்கள். உங்கள் வாழ்க்கைத் துணைவருக்கு மரியாதை கொடுங்கள்; அவர் மேல் அக்கறை கொள்ளுங்கள்; அவரது அன்பைப் போற்றுங்கள்; முழுமையாகக் காதலியுங்கள்; அவரது மதிப்பை உணருங்கள்.

உங்களைப் பிறர் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ அப்படியே உங்கள் மற்றவரையும் நடத்துங்கள்.

 

காதலர் தினம் – காதல் கதை 2

 

இசைப்பாவில் கேட்டு மகிழ: கண்டேன் கண்டேன்…….

 

 

செல்வ களஞ்சியமே – பகுதி 5

தேசிய பெண் குழந்தைகள் தினம்

girl child

மறைந்த பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்கள் நம் நாட்டின் முதல் பெண் பிரதம மந்திரியாக பதவி ஏற்ற நாள் ஜனவரி 24. வருடம் 1966. அந்த நாள் 2009 ஆம் ஆண்டிலிருந்து பெண் குழந்தைகள்  தினமாக அனுசரிக்கப்படுகிறது.

பெண் குழந்தைகள் பற்றிய தவறான கருத்துக்கள் அடியோடு போகவும், அவர்களது ஆரோக்கியம் சீர் படவும், அவர்கள் நல்ல ஊட்டச் சத்துமிக்க ஆகாரம் சாப்பிடவும் உதவுவது ஒவ்வொரு தாய் தந்தையரின் கடமை. இதை நினைவுறுத்தும் வகையில் நம் நாட்டில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 24 ஆம் தேதி பெண் குழந்தைகள் தினமாக  அனுசரிக்கப்படுகிறது.

இந்தச் செய்தியை இப்போது சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்கிறீர்களா? UNICEF நிறுவனம் நடத்திய சமீபத்திய ஆய்வின்படி நம் நாட்டில் சுமார் 46% பெண் குழந்தைகள் இந்த இரத்த சோகை நோயால் பீடிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரிய வந்திருக்கிறது. 15 வயதிலிருந்து 19 வயது வரை உள்ள சிறுமிகள் இந்த நோயால் அதிகம் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். அதுமட்டுமல்ல; ஒவ்வொரு வருடமும் சுமார் 6000 இந்திய சிறுமிகள் இரத்த சோகையாலும் ஊட்டச்சத்து பற்றாக் குறையாலும் இறந்து போகிறார்கள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.

சமீபத்தில் பெங்களூரில் இருக்கும் 15 பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வு ஒரு அதிர்ச்சி செய்தியை சொல்லுகிறது. அதாவது சுமார் 45% பள்ளிச்சிறுமிகள் இரத்த சோகை நோயின் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்று! அவர்களது ஹீமோகுளோபின் அளவு 10% க்கும் குறைவாக இருக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் அளவுப்படி இது 12:12 என்ற அளவில் அதாவது 12 வயது சிறுமிக்கு 12% ஹீமோகுளோபின் இருக்க வேண்டும்.

இரத்த சோகை நோய் என்பது என்ன?

நமது இரத்தத்தில் இருக்கும் சிகப்பு அணுக்களில் இருக்கும் புரதச் சத்து தான் ஹீமோகுளோபின் என்பது. உடலின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான பிராண வாயுவை இந்த ஹீமோகுளோபின் தான் கொண்டு செல்லுகிறது.

நமது ரத்தத்தில் ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய குறைந்த பட்ச அளவு:

HB % அதிக பட்சம்….. 14.08 gm %

ஆண்கள  ……………………….       13.00 gm %

பெண்கள்     ………………………    11.00 gm %

கர்ப்பிணி பெண்கள் ……………    10.00 gm %

குழந்தைகள்   ………………………….  12.00 gm %

பள்ளி செல்லும் வயதினர் …  12.00 gm %

முதியோர்கள்                10.00 gm %

இந்த அளவின்படி ஹீமோகுளோபின் இல்லாத போது இரத்த சோகை நோய் ஏற்படும். நம் நாட்டில் இரும்புச் சத்து குறைப்பாட்டால் பெண்கள் பாதிக்கப் படுவது கவலைக்குரிய விஷயம். 18 வயதுக்கு முன் திருமணம் செய்துவிடுவது, பருவமடையும் போது போஷாக்கான ஆகாரம் சாப்பிடாமல் அல்லது கிடைக்காமல் போவது ஆகியவை பிற்காலத்தில் அவர்கள் இரத்த சோகை நோய்க்கு ஆளாவதற்கும், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் பிறக்கும் போதே இரத்த சோகைக்கு ஆளாகவும் காரணம்.

இளம் பெண்களில் மூன்றில் ஒரு பங்கு சரிவர ஊட்டச் சத்து கிடைக்காத நிலையில் இருக்கிறார்கள். தேசிய குடும்ப ஆரோக்கிய கணக்கெடுப்பின்படி இனபெருக்கக் காலம் (reproductive age) என்று சொல்லப்படும் வயதில் (15-49) இருக்கும் பெண்களில் 56.2% பேர்கள் இரத்த சோகை உள்ளவர்கள். கர்நாடகத்தில் மட்டும் இந்த எண்ணிக்கை 69.5%. இதனால் பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கியம் மட்டுமின்றி  ஒட்டு மொத்த சமுதாயத்தின் நலமும்  பாதிக்கப்படுகிறது.

மேலும், மெலிந்த உடல் அமைப்பு (size zero) வேண்டும் என்பதற்காக சாப்பாட்டை குறைப்பதும், பசி வேளையில் “ஜங்க் பூட்” (junk food) என்று சொல்லப்படும் சத்து குறைந்த உணவுப் பொருட்களை உண்பதும் இளம் பெண்களின் ஆரோக்கியத்தை கெடுக்கிறது. பதின்வயது (teen age) என்பது பெண்கள் பருவமடையும் வயது. அவர்களது இனப் பெருக்க காலமும் அப்போதுதான் தொடங்குகிறது.

