கங்கா ஸ்நானம் ஆச்சு!

‘ஸ்ரீராமா ஜெயஜெயா…..சீதே மனோஹரா ….

காருண்ய சாகரா கருணாநீ ஜெயஜெயா…’

விடியற்காலை 5 மணிக்கே (!) எழுந்து பிள்ளை மாட்டுப் பெண்ணை மணையில் உட்கார வைத்துப் மேற்சொன்ன பாட்டைப் பாடி நலங்கு இட்டு…..தலைக்கு எண்ணெய் வைத்து…

முதலில் இந்தப் பாட்டை பாடி பிறகு இதன் தமிழ் பதிப்பை பாடுவது என் வழக்கம்.

மேலே சொன்ன பாட்டோட தமிழாக்கம் – சம்ஸ்க்ருத / தமிழறிஞர்கள் கோபிக்க வேண்டாம்.

முழுக்க முழுக்க வேடிக்கை!

சீராமா, மொ(மி)ளகாமா – சேர்த்தரைச்சா விழுதாமா

காய்ச்சினா ரசமாமா – கடுப்பு வலிக்கு இதமாமா!

ஒரிஜினல் பாட்டை பாடும் அதே ராகத்தில் இதைப் பாடலாம்!

கங்கா (காவேரி) ஸ்நானம் செய்து புதுசு கட்டிண்டு பட்டாசு வெடிக்க கீழே போனோம்.

மாடி வீட்டு ஸ்ருதி நான் வருவதைப் பார்த்துவிட்டு, ‘பாட்டி, ஹேப்பி தீபாவளி’ என்றது. 3 வயதுக் குழந்தை. அதை அப்படியே கட்டிண்டு, ‘ஹேப்பி தீபாவளி’ என்றேன்.

ஸ்ருதியின் அண்ணா ராகுல் வாசலில் வெடி வெடிச்சுண்டு இருந்தான். ஸ்ருதி காதைப் பொத்திண்டு, ‘எனக்கு வெடின்னா ரொம்ப பயம்’ ன்னு  எங்கிட்ட வந்து ஒட்டிண்டு நின்னுது.

குழந்தைகளை அணைப்பது என்பது எத்தனை பெரிய இன்பம்! நம் குழந்தையாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ‘உன்னைத் தழுவிடிலோ… கண்ணம்மா..உன்மத்தம் ஆகுதடி!’

என் பிள்ளை என்னிடம் ‘நீ ஆட்டம்பாம் வைக்கிறயா?’ என்றான்.

‘சரி’ என்று எழுந்தேன்.

‘பாட்டி…! நீ வெடிப்பியா?’ என்றது ஸ்ருதி.

‘ம்ம்ம்ம்…….’ என்றபடியே வெடி வெடித்து விட்டு வந்தேன்.

‘நீங்க செம பாட்டி….!’ என்றான் ராகுல்.

கங்கா ஸ்நானம் ஆச்சு!

பதிவுலக வாசகர்களுக்கும், பதிவாளர்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

 

 

கங்கா ஸ்நானம் ஆச்சு!” இல் ஒரு கருத்து உள்ளது

  1. உங்கள் ஆரம்பம் போல் எனக்கும் ஒரு பாட்டு தெரியும்
    காயெனுவாச்சா மனஸேந்த்ரியர்வா புத்தயாத்மனாவா ப்ரக்ருத்தி ஸ்வபாவன்

    இதை நான்

    காய் என்ன வாங்கினா ? கறி என்ன பண்ணினா ?
    எலை எங்க போட்டா ? எடுத்து என்ன வச்சா?

    என்று பாடி பரிகாசம் செய்வேன் எப்படி என் பாட்டு?

பின்னூட்டமொன்றை இடுக