இந்தக் கால கட்டத்தில் இளம் பெண்களுக்கு நல்ல போஷாக்கு மிக்க உணவும், உடல் சுகாதாரத்தில் மிகுந்த அக்கறையும் தேவைப்படும். சரியான போஷாக்கான சாப்பாடு சாப்பிடாமல், சத்து இல்லாத ஜங்க் பூட்” (junk food) சாப்பிடுவது அவர்களுக்கு இரும்புச் சத்துப் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. அத்துடன் புரதச் சத்து, மாவுச் சத்து பற்றாக்குறையும் சேர்ந்து அவர்களுக்கு இரத்த சோகையை உண்டு பண்ணுகிறது. இந்தப் பெண்கள் கருவுறும்போது இந்தக் குறை அவர்களது கர்ப்பத்தையும், அதன் பின் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளையும் பாதிக்கிறது.

இளம் பெண்களுக்கு இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை கொடுக்க வேண்டும். இனப்பெருக்க காலத்தில் அவர்களுக்கு இருக்க வேண்டிய உடல் ஆரோக்கியம் பற்றியும் அறிவுறுத்தல் அவசியம்.

இரத்த சோகையை போக்கக்கூடிய உணவு வகைகள்:

பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள், தோலுடன் சாப்பிட கூடிய பழ வகைகள் மற்றும் டிரை ப்ரூட்ஸ் எனப்படும் முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை, முதலியவற்றில் உள்ள இரும்புச் சத்து நமக்குத் தேவையான ஹீமோகுளோபின் இரத்தத்தில் உண்டாக உதவும்.

எள் மற்றும் வெல்லத்தில் அதிக இரும்பு சத்து இருக்கிறது. எலுமிச்சை சாறில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்த்து குடிக்கலாம். எள்ளுருண்டை, எள்ளு பொடி, எள்ளு சாதம் ஆகியவற்றில் இரும்பு சத்து இருப்பதால் பெண் குழந்தைகளுக்கு இவற்றைக் கொடுக்கலாம்.

எள் பிடிக்கவில்லை என்றால் தினமும் ஒரு சிறிய கட்டி வெல்லம் சாப்பிடலாம். இதனால் நமக்கு தினசரி இரும்பு சத்து கிடைக்கும்.

இரும்பு மாத்திரைகள் சாப்பிடலாம். உணவுடனோ, எலுமிச்சை அல்லது சாத்துக்குடி சாறுடனோ சாப்பிடலாம். இந்த சாறுகள் இரும்புச் சத்தை நம் உடல் உறிஞ்ச உதவுகின்றன.

பெண் குழந்தைகளைக் காப்போம்!

பெண் குழந்தைகளின் உடல் நலம் 

 

நமது தேசிய கீதம் 

ப்ளாக்பெர்ரி தம்ப்!

blackberry thumb 2                                                                       blackberry thumb

 

 

போனவாரம் ஒருநாள். வழக்கம்போல் கணணி முன் அமர்ந்திருந்தவள், முழங்கையில் திடீரென ஒரு வலியை உணர்ந்தேன். நேரம் ஆக ஆக வலி அதிகமாயிற்று. கையை தூக்கவோ, கஷ்டப்பட்டு தூக்கினால் மறுபடி கீழே போடவோ முடியவில்லை.

‘எங்கேயாவது இடித்துக் கொண்டீர்களா?’ – ஐஸ்வர்யா கேட்டாள்.

‘இல்லையே…!’

‘ராத்திரி தூங்கும்போது ஒரே பக்கமா படுத்துக்கொண்டு விட்டீர்களா?’

‘அப்படின்னா, கை முழுக்க வலிக்கணுமே, முழங்கையில்  மட்டும் தான் வலி!’

வலியுடனேயே யோகா வகுப்புக்கும் போய்விட்டு வந்தேன். வலி மட்டும் அதிகமாகிக் கொண்டே இருந்தது. டாக்டர் மதுகர் ஷெட்டியிடம் தஞ்சமடைந்தேன்.

மருத்துவ மனையில் காத்திருக்கும்போது நிதானமாக யோசிக்க நேரம் கிடைத்தது. ஏன் இந்த வலி?

சட்டென்று ‘பல்ப்’ எரிந்தது!

ஒரு மாதத்திற்கு முன் என் கணணி கொஞ்ச நேரம் பயன்படுத்தினாலே சூடாக ஆரம்பித்தது. திடீரென்று ஒரு நாள் நின்றே போய் விட்டது. என் பிள்ளை பார்த்துவிட்டு, ஒரு ஃபேன் ஸ்டாண்ட் வாங்கி வந்து அதன் மேல் கணணியை வைத்துக் கொடுத்து மேலும் ஏதேதோ செய்து (நமக்கு அதெல்லாம் புரியாதுங்கோ!) அதை பழையபடி நான் பயன்படுத்தும்படி (அல்லும் பகலும் அனவரதமும்!) செய்து கொடுத்தான்.

இதன் விளைவாக கணனியின் உயரம் அதிகரித்து விட்டது. நான் இனிமேல் உயர முடியாதே! கையை மிகவும் கஷ்டப்பட்டு, டைனிங் டேபிளின் மேல் கைகளை (கோணாமாணா என்று) வைத்து கொண்டு கணணியை இயக்கி இருக்கிறேன். அதுதான் இந்த வலி!

அடுத்தநாள் யோகா வகுப்பிற்குப் போகும்போது என் தோழி ஜோதி சொன்னாள்: ‘என் பிள்ளையின் கல்லூரியில் இன்று ஒரு போட்டி. ஒரு நிமிடத்திற்குள் அலைபேசியில் யார் அதிக மெசேஜ் அனுப்புகிறார்கள்’ என்று. என்பிள்ளைக்கு முதல் பரிசு!’

பேச்சுப் போட்டி, கவிதை, கட்டுரை போட்டி கேள்விப் பட்டிருக்கிறோம். இதென்ன விசித்திரமான போட்டி என்று நினைத்துக் கொண்டேன்.

அன்று செய்தி தாளில் ஒரு செய்தி: இன்றைய யுவ, யுவதிகள்  அலை பேசியில் இருக்கும் சின்னஞ்சிறு கீ போர்டில் விரல்களை அழுத்தி அழுத்தி வேக வேகமாக குறுஞ்செய்தி அனுப்புவதால் விரல்களில் ஒருவித வலி உண்டாகிறதாம். அதற்கு ‘ப்ளுபெர்ரி தம்ப்’ (Blueberry thumb) என்று பெயராம்.

இதைபோல உண்டாகும் இன்னொரு வலிக்கு ஐ-ஃபோன் ஃபிங்கர் என்று பெயராம்.

ஆரம்பிக்கும்போது கட்டை விரலில் சிறிது உளைச்சல் ஏற்படும். இதை அலட்சியம் செய்தீர்களானால் விரல்களில் வீக்கம் ஏற்படும். விரல்கள் மரத்துப் போகும். மணிக்கட்டுக்களில் வலி ஏற்படும். குறுஞ்செய்தி அனுப்புவதை உடனே நிறுத்து என்று இதற்கு அர்த்தம்!

மருத்துவரை பார்ப்பதற்கு முன் அல்லது வலி ஆரம்பமாகும் அறிகுறிகள் தென்பட்டால் சில பயிற்சிகள் செய்தால் ஓரளவுக்கு ஆறுதல் கிடைக்கும்.

கட்டைவிரலை வளைத்தல்: (Outward thumb bending)

கட்டைவிரலை இறுக்கமாக வைத்துக்கொண்டு உங்கள் உள்ளங்கை நோக்கியும், வெளிப்பக்கமாகவும் வளையுங்கள்.

கட்டைவிரலை சுழற்றுதல்: (Thumb Rotation)

வலியிலிருந்து ஆறுதல் பெற கட்டைவிரலை வலது பக்கமாகவும், இடது பக்கமாகவும் வட்டமாக சுழற்றவும். இறுகிப் போன மூட்டுகள் தளரும்.

வெந்நீர் ஒத்தடம்:  (Hot Fermentation)

இந்த முறையால் தசைகள் தளர்ந்து கொடுக்கும். இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

சிறிய கிண்ணத்தில் வெந்நீர் எடுத்துக் கொண்டு அதில் எப்சம் உப்பு ஒரு தேக்கரண்டி சேர்க்கவும். ஒரு டவலை இந்த உப்புத் தண்ணீரில் முக்கி, நன்றாகப் பிழிந்து விட்டு வலி இருக்கும் இடத்தில் வைக்கவும். ஐந்து முறை இதைபோல செய்யவும்.

இரவு நேரம்: வலிக்கும் கட்டைவிரலின் மேல் அழுத்தம் ஏற்படாதபடி தூங்கும் போது கட்டைவிரலை சுற்றி பஞ்சு வைத்து கட்டவும்.

கட்டைவிரலுக்கு ஓய்வு கொடுக்கவும். சிறிது நாட்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதை நிறுத்தவும். சற்று ஓய்வு கொடுப்பதனால் உங்கள் கட்டைவிரல் வலியிலிருந்து ஆறுதல் அடையும். இந்த ஓய்வு கட்டாயம் தேவை.

விரல்களில் வலி ஏற்படும் போதே ஜாக்கிரதையாக இருந்து விடுவது நல்லது. வலியுடனேயே, அல்லது வலியைப் பொருட்படுத்தாமல் விரல்களை பயன்படுத்தினால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். அதனாலும் பெரிய பலன் இருக்காது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

அதனால் வருமுன் காப்போம்! இந்த அறிவுரை உங்களுக்கு மட்டுமல்ல; எனக்கும் சேர்த்துதான் என்பதை உணர்ந்தே இதை எழுதுகிறேன்.

 

தொழிற்களம் பதிவு 

 

இசைப்பாவில் குறையொன்றுமில்லை கேட்டீர்களா?

 

இதையும் படிக்கலாமே:

செல்வ களஞ்சியமே – பகுதி -1

செல்வ களஞ்சியமே – பகுதி 2 

 

மாலைப்பொழுதினிலே……மலரும் நினைவுகள்!

220px-Ms_subbulakshmi

திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் தேன் குரலில் இந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு ‘கொசுவர்த்தி சுருள்’ தான்.

இந்தப் பாட்டை நான் பாடி, நடனம் அமைத்து…. அடடா என்ன இனிமையான நினைவுகள்!

அப்போது புரசைவாக்கத்தில் இருந்தோம். என் அண்ணா, அவனது நண்பர்கள் எல்லோருமாகச் சேர்ந்து ஒரு ‘ரிக்ரியேஷன் க்ளப்’ ஆரம்பித்தனர். பெயர் என்ன வைக்கலாம் என்று யோசித்த போது என் அண்ணா ஒரு பேப்பரில் எழுதினான். “ELITE RECREATION CLUB” உடனே நான் படித்தேன்: எலைட் ரிக்ரியேஷன் க்ளப் என்று. என் அண்ணாவுக்கு வந்ததே கோவம்!

‘ச்சே! என்ன படிக்கிற, எலைட் –ஆ? எடு, எடு டிக்ஷ்னரியை. உச்சரிப்பு பாரு. எலைட்டாம் எலைட்டு!’

எனக்குப் புரிந்து விட்டது தவறான உச்சரிப்பு என்று. எழுந்து போய் டிக்ஷ்னரியை எடுத்து வந்து உச்சரிப்புப் பார்த்துவிட்டு சொன்னேன். ‘எலீட்  ரிக்ரியேஷன் க்ளப்’. அண்ணாவின் முகம் மலர்ந்தது.

‘பேரு நன்னாருக்கு இல்ல?’

அர்த்தம் புரிந்தால்தானே? ‘ஓ!’ தலையாட்டி விட்டேன். அர்த்தம் புரியவில்லை என்றால் மறுபடி டிக்ஷ்னரி எடு என்பான்.

க்ளப் ஆரம்பித்தாயிற்று. மாதம் ஒரு முறை சந்தித்தோம், எங்கள் வீட்டில் தான். ஏதாவது செய்ய வேண்டுமே. என்ன செய்யலாம்?

கையெழுத்துப் பத்திரிகை ஆரம்பிக்கலாம். கதை, கவிதை யார் யாருக்கு என்னென்ன வருமோ அதை எழுதிக் கொண்டு வரலாம். எல்லோருக்கும் இந்த யோசனை பிடித்திருந்தது.

எல்லோரும் கொண்டு வருவதை அழகாக தைத்து படிக்கும் படி செய்ய வேண்டியது என் வேலை. என் அக்கா பாதுகா பட்டாபிஷேகம் எழுதினாள். அதற்கு பரதன் தலைமேல் பாதுகையை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு போகிறாப்போல படம் வரைந்து கொடுத்தேன் நான். முதல் இதழே வெற்றிகரமாக அமைந்து விட்டது. மாதாமாதம் கையெழுத்துப் பத்திரிகை வர ஆரம்பித்தது. நான் எதுவும் எழுத மாட்டேன்; எனக்குப் படித்த கல்கியின் கதாபாத்திரங்கள் ஆன நந்தினி, குந்தவை இவர்களை வரைந்து கொடுப்பேன்.

நாடகம் போடலாம் என்று அடுத்த முடிவு. வெறும் நாடகம் மட்டுமில்லாமல் நடனம், பாடல், நாடகம் எல்லாம் இருக்கட்டும் என்று முடிவு செய்தோம்.

நான் அப்போது எஸ் எஸ் எல் ஸி படித்துக் கொண்டிருந்தேன். ஆங்கிலத்தில் ‘Merchant of Venice’ நாடகம் வந்திருந்தது – நீதி மன்றக் காட்சி மட்டும்.  ஏற்கனவே பள்ளிக் கூடத்தில் ஒரு முறை நான் நடித்து அரங்கேறிய நாடகம். நான்தான் கதாநாயகி போர்ஷியா. அவள் நீதி மன்றத்தில் பேசும் பேச்சு மிகப் பிரபலம். கிட்டத்தட்ட மோனோ ஆக்டிங். அதையே திரும்ப செய்துவிடு என்றார்கள்.

இசை? நான் மிகவும் விரும்பிப் பாடும் பாடல் ‘மாலைப்பொழுதினிலே ஒரு நாள்…’ அதைப் பாடுகிறேன் என்றேன்.

அண்ணாவின் நண்பர்களில் ஒருவர் சொன்னார். அதற்கே நடனமும் இருந்தால் நன்றாக இருக்கும். அது வள்ளியும், முருகனும் உரையாடுவதுபோல அமைந்த பாடல். கல்கி அவர்கள் இயற்றியது.

நாங்கள் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரருக்கு இரண்டு பெண்கள் விஜயா, அல்லி என்று. விஜயா பெரியவள். அல்லி அவள் தங்கை. சரி அல்லியை வள்ளியாகவும், விஜயாவை முருகனாகவும் வைத்துக் கொண்டு நடனம் அமைக்கலாம் என்று தீர்மானம் செய்தோம். நடன ஆசிரியர்?

நானே முன்வந்தேன். எங்கள் பள்ளியில் நடன நிகழ்ச்சிகள் நிறைய நடக்கும். அவற்றில் பங்கு கொள்ளவில்லை என்றாலும் ரிகர்சலை பலமுறை பார்த்து ரசிப்பேன். எங்கள் பாட்டு டீச்சர் திருமதி ராஜலக்ஷ்மி ராஜகோபாலன் மிக அருமையாக பாரதியாரின் ‘பாஞ்சாலி சபதத்திற்கு’ மெட்டமைத்து, நடனமும் வடிவமைத்து இருந்தார். அவற்றை வீட்டில் வந்து ஆடுவேன்.

இந்த அனுபவம் போதாதா? தினமும் விஜயாவிற்கும் அல்லிக்கும் பயிற்சி கொடுத்தேன்.

எங்கள் நிகழ்ச்சி ஸர் எம்.சி.டி.எம். முத்தையா செட்டியார் ஆண்கள் உயர்நிலைப் பள்ளி வகுப்பறை ஒன்றில் நடந்தேறியது வெற்றிகரமாக! முதல்முறையாக ‘மைக்’ கில் பாடினேன். பக்கவாத்தியங்கள் கிடையாது. சோலோ பாட்டு மட்டும். அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு நரசிம்மன் தலைமை தாங்கினார். எங்கள் எல்லோரையும் பாராட்டி, வாழ்த்திவிட்டு சென்றார்.

அதற்குப் பிறகு எங்கள் க்ளப் நீண்ட நாட்கள் இருக்கவில்லை. அண்ணாவிற்கு வேலை கிடைத்து தும்பா (கேரளா) சென்றான். எனக்கு வேலை கிடைத்தது. ஒவ்வொருவராக விலக, நினைவுகள் மட்டுமே மிச்சம்.

இந்தப் பாட்டை முழுமையாக கேட்க (என் குரலில் இல்லீங்க!) திருமதி எம்.எஸ். குரலில் இங்கே க்ளிக் செய்யவும்.

என் விருப்பத்திற்காக இந்த முழு பாடலையும், பாடல் வரிகளுடன் தங்கள் இசைப்பா தளத்தில் போட்டிருக்கும் திரு தமிழுக்கும், திரு ஓஜஸ்ஸுக்கும் மனமார்ந்த நன்றிகள்!

 

மகிழ்ச்சியாக இருப்பது எப்படி?

ஒரு கோப்பையிலே நம் வாழ்க்கை!

coffee cups and mugs

எங்கள் எதிர் வீட்டுக்காரரின் மேல் எனக்கு கொஞ்சம் (இல்லையில்லை….நிறையவே…காதில் புகை வரும் அளவுக்கு..!) பொறாமை.

எனது சமையல் அறையிலிருந்து பார்த்தால் எதிர் வீட்டு பால்கனி தெரியும். இந்த மனிதர் தினமும் காலையில்  ஒரு கையில் மணக்க மணக்க காப்பி ; மறுகையில் சுடச்சுட செய்தித்தாள் – உடன் ஸ்டைலாக நாற்காலியில் உட்கார்ந்து பேப்பரில் மூழ்கி இருப்பார்!

எந்த பிறவியில் யாருக்கு தினந்தோறும் இது போல  பேப்பரும், காப்பியும் கொடுத்து சேவை செய்தாரோ இந்தப் பிறவியில் இப்படி அனுபவிக்கிறார் என்று (புகைச்சலுடன்) நினைத்துக் கொள்வேன்.

நீங்களும் அவரைப்போல காலை எழுந்தவுடன் ஒரு கையில் காபி.. மறு கையில் செய்தித்தாள்.. என்று வாழ்க்கையை அனுபவிப்பவரா?

அப்படியானால் இந்தக் கதை உங்களுக்குப் பிடிக்கும்.

ஒரே கல்லூரியில் படித்து, இப்போது நல்ல வேலையில் இருக்கும் அந்த கால மாணவர்கள் சிலர் தங்களது கல்லூரி பேராசிரியரை சந்திக்கக் கூடினர்.

உபய குசலம் முடிந்தபின், ஒவ்வொருவரும் தங்களது உத்தியோகம் பற்றியும் அதனால் ஏற்படும் மன உளைச்சல், வாழ்க்கையையும் உத்தியோகத்தையும் சமாளிக்கும் தங்களது சாமர்த்தியம் பற்றியும் பேச (பீற்றிக்கொள்ள!) ஆரம்பித்தனர்.

பேராசிரியர் சமையல் அறைக்குச் சென்று ஒரு பெரிய ஜாடி நிரம்ப மணக்கும் காப்பி கொண்டு வந்தார். கூடவே காப்பியை ஊற்றி சாப்பிட பல வகையான கோப்பைகளைக் கொண்டுவந்தார். பிளாஸ்டிக் கோப்பைகள்; சீனா கோப்பைகள்; கண்ணாடிக் கோப்பைகள்; அவற்றுள் சில மிக விலை உயர்ந்தவை; சில சாதாரணமானவை. சில அழகிய வேலைப்பாடுகள் கொண்டவை.

‘ஹெல்ப் யுவர்செல்வ்ஸ்…!’ என்றார் பேராசிரியர்.

ஆளுக்கு ஒரு கோப்பையை எடுத்துக் கொண்டு காப்பியையும் ஊற்றிக் கொண்டு ருசிக்க ஆரம்பித்தனர்.

பேராசிரியரும் ஒரு கோப்பை காப்பியை கையில் எடுத்துக் கொண்டு பேசலானார்:

coffee cups

‘நீங்கள் எல்லோரும் அழகிய, விலை உயர்ந்த கோப்பைகளையே எடுத்துக் கொண்டுள்ளீர்கள். வாழ்வில் மிகச் சிறந்தவைகளையே அடைய வேண்டும் நீங்கள் ஒவ்வொருவரும் நினைப்பது தெரிகிறது. தவறேதும் இல்லை. ஆனால் உங்கள் பிரச்னைகளுக்கும், மன உளைச்சலுக்கும் பிறப்பிடமே அதுதான்!’

‘ஒரு விஷயம் உங்கள் நினைவில் இருக்கட்டும்: கோப்பைகளினால் காப்பியின் தரம் நிச்சயிக்கப் படுவதில்லை. உங்களுக்கு வேண்டியது காப்பி ஆனால் நீங்கள் விலையுயர்ந்த கோப்பைகளை நாடினீர்கள். அதுமட்டுமல்ல; மற்றவர்களின் கைகளில் இருந்த கோப்பைகளையும் கவனித்தீர்கள்;’

‘இப்போது ஒரு விஷயத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்:’

‘வாழ்க்கை என்பதை காப்பி என்று வைத்துக் கொள்ளுவோம். உங்களது வேலை, அதில் வரும் வருமானம், அதனால் இந்தச் சமூகத்தில் உங்களுக்குக் கிடக்கும் அந்தஸ்து இந்தக் கோப்பைகள் போல. இக்கோப்பைகள் காப்பியை ஊற்றிக் குடிக்க பயன்படும் வெறும் சாதனங்கள்; இவை காப்பியை ஏந்துகின்றன  அவ்வளவே. இவற்றால் நமது வாழ்க்கை தீர்மானிக்கப் படுவதில்லை. இவை நம் வாழ்க்கையின் தரத்தை அளவிடும் அளவு கோலோ, நம் வாழ்க்கைத் தரத்தை மாற்றுவதோ இல்லை’.

சில சமயங்களில் காப்பிக் கோப்பைக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் வாழ்க்கை என்னும் ருசி மிகுந்த காப்பியை அனுபவிக்க மறந்து விடுகிறோம்.

‘கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் நன்கு சரியான அளவில் தயாரிக்கப்பட்ட காப்பியை கொடுத்திருக்கிறார். நாம் அதனை ஏதேதோ அளவுகோல் கொண்டு மதிப்பிடப் பார்க்கிறோம்’.

‘வாழ்க்கை என்னும் காப்பியை அனுபவியுங்கள். கோப்பைகளுக்கு அதிக முக்கியத்துவம் வேண்டாம்’.

‘சந்தோஷமாக இருப்பவர்களுக்கு சிறந்தவைகள் எல்லாம் கிடைப்பதில்லை. ஆனால் கிடைப்பவற்றுள் சிறந்தவற்றை உருவாக்குகிறார்கள். சிறந்தவற்றைப் பார்க்கிறார்கள். அதனால் தங்களைச் சுற்றி சந்தோஷத்தை பரப்புகிறார்கள்’.

‘எளிய வாழ்க்கையை மேற்கொள்ளுங்கள். அன்பை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுங்கள். மற்றவர்களை பற்றி ஆழ்ந்த அக்கறை கொள்ளுங்கள். இனியவற்றை பேசுங்கள். கனியிருப்ப காய்கள் வேண்டாம்.’

நாளையிலிருந்து காப்பி குடிக்கும் போதெல்லாம் இந்தக் கதை நினைவுக்கு வரும், இல்லையா?

புது வருடத்தில் புதிதாய் சிந்தனைகள் மலர வாழ்த்துக்கள்!

 

 

freshly-pressed-rectangle  on 24.12.2012

மக்கள் சந்தைக்காக எழுதியது.

எனது முதல் தளத்தில் இப்போது: கணிதமும் நானும்!

நாளைப் பாடு……!

I forget things!

இன்னும் நான்கு நாட்களில் என் முதல் வலைபதிவு குழந்தைக்கு ஒரு வருடம் நிரம்புகிறது.

நாளைக்கு இருப்போமா என்பதே சந்தேகம்….இன்னும் நாலு நாள் கழித்து நடக்கப் போவதை பற்றி பேசுகிறாயே என்கிறீர்களா?

அடுத்த வருடம் இந்த நாளில் போன வருடம் இப்படியெல்லாம் பயந்து கொண்டிருந்தோம் என்பதையே மறந்து விடுவோம், சரி தானே?

நம் நினைவாற்றல் மீது நம் எல்லோருக்குமே இந்த நம்பிக்கை உண்டு. எத்தனைகெத்தனை நினைவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோமோ அத்தனைகத்தனை வேகமாக மறந்து விடுவோம்!

இந்த ஞாபக மறதி பற்றி ஒருவர் எழுதி இருந்தார்.

ஒரு நண்பரின் வீட்டிற்குப் போயிருந்தாராம். கணவன், மனைவி இருவருமே சற்று வயதானவர்கள். பேசிக்  கொண்டு இருக்கும்போது கணவர் சொன்னாராம்: “நேற்று ஜயநகரில் புதிதாக திறந்திருக்கும் ஒரு  உணவகத்திற்குப் போனோம். சாப்பாடு நன்றாக இருந்தது. நீயும் மனைவி குழந்தைகளுடன் போய்விட்டு வா..”

“அப்படியா? உணவகத்தின் பெயர் என்ன?”

சில நிமிடங்கள் யோசித்த கணவர், “ம் ம் …. ஒரு பூ இருக்குமே….சிவப்பு நிறத்தில்….அடுக்கடுக்காக…..முள் கூட இருக்கும்…அதன் பெயர் என்ன…?”

“ரோஜா…”

“கரெக்ட்! பெயரை நினைவூட்டியதற்கு நன்றி!…” என்றவர் உள்ளே திரும்பி “ரோஜா…! நேற்று ஒரு புதிய உணவகம் போனோமே, அதன் பெயர் என்ன..?” என்றாராம்!

இன்னொரு கணவர் தன் மனைவியை எப்போதுமே “டார்லிங், டார்லிங்” என்றே கூப்பிட்டுக்கொண்டு இருந்தாராம். நண்பர் மிகவும் வியப்படைந்து “திருமணமாகி இத்தனை வருடங்கள் ஆகியும் மனைவியை டார்லிங் டார்லிங் என்று கூப்பிடுகிறீர்களே! உங்களுக்கு மனைவியின் பெயரில் அன்பு குறையவே இல்லை என்று தெரிகிறது”.

கணவர் சொன்னாராம்: “வெளியில் சொல்லாதே! அவள் பெயரை மறந்து பல வருடங்கள் ஆகிவிட்டன…..”

உளவியல் நிபுணர்கள் சொல்வது என்ன தெரியுமா? எல்லாவற்றையும் நினைவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று நம் மூளையை கட்டாயப் படுத்தக் கூடாதாம்.

பலமுறை ஒரு கட்டிடத்தைத் தாண்டி சென்றிருப்போம். அதன் பெயர் தெரிந்திருக்காது. பார்த்திருப்போம்; ஆனால் மனதில் பதிந்திருக்காது. இந்த வகை மறதியினால் தவறு இல்லை. மறந்துவிட்டதை சமாளிக்க வேண்டும் இரண்டாவது கணவரைப் போலே!

உங்கள் அலுவலகத்தில் தீயணைக்கும் கருவி எங்குள்ளது என்று நினைவு இல்லையா? பரவாயில்லை. ஆனால் ஆபத்துக் காலத்தில் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை மறக்கக்கூடாது. இது ரொம்ப முக்கியம்.

சரி தோழமைகளே! உலகத்தின் கடைசி நாளில் ஒரு பதிவு எழுத நினைத்து, எழுதியும் விட்டேன் வெற்றிகரமாக!

படித்துவிட்டு மறந்தும் போகலாம். மறந்து போகாமல் கருத்துரை போட்டால் மகிழ்வேன்….நாளை இருந்தால்……!

 

freshly-pressed-rectangle

 

இதையும் படிக்கலாமே! :முப்பதும் தப்பாமே….!

அந்தநாள் முதல் இந்த நாள் வரை…..

ஜெயந்தியை நான் எப்போது சந்தித்தேன்?

நினைவில்லை.

‘உனக்கும் நினைவில்லையா?’ இருவரும் ஆச்சரியப் பட்டோம்.

ஒரே பள்ளியா? இல்லை.

ஒரே அலுவலகத்தில் வேலை செய்தோமா? இல்லை.

ஒரே வீதியில் வீடா? அதுவும் இல்லை.

பின் எப்படி தோழிகளானோம்?

பலத்த யோசனைக்குப் பின் நினைவுக்கு வந்தது. ஒரே பேருந்தில் அலுவலகத்திற்குப் பயணம் செய்திருக்கிறோம். பேருந்து தோழிகள்! அதுவும் சில மாதங்களுக்குத் தான். ஜெயந்தி பிறகு வேறு வேலைக்கு மாறிவிட்டாள்.

ஆனால் எனக்கு திருமணம் ஆகும் வரை நானும் அவளும் கிட்டத்தட்ட எல்லா நாட்களுமே மாலை வேளைகளில் சந்தித்திருக்கிறோம். புரசைவாக்கம் டேங்க், எதிரில் இருக்கும் (இப்போது இருக்கிறதா?) அனுமார் சந்நிதி, கங்காதரேஸ்வரர் கோவில் என்று சுற்றிக் கொண்டே இருப்போம்.

எங்களுக்குள் பேச எத்தனையோ. ‘அதென்ன மணிக்கணக்கா பேச்சு?’ என்று இருவர் வீட்டிலும் கோபித்துக் கொள்ளுவதால் இருவரும் புரசைவாக்கம் தெருக்களில் சுற்றி சுற்றி வருவோம் – கோவிலுக்குப் போவதாகச் சொல்லிவிட்டு!

பிறகு எனக்குத் திருமணம் ஆகி அசோக் நகர் வந்து விட்டேன். ஜெயந்தியின் தொடர்பும் விட்டுப் போயிற்று. ’79 இல் ஜெயந்தியின் குடும்பம் அசோக் நகரில் இருந்த போஸ்டல் குவார்ட்டர்ஸ் –இல் இருந்தபோது ஒரு முறை சந்தித்தோம். என் பெண்ணுக்கு அப்போது மூன்று வயது.

பிறகு நாங்கள் அண்ணாநகர் வந்து, அங்கிருந்து பெங்களூரு வந்து….ஜெயந்தி நினைவிலிருந்து மறைந்தே போனாள்.

இப்போது எங்கிருந்து வந்தாள் என்று கேட்கிறீர்களா?

என் ப்ளாகின் மூலம்தான்! ஆச்சரியம் இல்லையா?

எனது ப்ளாகில் ஒரு முறை திரு ரா.கி. ரங்கராஜன் அவர்களின் மறைவின் பின்னணியில், அவர் எனக்கு எழுதிய கடிதத்தைப் பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தேன். ‘கடுகு’ என்கிற திரு ரங்கநாதன் அவர்களும் அவரது கடுகு தாளிப்பு என்ற வலைப்பூவில் திரு ராகிரா பற்றி எழுதி இருந்தார். அதை அவரது தளத்தில் படித்த நான் ‘நானும் திரு ராகிரா பற்றி எழுதி இருக்கிறேன். முடிந்தால் படித்துப் பாருங்கள்’ என்று என் வலைதளத்தின் இணைப்பையும் கொடுத்து பின்னூட்டம் இட்டிருந்தேன்.

ஜெயந்தி திரு ‘கடுகு’ அவர்களின் எழுத்துக்களை மிகவும் விரும்பிப் படிப்பாள். அவள் எனது பின்னூட்டத்தைப்  படித்து விட்டு என் பதிவைப் படித்திருக்கிறாள். எனது அழகான(!!!)  புகைப் படத்தையும் பார்த்துவிட்டு நீ புரசைவாக்கத்தில் இருந்த ரஞ்சனி தானே என்று கேட்டு எங்கள் ஊர் சுற்றலையும் குறிப்பிட்டிருந்தாள்.

பல வருடங்களுக்குப் பிறகு தோழிகள் ஒருவரையொருவர் மறுபடி கண்டுகொண்டோம் கண்டு கொண்டோம்…..!!!

போன மாதம் சென்னை சென்ற போது ஒரே ஒரு நிகழ்வு:  ஜெயந்தியை சந்திப்பது மட்டும்தான்!

காலை சதாப்தி வண்டியில் கிளம்பினோம். சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கே வருவதாக ஜெயந்தி சொல்லியிருந்தாள். நான் தான் வழக்கம்போல CCC2 கோச் என்பதற்கு பதிலாக CC1 என்று சொதப்பி இருந்தேன். பாவம் ஜெயந்தி, C1 கோச் முழுவதும் தேடி என்னைக் காணாமல் என்னவோ ஏதோ, நான் ஏன் வரவில்லை என்று பதறி எனக்கு போன் மேல் போன் செய்து….தவித்துக் கொண்டிருக்க,

நான் நிதானமாக அடுத்த பெட்டியிலிருந்து இறங்கி, யார் இந்த நேரத்தில் போன் செய்கிறார்கள் என்று தொலைபேசியில் கண்ணையும் கருத்தையும் வைத்துக் கொண்டு நடக்க….

‘ரஞ்சனி……’ என்று ஓடி வந்தவள் என்னை அப்படியே அணைத்துக் கொண்டாள்.

‘உங்களைக் காணோமென்று ஆடிப் போய்விட்டாள்’ என்றார் ஜெயந்தியின் துணைவர் திரு ஸ்ரீதரன்.

‘ஸாரி, ஸாரி’ என்று அசடு வழிந்தேன். ஜெயந்தி என் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.

‘நீங்கள் வரப்போவது அமெரிக்கா முதல் ஆஸ்திரியா வரை தெரியும்…’

ஜெயந்தியின் பிள்ளைகள் இருவரும் இந்த இரண்டு ஊர்களில் இருந்தனர்.

‘பிரிந்தவர் கூடினால் பேசவும் கூடுமோ?’ என்பார்கள். ஆனால் நாங்கள் இருவரும் விடாமல் – மூச்சு விடாமல் பேசினோம். வீடு போய் சேரும்வரை, சேர்ந்த பின், சாப்பிடும்போது, பேசிக் கொண்டே, பேசிக் கொண்டே……!

ஜெயந்தியின் அம்மா பக்கத்திலேயே இருந்தார். என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே ‘என்ன ரஞ்சனி, எத்தனை குழந்தைகள், எல்லோருக்கும், கல்யாணம் ஆயிற்றா, பேரன், பேத்திகள் இருக்கிறார்களா…..?’ என்றார்.

‘ஐயோ! மாமி அதையெல்லாம் கேட்காதீங்கோ! நானும் ஜெயந்தியும் இப்போது புரசைவாக்கத்தில் கல்யாணம் ஆகாத பெண்களாக சுற்றிக் கொண்டிருக்கிறோம்’ என்றேன்.

எவ்வளவுதான் இந்த நாளின் நிஜம் இருவருக்கும் தெரிந்தபோதும், மறுபடி மறுபடி பழைய நினைவுகளிலேயே இருவரும் மூழ்க ஆசைப்பட்டோம்.

‘குட்டி குட்டியா நகம் வளர்த்துப்பியே என்ன ஆச்சு?’ என்றாள் ஜெயந்தி.

‘பேருந்தில் நம்முடன் கூட ‘குட்டி ப்ளஷ்டோர்’ அலுவலகத்தில் வேலை செய்யும் சௌபாக்யவதி என்ற ஒரு பெண் வருவாள் நினைவிருக்கிறதா?’- நான்.

‘ஓ!…’

‘நான் அவளிடம் உனக்கு சௌபாக்யவதி என்று பெயர் வைத்திருக்கிறார்களே…கல்யாணப் பத்திரிகையில் சௌபாக்யவதி சௌபாக்யவதிக்கு என்று போடுவார்களா என்று ஒரு நாள் கேட்டேன்….!’

இருவரும் பெரிதாகச் சிரித்தோம்….எங்கள் துணைவர்கள் இருவரும் எங்களைத் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு!

அந்தநாள் நடந்த சின்ன சின்ன விஷயங்கள் ஒவ்வொன்றும் நினைவலைகளில் மோதி மோதி வந்தன.

அரவிந்த அன்னையின் பக்தையாகி விட்டாள் ஜெயந்தி. ‘பிரார்த்தனை நேரத்தில் ஒருமுறை கூட உன் நினைவு வந்ததில்லை ரஞ்சனி. ஆனாலும் நீயும் நானும் மறுபடி சந்திக்க வேண்டும் என்று அன்னை நினைத்திருந்தாள் போலிருக்கிறது. அதனால் தான் என் உறவினர் ஒருவரின் வேண்டுகோளின் படி ‘கடுகு தாளிப்பு’ படிக்க ஆரம்பித்தவள் அதன் மூலமே உன்னையும் மறுபடியும் சந்தித்தேன். இல்லையானால் நான் எங்கே நீ எங்கே?’

அன்னை சேர்த்து வைத்தாளோ? இல்லை கடுகு சேர்த்து வைத்தாரோ? எப்படியானால் என்ன? அந்தநாள் முதல் இந்த நாள் வரை எங்கள் நட்பு மாறவில்லை என்பதை ஒருவர் கையை ஒருவர் விடாமல் பிடித்திருந்த விதம் சொல்லியது.

குழந்தைகளுக்கு ஒரு கிடைத்தற்கரிய பரிசு!

கருவிலிருக்கும் குழந்தைக்கும் தாய்க்கும் ஒரு இணைப்பை கொடுப்பது தொப்புள் கொடி(UmbilicalCard). இதைத் தான் தொப்புள்கொடி உறவு என்கிறோம்.

தாயின் கருவில் குழந்தை வளரும் காலங்களில் குழந்தையை போஷித்துப் பாதுகாப்பது இந்த தொப்புள் கொடி. குழந்தை பிறந்தவுடன் தாயிடமிருந்து குழந்தையை பிரிக்க இதனை வெட்டி விடுகிறார்கள்.

சமீபகாலம் வரை இந்த தொப்புள் கொடியின் பயன்பாடு அவ்வளவாகத் தெரியாமல் இருந்தது. ஆனால் அண்மைகால ஆய்வுகள் மூலம் இதன் எண்ணிலடங்கா பயன்கள் வெளிவந்துள்ளது.

சுமார் 75 நோய்களிலிருந்து குழந்தையை இந்த தொப்புள் கொடி காக்கும் என்று தெரிய வந்திருக்கிறது.

தங்கள் குழந்தைக்கு தங்களைவிட நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் என்றே ஒவ்வொரு பெற்றோரும் ஆசைப் படுவார்கள். படிப்பைக் கொடுக்கலாம்; பணத்தை சேர்த்து வைக்கலாம்; பட்டம், பதவி எல்லாவற்றையும் கொடுக்கலாம் ஆனால் ஆரோக்கியம்?

இதுவரை நம்மால் நம் குழந்தைகளுக்கு போஷாக்கான உணவு, நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள மருந்துகள் இவற்றைத் தான் கொடுக்க முடிந்தது, இல்லையா? அவர்களுக்கு நோய் நொடியற்ற எதிர்காலத்தை  நம்மால் அமைத்துக் கொடுக்க முடியுமானால் எத்தனை நன்றாக இருக்கும்?

குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் தொப்புள் கொடி இரத்தத்தையும், கொடியின் திசுக்களையும்  சேமித்து வைப்பதன் மூலம் இதை செய்யலாம். இவற்றை சேமிப்பது எப்படி என்பதைப் பார்ப்பதற்கு முன் இவை என்ன என்று பார்க்கலாம்.

தொப்புள் கொடி இரத்தம் என்பது குழந்தையின் தொப்புள் கொடியிலிருப்பது. கொடியை வெட்டியபின் வேண்டாம் என்று நாம் தூர எறியும் கொடியின் கெட்டியான பகுதிதான் திசுக்கள். இவற்றிலிருந்து கிடைக்கும்  ஸ்டெம் செல் எனப்படும் உயிரணுக்கள் பலவிதமான தீவிர நோய்களை குணப் படுத்தும் ஆற்றல் உடையவை.

ஸ்டெம் செல்கள் என்பவை நமது உடம்பின் அடிப்படை ஆதார நிலைகள். பலவிதமான திசுக்களாக உருவாகக் கூடிய தன்மை கொண்டவை இவை.  நமது உடம்பில் நோய் காரணமாக நாம் இழக்கும் செல்களை மறுபடி எண்ணிலடங்கா எண்ணிக்கையில் உருவாக்குகின்றன இந்த ஸ்டெம் செல்கள்.

இந்த தொப்புள் கொடி இரத்தத்தையும், திசுக்களையும் பாதுகாப்பதன் மூலம்  இரத்தப் புற்று நோய், தலசீமியா என்ற ஹீமோகுளோபின் குறைபாடு, இருதயம், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், சர்க்கரை நோய் ஆகியவற்றை குணப் படுத்தலாம்.

Umbilical Cord Stem Cell Banking என்ற ஒரு  அமைப்பின் மூலம் இந்த தொப்புள் கொடி இரத்தமும், கொடியின் திசுக்களும் பாதுகாக்கப்படும்.

குழந்தை பிறப்பதற்கு சில வாரங்கள் முன்பாகவே இதனை திட்டமிட வேண்டும். பிரசவத்தின் போது குழந்தையின் கொடி இரத்தம் குழந்தை பிறந்த 10 நிமிடத்திற்குள் சேகரிக்கப் படுகிறது. இது முடிந்தவுடன் தொப்புள் கொடியிலிருந்து 25 செ.மீ. அளவிற்கு கத்தரிக்கப்பட்டு ஸ்டெம் செல்களை பிரித்தெடுப்பதற்காக பத்திரப் படுத்தப்படுகிறது.

பிரித்தெடுக்கப்பட்ட ஸ்டெம் செல்கள் கடுங்குளிர் முறையில் பாதுகாக்கப் படும். தேவைப் படும்போது இவற்றை நோய் தடுக்கப் பயன்படுத்தலாம்.

இப்படி செய்வதால் குழந்தைக்கு எந்த வித தொந்திரவும் ஏற்படாது.

ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் குழந்தைக்கு என்ன பரிசு கொடுப்பது என்று தலையை பிய்த்துக் கொண்டு யோசிக்கும் பெற்றோர்களே! உங்கள் குழந்தையின் தொப்புள் கொடியை பாதுகாப்பதன் மூலம் ஆரோக்கியமான எதிர்காலத்தை உங்கள் குழந்தைக்குக் கொடுக்கலாம். இதைவிட சிறந்த பரிசு உண்டா?

சமீபத்தில் மருத்துவமனைக்கு சென்றபோது அங்கு கிடைத்த ஒரு புக்லெட் –டிலிருந்து தெரிந்த கொண்ட தகவல்கள் இவை. உங்கள் மருத்துவரிடம் இதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: பாத கமலங்கள் காணீரே!